Monday 28 December 2015

எஞ்சிய பிரியங்களோடு

நீ அருகில்லாத  வேளை
எப்படியோ
வந்துவிட்டன
சில வலிகளும் வருத்தங்களும்



நீ எனக்கு
கொடுத்திருக்கும்
தண்டனைக்கு
நான் தகுதியற்றவன்



என் நெஞ்சம்
வலியால்
நிறம்பித் தளும்புகிறது
நீயோ பொய்களை கொண்டு
குழலூதிக்கொண்டிருக்கிறாய்



என் பதற்றமிக்க மௌனம்
உடைந்துசிதறும்
நொடிக்காக காத்திருக்கிறாய்
உனக்கு வேண்டியதெல்லாம்
பிசுபிசுப்பான
என் சொற்களின் குருதி



நீண்ட காத்திருத்தல்களுக்குப்பின்
வந்து விழும்
ஒற்றை சொல் போல்
என் பிரியங்கள்
மதிப்பு வாய்ந்தவை
நீயோ
அவைகளை
போகிறபோக்கில்
உடைத்து சிதறடிக்கிறாய்



என் பிரியத்தின்
பிரமாண்டத்தை
உனக்கு பிரித்துக் காட்டும்
அவகாசம் எனக்கு கொடுக்கப்படாமலேயே
நிகழ்ந்துவிட்டது
நம் பிரிவு



ஒரு கனவை போல
பிறிதொருநாள்
நீ என்னை கடக்க நேர்ந்தால்
அப்போதும் பகிர்வேன்
எஞ்சிய என் பிரியங்களை 



நீ பெற்றுக்கொள்ளாத
மீதமான என் பிரியங்களை
கொண்டு
கட்டி எழுப்புவேன்
நமக்கே நமக்கென
சில கவிதைகளை 

Sunday 27 December 2015

அவமதிப்பு

சட்டையை கழற்றி
அணிவது போல
உனக்கு
மிக சுலமாக இருக்கிறது
என்னை அவமானப்படுத்துதல்



நீ என்னுள்
உருவாக்குகின்ற
பதற்றம்
என்னை பற்றிய அவநம்பிக்கையை
கட்டிஎழுப்புகிறது



சின்ன முகச்சுளிப்பில்
சுக்குநூறாய்
உடைத்தெறிகிறாய்
மனதை



உன் அவமதிப்பின் நகம் கீறி
வழியும் குருதியில்
பின்னப்பட்டிருப்பது
என் ஒழுக்கமான நடத்தையும் தான்



கண்டும் காணதது போல
என் கதறலை
நோக்கமறுக்கிறாய்
கேட்டும் கேளாதது போல
என் கேவலை
உதாசீனப்படுத்துகிறாய்



நான் உனக்கு கையளித்த
பிரியங்களை
வேண்டாமென உதறிவிட்டாய்
உனக்கு பிரியங்களை
பிடிக்கவில்லையா
அல்லது
பிரியமாய் இருப்பவர்களையே பிடிக்கவில்லையா ?



குழந்தை மனசுனக்கு
எப்போதுதான்
புரிந்திருக்கிறது
கால்பந்தினை போல்
எளிதில் எட்டியுதைக்கிறாய்



எனக்குள்
தேங்கிக்கிடக்கும்
அழித்தகற்றவியலாத
உன் புறக்கணிப்பின் சித்திரங்கள்
என்றென்றைக்குமாய்த்
என் தனிமையின் துயரங்களை
தின்றபடி இருக்கும்

Wednesday 16 December 2015

பிரிவோம்

உன்னோடிருந்த
கடந்த கால நாட்களை
நினைத்துகொள்கையில்
நினைவுக்குள்
வலி பீறிடுகிறது

 
எவ்வளவு பொய்கள்
அத்தனையும் பொருத்திருந்தேன்
கேட்கச்சகிக்காத எத்தனையோ
சொற்களை
கேட்டிருந்திருக்கிறேன்



