Thursday 1 October 2015

சீழ்பிடித்த உனததிகாரம்

நான் இங்கிருந்து 
வெளியேறிவிட வேண்டுமென்று 
துடிக்கிறாய் 

நான் 
உன் அதிகாரத்திற்கு பயந்து 
குளிர்கால பறவைபோல 
குறுகி அமர்ந்திருக்கிறேன் 
என் இந்த நிலையை 
நீ தேநீர் ருசித்தபடி 
விரும்பி ரசிக்கிறாய் 

என் வாழ்வின் மீது 
குறுக்கீடொன்றை செலுத்துகிறாய் 
அதிக ஆவலோடு 
என் மரணத்தை விரும்புகிறாய் 
யாரும் விரும்பிடாத 
என் முகத்தை 
யாரும் நேசித்திடாத 
என் குரலை 
யாரும் புணர்ந்திடாத 
என் உடலை 
ஆழக் குழிதோண்டி 
புதைக்க வேண்டுமென 
கால்கள் தரையினில்  பாவாமல் 
குதிக்கிறாய் 

உன் ஆரவாரங்களுக்கு நடுவே 
நானோ புழுவினை போல 
சுருண்டு படுத்திருக்கிறேன் 
நசுக்க நீள்கின்றன 
உன் கால்கள் 

என் இருத்தலை 
வெறுக்கிறாய் நீ 
என் முகம் 
மிக அறுவருப்பானதென 
உன் சுவரெங்கும் கிறுக்கி வைக்கிறாய் 
புடைத்த என் வயிறு 
அவலட்சணம் என்று உரக்க சிரிக்கிறாய் 
என் குறியின் அளவு பற்றி 
அதிகம் ஏளனம் கொள்கிறாய் 
உனக்கு கடைசி வரை 
புரியவேயில்லை 
உள்ளே எனக்கும் 
ஒரு சதைப் பிண்டம் உண்டென்று 

கைநழுவி தரையினில் 
வீழும் 
தண்ணீரைப் போல 
காலத்தை 
நீ நினைத்துக்கொள்கிறாய் 
உன் உயரம் மிகப்பெரியதென்றும் 
அளவிடமுடியாதது உன் அதிகாரமென்றும் 
உன் செங்கோலுக்கு கட்டுப்பட்டவைகள் 
காற்றும் திசைகளும் 
என்றும் 
நீ வீணே  இருமாந்திருக்கிறாய் 

காற்றின் பலத்தை 
நீ அறிந்ததில்லை 
திசைகளின் அடர்த்தியை 
நீ தெரிந்ததில்லை 
தீயின் கால்கள்  எப்படி பிடித்தாலும் 
சுடர்ந்தெரியும் 

எனதிருப்பை மறுக்க 
நீ யார் 
என் வாழ்வின் மீது 
குறுக்கீடு செலுத்த 
உன் வாள்  முனைகளுக்கு 
அனுமதி எங்கே 

என் மீது குறுக்கிடும் 
உன் அதிகாரத்தின் 
அளவுகோள்களை 
நான் உருவி எரிகிறேன் 
உடைந்து சிதறும் 
உச்சத்தில் உன்  மௌலி 

No comments:

Post a Comment