Tuesday 13 October 2015

காரணங்கள்

அது ஒரு சுப தினமாய் இருந்தது
உன்னை விட்டு நீங்கும்
முடிவை
நான் எடுத்த தினம்

நீங்குதளுக்கான காரணம்
சொல்ல வேண்டுமில்லையா


நீ
என்னிடம்
ஏற்படுத்தாத
மனச்சோர்வேதுமில்லை

எல்லா வேளையிலும்
உன்னை நினைத்திருந்தேன் 
நீயோ
முணுமுணுப்புகளோடு  என்னை புறக்கணித்தாய்

ஆகச்சிறந்த
என் அலாதி அன்பை
உனக்கே உனக்கென
விட்டு வைத்தேன்
ஒரு பூனையின் பாதம் கொண்டு
நீயும் பருகிவிட்டு
போட்டுடைத்தது என் மனதை அல்லவா

உன்னோடு இருக்கவே
பிடிக்கும் என்றேன்
ஒரு நடு நிசியில்
எனை ஆகாதவன் போல்
தள்ளிவைத்தாய்

சம்பங்கி மலர்களை
பிடிக்கும் என்றேன்
அவைகளை பிடுங்கி கசக்கி எறிந்தாய்
புல்லாங்குழல் இசைப்பது
இஷ்டம் என்றேன்
குழலை உடைத்து சிதைத்து சிரித்தாய்
உனக்கு வேண்டியதெல்லாம்
எனது  விருப்பங்களை
இல்லாமல் செய்வது

பின் எப்படி உன்னோடு
நான் நீடிக்க
நானே எனக்கு
போதுமானதாக இருக்கிறேன்
எனது ஏகாந்தம்
எனக்கு இனிதாக இருக்கிறது
எனது வாசலில்
உனது கால்தடங்களை
நான் விரும்பவில்லை
எனது கூரையின் மேல்
உனது கிரணங்களை
நான் அனுமதியேன்

போதுமா
நான் உன்னை நீங்கியதன் காரணங்கள்
நான் ஒரு சிறு குருவி
என்னை இறகு நீவி
கையில் ஏந்திக் கொண்டால்
காலம் முழுக்க அன்பை தருவேன்
உனக்கது வாய்த்திருக்கவில்லை
என்பது என் பிழையா 

No comments:

Post a Comment