Monday 28 December 2015

எஞ்சிய பிரியங்களோடு

நீ அருகில்லாத  வேளை
எப்படியோ
வந்துவிட்டன
சில வலிகளும் வருத்தங்களும்



நீ எனக்கு
கொடுத்திருக்கும்
தண்டனைக்கு
நான் தகுதியற்றவன்



என் நெஞ்சம்
வலியால்
நிறம்பித் தளும்புகிறது
நீயோ பொய்களை கொண்டு
குழலூதிக்கொண்டிருக்கிறாய்



என் பதற்றமிக்க மௌனம்
உடைந்துசிதறும்
நொடிக்காக காத்திருக்கிறாய்
உனக்கு வேண்டியதெல்லாம்
பிசுபிசுப்பான
என் சொற்களின் குருதி



நீண்ட காத்திருத்தல்களுக்குப்பின்
வந்து விழும்
ஒற்றை சொல் போல்
என் பிரியங்கள்
மதிப்பு வாய்ந்தவை
நீயோ
அவைகளை
போகிறபோக்கில்
உடைத்து சிதறடிக்கிறாய்



என் பிரியத்தின்
பிரமாண்டத்தை
உனக்கு பிரித்துக் காட்டும்
அவகாசம் எனக்கு கொடுக்கப்படாமலேயே
நிகழ்ந்துவிட்டது
நம் பிரிவு



ஒரு கனவை போல
பிறிதொருநாள்
நீ என்னை கடக்க நேர்ந்தால்
அப்போதும் பகிர்வேன்
எஞ்சிய என் பிரியங்களை 



நீ பெற்றுக்கொள்ளாத
மீதமான என் பிரியங்களை
கொண்டு
கட்டி எழுப்புவேன்
நமக்கே நமக்கென
சில கவிதைகளை 

No comments:

Post a Comment