சிக்கல் மிகுந்ததாய்
மாறிப்போன உறவுக்குள்
உன் நிமித்தம்
நான் நீடித்திருந்தேன்



இத்தனைக்குப்  பிறகும்
நீ என்னை நிராகரித்திருப்பது
என் நெஞ்சை வலியால் நிரப்புகிறது



இவ்வளவு பாசாங்கை
எப்படி இத்தனை நாளாய்
உள்ளுக்குள் மறைத்துவைத்திருந்தாய்

 
கனக்கும் உன்
அழுகிய சொற்கள்
மனதை சிதைவுறசெய்கின்றன


என் கேவல் மொழியை
உனக்கு தெரியவில்லை
என் துருவேறிய மௌனம்
உனக்கு புரியவில்லை
இப்போதும்
என்னிடம் உன்னால்
எப்படி புன்னகைக்க முடிகிறது



நீ நீயாகவும்
நான் நானாகவும்
அவர் அவர் நிலைக்கு
மீள்வோம்
நமதிடையே எதுவுமே
நிகழாதது போல



எந்த சலனமுமின்றி
கைகுலுக்கி பிரிவோம்
அழுகிய நாற்றத்தோடு  சேர்ந்திருப்பதைவிடவும்
பிரிந்துவிடுவது உத்தமம் இல்லையா




Tuesday 15 December 2015

தொடரமுடியாத வாழ்வு

நான் விரும்பும் தொலைவிற்கு
என்னால் வெளியேரிச்செல்லமுடியவில்லை



முரணான
இந்த வாழ்வின்
எதிர் எதிர் திசைகளில்
பயணப்படும்
என் மனம்
ஒடுங்கி மீள்கிறது
திடுக்கிடவைக்கும் உன் நிராகரிப்பால்



நீ என்னுள் பிரவேசித்த
நாளின் ஞாபகம்
வெற்றிடங்களை உருவாக்கத்தவறவில்லை



இன்னும் கூட
மீதமிருக்கின்றன
என் மீதான்
உன் வெறுப்பின் மிச்சங்கள்



என் நினைவில்
நெடுங்காலமாய் புதையுண்டிருக்கிறது
நீ இல்லாமல் போய்விட்ட துயரம்



யாருமில்லாத வெளியில்
யாரோ விட்டுச்சென்ற
அலைக்கழியும் குரலென
நான் சோர்ந்துபோய்விட்டேன்



எனதிந்த தனிமையுடன்
மிக நிராதரவான நிலையில்
ஒதுங்கிக்கிடக்கிறேன் 
இங்கிருந்து வெளியேறும்
வழிகளை ஆராய்ந்தபடி



எனது தனிமையின்
நிறம்
ஆகாயத்தின் கரையலாம்



எனது தனிமையின்
முடிவு
மரணத்தில் சேரலாம்



நீ இல்லாமல் போய்விட்ட
எனதிந்த தனிமையைவிடவும்
மரணம்
பற்றிக்கொள்ள ஏதுவானது எனக்கு

 
பாதியில் தடைபட்டுவிட்ட
கனவினைப்போல
தொடரமுடியவில்லை
இந்த வாழ்வை



கொஞ்சம் கொஞ்சமாக
நைந்து கிழிந்துபோகக்கூடும்
நீ இல்லாத
எனதிந்த வாழ்வு



என்னிடமிருக்கும் சிறகுகள்
பறப்பதற்கில்லை

நிலாவினில் கிடப்போம்


நேற்று

நாம் இருந்தோம்

பொதிகையின் மடியினிலே

 

உனக்கு பிடித்தமானவைகள்

எனக்கும் பிடித்திருந்தது

உனக்கு ஆகாதவைகள்

எனக்கும் அப்படியே ஆயின

 

பிரியங்களால்

ஒருவரையொருவர்

தழுவிக்கிடந்தோம்

சிந்திய முத்தங்களில்

வண்டுகள் ரீங்கரித்தன

 

உனது பயணம்

எனது பயணம் ஆனது

உனது பாதை

என்னை நோக்கி நீண்டது

 

 

இன்று

நாம் இருக்கிறோம்

பிரிவின் கரங்களிலே ...

