Tuesday 20 October 2015

......................................................

யாரோ வருகிறார்கள் 
யாரோ போகிறார்கள் 
நான் வெறும் சாட்சியாக 
நீண்டநாட்களாக இங்குதானிருக்கிறேன் 

எனை வெறுக்கவோ
நேசிக்கவோ
ஒவ்வொருவருக்கு ஒரு காரணம் இருக்கிறது

இந்நாட்களில்
நான் பழகுவதெல்லாம் மௌனம்தான்
மேலும்
இங்கில்லாமல் போவது எப்படியென

என் பெயர் கேட்டவுடன்
அழைப்பை துண்டிக்கும்
இத்தனை புறக்கணிப்பை
இவ்வளவு நாளாக
எங்குமறைத்துவைத்திருந்தாய்

இத்தனை கசப்பை
உள்ளுக்குள் வைத்திருந்தா
என்னோடு சிரித்துப் பேசி
என் முத்தம் தின்றாய் ?
உடலதிரச்செய்கிறது உன் பாசாங்கு

கரையவே கரையாத சொற்களை
நீரின் ஆழத்தில் ஒளித்துவைத்திருந்து
இத்தனை நாளும் எப்படி
உன்னால் நேசித்தல் போல
நடிக்க முடிந்தது

கல்லெறிந்த குளத்தின்
மேற்பரப்பென
சலனமுற்றிருக்கிறேன்
நீ இன்னமும் கல்லெறிவதை நிறுத்தவில்லை

என்றாவதொரு நாள்
எதேச்சையாக சந்திக்க நேர்ந்தால்
அப்போதும் சிரித்தபடி கைகுலுக்குவாய்
நான் நன்கு அறிவேன்
வெறுப்பை மறைக்கும் சாத்தியமற்ற உன் முகத்தை

எதுவுமே நிகழாதது போல
நீ இருக்கிறாய்
தொட்டியில் இருந்து வெளியே குதித்துவிட்ட
மீனைப் போல நான் துடிக்கிறேன்
நீயோ கொள்ளை அழகென்று சிலாகிக்கிறாய்

நான் உனக்கு
சொல்ல விரும்புவதெல்லாம்
இன்றைய வானிலை
இப்படியே நீடித்துவிடாது

No comments:

Post a Comment