Wednesday 28 October 2015

ஆலகால பட்சி


ஒரு வழிபோக்கனின் புன்னகையை விடவும்
எளிமையாக   இருந்தது
நேற்று இறுதியாக
நீ வன்மம் மறைத்து சிரித்தது


சுலபத்தில்
சரித்து விடுகிறாய்
கோட்டைகளை
இடிந்து விழுகின்றன
நம்பிக்கைகள்

உன் விழிகளின்
மொழி புரிவதில்லை
பாவை  அலைவுறும்  விசை 
அதிவேகமாக இருக்கிறது
இக்காலங்களில்
அது கொலை பழகுகிறது

நேற்றுன்னை
வேண்டாவெறுப்பாய் ஸ்பரிசிக்கையில்
நீலம் பாரித்த உடலை கண்டு
தோழி கேட்டாள்
சர்ப்பங்களோடும்  நீ  புணர்வாயோ
என்று

நீ விஷமாகிவிட்டாய்
சொற்களும் சிரிப்பும்
கூட
விஷம் பூசுகின்றன
என்னை போன்ற
மந்தையில் இருந்து தொலைந்த ஆடுகளையும் விடுவதில்லை
அது


நீ
ஆலகால பட்சி

No comments:

Post a Comment