 

தள்ளி நின்று

சொல்கிறாய்

என் அன்பு அபத்தமென்று

 

பிரிவின் நகம் கீறி

வழியும் குருதியை

நக்கி ருசிக்கிறாய்

 

நானோ வலிக்கிறது என்கிறேன்

நீயோ

என் கேவல்

உனக்கு கேட்கவில்லை என்கிறாய்

 

நமதிடைவெளியில்

எதுவுமே நடக்காதது போல

வெகு இயல்பாக

நேற்று தொலைபேசினாய்

எனக்கோ

பிரிவின் துயர் வாடை

மூச்சை நிறுத்தியது

 

உன் நலம் விசாரிப்புகள்

என்னை

காயப்படுத்தின

உரையாடலின் இறுதியில்

நீ உதிர்த்த புன்னகை

என் மீது

நீ செலுத்திய வன்முறை

 

என்னால்

எளிதில் உன்னை

மறக்கமுடியவில்லை

முன்பு பகிர்ந்த

முத்தத்தின் தடயங்கள்

வியர்த்து வழிகிறது

 

உன் நினைவின் தாழ்வாரத்தில்

அரளியென வேர்பிடித்திருக்கிறேன்

நீயோ

உன் அசட்டையான பார்வையால்

வெந்நீர் ஊற்றுகிறாய்

 

நமக்கு ஏன்

இப்படி ஆனது

நான் 

தூக்கம் தொலைத்து

துயரம் கொண்டது

உன் அவமதிப்பால் தானே

 

நான்

தரை மோதி அழுகிறேன்

குலுங்கி உடைகிறது கண்ணீர்

 

என்றாவது ஒருநாள்

நீ என்னை புரிந்துகொள்வாய்

என்ற என் நம்பிக்கை

என் புவனத்தை சுழற்றுகிறது

 

கேவியழுது கேட்கிறேன்

என்

அன்புனக்கு வேண்டாமா ?

 

 

எனக்கு நம்பிக்கை இருக்கிறது

மீண்டும் நாம் இருவரும்

நிலாவினில் கிடப்போம்

அன்று

வானின் நட்சத்திரங்கள்

நம் இருவரின் மீதும்

கவி பாடும்

உன்னை அடைதலென்பது ....

தேடித் தேடி
ஏமாற்றங்களோடு  திரும்புதலென்பது
இந்நாட்களில்
எனக்கு
இயல்பாகி இருக்கிறது



நீ இருக்கும்
திசைகளை
எனக்கு திறக்க தெரியவில்லை



ஒரு பறவையென
உன் கிளையினில்
வந்தமரும்
கொடுப்பினை எனக்கில்லை



துயரடர்ந்த இந்த வாழ்வின்
முடிச்சுகளை
அவிழ்க்கத்தெரியாத
நான் எப்படி
உடையும் உன் மௌனத்தை
மொழிபெயர்ப்பது



என்னை தவிர்க்க முயலும்
உன் குரலை
பற்றிக்கொள்ள விழையும்
நடுங்கும் என் கரங்களுக்கு
ஏதொன்றும் வாய்ப்பதில்லை



நீ கைநழுவிப்போவாயோ
என்ற
தாளவியலாத பதற்றத்தில்
சீர்குலைகின்றன
என் தவிப்புகள்



நிராகரிப்பின் விஷம் தீண்டிய
என்னை
யாருக்கு அடையாளம் தெரியாவிட்டாலும்
உனக்கு தெரியுமில்லையா ?



