மழை தூவும்
நாளில்
எல்லாமுமே
அழகாகிவிடுகின்றன
ஈரத்தோடு பறக்கும்
குருவிகளுக்கு
தன் உடலொன்றும்
பாரமில்லை
பறவையின் சிறகு
சுமந்து அலைகிறது
துண்டு மேகத்தை
கொடிகளில் அமர்ந்தபடி
உடல்களை
சிலுப்பும்
மாடப் புறாக்களின்
உடல் மொழியில்
ஆயிரமாயிரம் ஓவியங்கள்
இலைகளில்
ஒட்டியிருக்கிறது
திட்டு திட்டாய்
மேகம்
ஈரமான தார்சாலைகளில்
உதிர்ந்துகிடக்கும்
மலர்களில்
மிளிர்கின்றன கூடுதல் அழகு
மழையில் நனைந்திடாத
பூக்களில்
என்ன எழில்
இருந்துவிடப்போகிறது ?
கண்ணாடி சன்னல்களில்
ஒழுங்கற்ற கோடுகளாய்
பொழியும் மாரிக்கு
மனதை கொடுக்கலாம்
மழைக்கு
பிந்தைய வானம்
தன் அடையாளம் இழந்தாலும்
அழகாக்கிவிடுகின்றது
அவனியில் அனைத்தையும்
மழை நாளை
போல
எல்லா நாளும்
இருந்துவிட்டால்
இந்த வாழ்வை
ஏன் நமக்கு பிடிக்காது
தூவும் வானத்தின்
சரங்களை
தாவிப்பிடித்து
வானம் போய்விட ஆசை தான்
என்னை போல் ஒருத்தனை
ஏற்றுக்கொள்ளுமா
மழைவானம்
No comments:
Post a Comment