Thursday 1 October 2015

உன் மந்தகாசங்களை என்ன செய்வது

உன் சிரிப்பொன்றை
என் ஞாபக அடுக்குகளில்
பொத்திவைத்திருக்கிறேன்
என்னை பற்றிப்படரும் வேதனையாக
இம்மாலையில்
நசிந்து கிடக்கும் ஒளியில்
பெருகுகிறது துன்பம்

ஏதொன்றையும் நினைவில்
கொள்வதில்லை
என்ற  என் தீர்மானங்கள்
அர்த்தமிழந்து போகின்றன
யாருமற்ற என் தனிமை மாலையில்

வலிந்து வீசும் காற்றோ
மென்மையாய் தொடும் தென்றலோ
யாதொன்றும்
மாற்றப்போவதில்லை
உன் மீதான என் அபிப்ராயங்களை
அவை கெட்டித்து உறைந்து கிடக்கின்றன
குளத்தடியில் கல் போல

சொல்
உன் மந்தகாசங்களை
நான் என்ன செய்வது
நான் துன்பம் கொள்ளும்படியாய்
எனை தீயாய்  சூழும்
உன் மந்தகாசங்களை


என்ன தான் செய்வது

No comments:

Post a Comment