பிரவேசிக்க முடியாத
காலத்தின் ரகசியம் பொதிந்தது
என் வெளி



யாராலும்
எளிதில் நெருங்கிவிட இயலாத
தூரத்தில்
இருக்கிறது
நீ எனக்கு பரிசளித்திருக்கும்  தனிமை



தனிமையில் இருப்பது என்பது
வெறுமனே 
தனித்து இருத்தல் மட்டுமல்ல

Friday 11 December 2015

எஞ்சிய நம்பிக்கைகள்

கைபேசியில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும்
உனது தொலைபேசி இலக்கம்
வேறெதையெதையோ நினைவுறுத்தியபடி
என்னைத் தவிர்க்க முயல்கிறது



உன்னிடமிருந்து அழைப்பு
இன்று வரும்
இன்றில்லையேல் நாளை
நாளையும் இல்லையானால்
பிறிதொருநாள்
என்று எஞ்சிய
என் நம்பிக்கையில்
நகர்கிரதென் வாழ்வு



உன் குரல் கேட்டிடாத
ஒவ்வொரு கணமும்
நான் நானாக உணர்வதில்லை



என் ஏனைய
பகல் பொழுதின் தவிப்புகளிலிருந்து
உனது ஒற்றை சொல் மட்டுமே
விடுவிக்க இயலும்



நான் உனக்கு வேண்டாம்
என்று நீ முடிவெடுத்தபின்னால்
புறக்கணிப்பின் விஷம் தீண்டிய
எனக்கு துணையிருப்பது
உன் பெயர் சுமந்த கைப்பேசிமட்டுமே



பகல் பொழுதிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட இரவு
கொண்டுவருகிறது
எல்லா துயரங்களையும்
அவ்விரவில்
எனக்கு துணையிருக்கும்படி
மன்றாடுகிறேன்
தூங்கிவிட்ட தொட்டிச்செடியிடம் 

 
உன் நினைவாக என்னிடம்
இருக்கும் மேல்சட்டை 
உயிர்ப்பின் வெம்மையோடு
என் அலமாரிக்குள்
உன் நினைவுகளை
அடைகாக்கிறது 



நீ எப்பொழுது என்னை அழைப்பாய் ?
எனக்குத் தெரியாது
நீ எப்பொழுது உன் குரல் கொண்டென்னை தீண்டுவாய் ?
எனக்குத் தெரியாது
நீ எப்பொழுது என் தவறுகளை மன்னித்து
நெஞ்சோடு அணைத்துக்கொள்வாய்
எனக்குத் தெரியாது
நீ எப்பொழுது
தீப்பிடித்துக் கொண்ட என் ஆகாயத்தில் நீரூற்றுவாய்
எனக்கு தெரியாது



ஆனால்
எனக்கு ஒன்று தெரியும்
நான் உன்னை முகம்முகமாய்
சந்திக்க நேர்ந்தால்
எழில் புன்னகையோடு
ஒரு பறவையை போல
என் தோளில்வந்தமர்வாய்
என்ற நம்பிக்கை மட்டும்
புத்தகத்தினுள் மயிலிறகாய்
எனக்குள்  ஒளிந்திருக்கிறது

Saturday 31 October 2015

புழுக்கம்

போர்வை வேய்ந்த
என் உடல் புழுக்கத்தின்
வெப்பத்தினை
மின்விசிறியின் துணைகொண்டு
வெளியேற்றுவேன்

மழைக்கிட்டாத ஏமாற்றங்களோடு
இளவேனிர்காலத்து வெயிலிடம்
இல்லை
எனக்கு எந்த குற்றசாட்டுகளும்

புழுங்கி வழியும்
வேர்வையின் பிசுபிசுப்பில்
காலநிலையின் பிரதிபளிப்பு

நீ இல்லாத
இவ்வேளைதனில்
உள்ளே புழுங்கிடும்
மனப்புழுக்கத்தை
யாரிடம் சொல்வேன் நான்

எனது பருவத்தின் மீது
திரண்டு பெருகும்
வெயில்
நினைவுக்குள் நுழைந்துகொள்கிறது
நீயாக

