வெளியே
மழையோய்ந்து விட்டது
இலைகளும் தளிர்களும்
புத்தம் புதிதாய்
காற்றில் ஆடுகின்றன
மயக்கும் இந்த
சீதோஷணத்தில்
உன்னை நினையாமல்
இருக்கமுடிவதில்லை
எங்கிருந்தாலும்
எனக்குள்
எட்டிப் பார்க்கிறாய் நீ
உன்னை புறந்தள்ளவோ
உன்னை மறந்து
மறுதலிக்கவோ
நொடிப்பொழுதும் நினைப்பதில்லை
இந்த நீர்ப்பறவைகளை பார்
மழையில் நனைந்து
எவ்வளவு குதூகளுத்துடன்
வாழ்வை வாழ்கின்றன
நம்மால்
அது ஏன் முடியாமல் போனது
என் காலத்தின் சுவரில்
சொட்டும்
ஒவ்வொரு மணித்துளியிலும்
உன் முகத்தையே
நான் பார்க்கிறேன்
என்றேனும் ஒருநாள்
நீ வந்து நிற்பாய் என
நான்
கதவுகளை அடைத்துச்சாத்துவதே இல்லை
உன் நினைவென்னும் வீணையில்
ராகமிசைக்கும்
நான்
பைத்தியக்காரனோ
மனம் பிரழ்ந்தவனோ
அல்ல
இப்பொழுதும்
உன்னை தூக்கிச் சுமக்கும்
உள்ளம் என்னிடம் உண்டு
மெலிதாய்
நான் சிரிக்கும்
புன்முறுவல் உனக்கு பிடிக்கும் என்பாயே
இப்போதெல்லாம்
நான் சிரிப்பதேயில்லை
தெரியுமா
கண்ணாமூச்சி ஆடும் இந்த
வாழ்விடம்
நான் தோற்றுக்கொண்டே இருப்பதும்
நீ காணமல் போவதும்
இன்னும் எத்தனை நாளைக்குத்தான்
காற்றிலாடும் அரளியென
நான் கண்டுகொள்ளப்படுவதேயில்லை
என்பதை அறிந்திருக்கிறேன்
இருந்தும்
நீ வந்து சூடிக் கொள்வாய்
என்ற நினைப்பில்லாமலில்லை
நீ சொல்
உன் நினைவின்
ஆழத்தில்
நான் இருக்கிறேனா ?
No comments:
Post a Comment