வெகு அமர்த்தலாக
காயும் இந்த சூரியனிடம்
கிழிபடும்
என் மழைக்கால பக்கங்கள்
இந்த அசௌகரியங்களுக்கு
பழகிவிட்டேன் நான்

பின்னிரவின் மூடுபனி
ஏற்படுத்திய
உதட்டு வெடிப்புகளில்
பகலின் புழுக்கத்தை பூசிவைத்து
காத்திருக்கிறேன் உனக்காக 

நீ வராமல்
போனதில்
எனக்கேற்பட்ட 
சங்கடங்களினால்
நான் வெயில் போல
காய்ந்து விடுவிப்பேன்
அனல் மூச்சினை
அதில் கருகி  முடியும்
காலம் 

என்றாலும்
புழுக்கங்களை  தவிர
என்னிடம் இல்லை
யாரிடமும் சொல்ல
ஒரு செய்தியும்

Thursday 29 October 2015

வாழ்க்கை

தொடரவியலாத வாழ்க்கையை
தொடரத்தான் வேண்டியிருக்கிறது
சில நிர்பந்தங்களினால்


இங்கே
முழுக்க சரியென்றும்
முழுக்க தவறென்றும்
எதுவுமில்லை

பூரணமில்லாத வாழ்வில்
எதை கொண்டு
நிறைக்க

சிறகிழந்து
வெறும் தடயங்களோடு
வாழ்பவனுக்கு
போக்கிடம் தான் ஏது

புதிதாக
எதையுமே கொண்டுவருவதில்லை
சமயத்தில்
இந்த வாழ்க்கை
ஆயினும்
வாழ நேர்கிறது
அது எல்லோர்க்கும்
நிகழும்
விசித்திரம்

எதை எதையோ
நினைவூட்டி
அச்சமூட்டிடும்
வாழ்விடம்
நாம் அடங்கி தஞ்சமடைய
வலுவான காரணங்கள்
இருப்பதில்லை

சாகப் பயந்தவர்களுக்கு
வாழ்க்கையொரு வேதாளம்
சாகத்துணிந்தவர்களுக்கு
வாழ்க்கை வெறும் கால் தூசு
சாவை அறியாதவர்களுக்கோ
வாழ்க்கையொரு  பெரும்புதிர்

வெற்று  சமாதானங்களாலும்
புலம்பல்களாலும்
நிரப்பப்பட்ட
குப்பைதொட்டிதானே
வாழ்க்கை

இதோ
பக்கத்தில் இருக்கிறது மரணம்
ஆயினும்
தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது
மாய  வாழ்க்கையை

வாழ்க்கை
பொய்
மரணம்
நிஜம்

வாழ்வு சுமையாகும்
தருணங்களில்
மரணம்
கனவாகிறது 

இறுதியில்
எல்லோரும்
சாகத்தான்
வாழ்கிறோம்

இறந்துபோதல் என்றால்
எல்லாவற்றையும் விட்டு
எங்காவது நீங்கிப்போதல் இல்லையா

இங்கிருந்துகொண்டிருக்கிறேன்
என்பது எவ்வளவு பொய்
இனி இங்கிருக்கமாட்டேன் என்பது தான்
எவ்வளவு நிஜம்

தொடரவியலாதபோதும்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது
வாழ்க்கை
அதன்
ஆயிரமாயிரம் புதிர்களோடும்
எண்ணிக்கையற்ற மற்றும் பதில்களற்ற கேள்விகளோடும்

வலி
வாதை
கேவல்
கண்ணீர்
இவையனைத்தும்
உள்ளடக்கியது
நிதர்சனம்

நான் என்பது
நிஜமற்ற பொய்
மரணம்
மெய்யான உண்மை

எது எதில்
தொலையப்போகிறது

Wednesday 28 October 2015

ஆலகால பட்சி


ஒரு வழிபோக்கனின் புன்னகையை விடவும்
எளிமையாக   இருந்தது
நேற்று இறுதியாக
நீ வன்மம் மறைத்து சிரித்தது


சுலபத்தில்
சரித்து விடுகிறாய்
கோட்டைகளை
இடிந்து விழுகின்றன
நம்பிக்கைகள்

உன் விழிகளின்
மொழி புரிவதில்லை
பாவை  அலைவுறும்  விசை 
அதிவேகமாக இருக்கிறது
இக்காலங்களில்
அது கொலை பழகுகிறது

நேற்றுன்னை
வேண்டாவெறுப்பாய் ஸ்பரிசிக்கையில்
நீலம் பாரித்த உடலை கண்டு
தோழி கேட்டாள்
சர்ப்பங்களோடும்  நீ  புணர்வாயோ
என்று

நீ விஷமாகிவிட்டாய்
சொற்களும் சிரிப்பும்
கூட
விஷம் பூசுகின்றன
என்னை போன்ற
மந்தையில் இருந்து தொலைந்த ஆடுகளையும் விடுவதில்லை
அது


நீ
ஆலகால பட்சி

நானின்றி ...

எப்போதும்
நான் இல்லாமலேயே
நிகழ்ந்துவிடுகின்றன
என் குறித்த
எல்லா காரியங்களும்

நான் தொடுவதற்கும்
ஸ்பரிசித்தது முடிப்பதற்கும்
முன்பே
காரியங்கள்
சித்தி அடைந்திவிடுகின்றன

என்றாகிலும்
நான் உடனிருக்க
முயல்கிறேன
எனை தவிர்த்தே
அரங்கேறுவதில்
அத்தனை முனைப்பு

நானின்றி
நிகழ்கிறது
என் சுவாசம்

நானின்றி
நிகழ்கிறது
என் காலம்

நானின்றி
நிகழ்கிறது
என் வாழ்வு

நானின்றி
விரிகின்றன
என் திசைகள்

நானின்றி
உதிக்கிறது
என் சூரியன்

நானின்றி
சிவக்கிறது
என் அந்தி

எனக்கும்
ஏனயவைகளுக்குமான
இடைவெளியில்
இருக்கும்
உலகோ
மிகப்பெரிது

நான்
அனுமதித்து
கொண்டுதான் இருக்கிறேன்
என் காலம்
நான் இன்றி சுழல்வதை
மற்றும்
என் சுவாசம்
நானின்றி நிகழ்வதை

Tuesday 27 October 2015

உனது நினைவின் வழி

நீ அருகில்லாத வேளைகளில் என்னுள் பற்றிப் படர்கின்றன உன் நினைவுகள் எனதறையில் நிறையும் வெயில் போல அனுதினங்களின் கொடுங்கசப்புகளை விழுங்கிச்செரிக்கவும் எங்கோ தூரத்தில் நிகழும் துர் மரணத்தின் நெடியை இல்லாமல் செய்வதும் கூட உன்னுடைய நினைவுகள் தான் பின்னிப் பிணையும் சர்ப்பங்கலென உன் நினைவுகள் எனக்குள் கிளர்த்துகின்றன ஆயிரமாயிரம் மோகத்தின் முடிச்சுகளை அனலென தகிக்கும் என் தாபத்திற்கு உன் நினைவுகளும் போதுமானதாக இல்லை உனது நினைவினில்
அந்தியில் தோட்டத்துக்கு வந்து சென்ற ஊர்க்குருவியை பார்க்காமல் போனதில் எனக்கு வருத்தங்களில்லை எனது அசௌகரியமான பயணங்களில் கீதமிசைத்து இலகுவாக்குவது உன் நினைவுகலன்றி வேறென்ன எனது ஆற்றொனா பெருந்துயரங்கள் ஆறுதலடைவது உனது பிரியங்களின் அருகாமையில் தான் உனது நினைவுகளின் வழியே பாயும் என் ஜீவ நதிக்கு இருகரைகளும் நீ மட்டுமே தான் இந்த இரவில் இரக்கமின்றி காயும் நிலவு உண்டாக்குகிறது கொடும் தனிமையை நான் அதை உன் நினைவின் துணை கொண்டு நிரப்பப் பார்க்கிறேன் ஆயினும் அது போதுமானதாயில்லை

Monday 26 October 2015

காற்றோடு போவேன்

பகலின் சுவரில்
வெயில் ஒழுகி ஒழுகி ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறது வெறுமையான பகல் நேரம் சூன்யமானது அது நினைவுகளை கிளர்த்தி கிளர்த்தி நெஞ்சினை கொல்லும் நேற்று பேருந்து பயணத்தில் பார்த்திருந்தேன் ஒரு குழந்தை சிரிக்கிறது கை நீட்டுகிறது முகத்தை பொத்திக்கொள்கிறது பின் மீண்டும் சிரிக்கிறது ஒரு குழந்தையாக இருத்தல் அவ்வளவு சுலபமில்லை வளர்ந்தபிறகு அந்தக் குழந்தை உன்னை நினைவுபடுத்த தவறவில்லை நீ குழந்தை தான் என் முத்தத்திற்கு அடம்பிடித்த வேளையில் பசிக்கிறது என என் அடிவயிற்றை கட்டிக் கொண்ட பொழுதுகளில் உறங்கும் போது கால்களை என் மேல் படர்த்தி உறங்குகையில் எல்லாம் நீ குழந்தையாகத் தான் இருந்தாய் பின் எப்போது நீ துரோகம் பயின்றாய் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை சலனமேயின்றி அன்றொருநாள் கேட்டாய் "நீ யார் இன்னும் என்னோடு இங்கிருக்க " நான் பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினேன் எனக்கு உயிர் வரை வலித்தது நான் அழுதபடி வெளியேறிய அந்த இரவு இன்னும் கரைந்துவிடாத கனவாக என்னை இன்னமும் அழவைக்கிறது நீ காற்று வெளிகளில் கேசம் உலர்த்துகையில் நான் கண்ணீர் உலர்த்தினேன் நீ விடியலின் மீதேறி சூரியன் பார்க்கையில் நான் இரவுக்குள் அமர்ந்தபடி நட்சத்திரங்களோடு அழுதிருந்தேன் நீ மேட்டிமையானவைகளோடு புழங்கிக்கொண்டிருக்கையில் நான் என்னிலும் தாழ்ந்தவற்றோடு சிநேகிக்க தொடங்கினேன் எனக்கு இப்படி இருக்க பிடித்திருக்கிறது ஒரு கனவினை போல நீ என்னை மூடியிருந்த காலம் பழங்கதையாகிவிட்டது ஒரு மாமழை போல நீ என்னை நனைத்திருந்த பொழுதுகள் ஈரம் உலர்ந்துவிட்டன ஒரு பெரு வெள்ளம் போல நீ என்னை சூழ்ந்திருந்த நிமிடங்கள் மிச்சமின்றி வடிந்துவிட்டன இனி நம் உறவில் என்ன இருக்கிறது வெற்றிடங்களை தவிர உதிர்ந்த இடத்தில் மீண்டும் பூக்குமா என்ற அச்சத்தோடு நடுங்கியபடி நிசப்தம் நிலவும் என் நுரையீரல் வலியோடு சுவாசிக்கிறது ஒன்று மட்டும் சொல்கிறேன் என்றாவது ஒரு நாள் என் நிழல் தேடுவாய் அன்று நிச்சயம் உன் கைக்கு சிக்காமல் காற்றோடு போவேன் நான் காற்றோடு போவேன்

Sunday 25 October 2015

கைவிடப்பட்டவர்களின் கதி



என் தோட்டத்து மரத்தில்
வந்தமர்ந்த குருவி
என்னை பொருட்படுத்தியேயிராதபோதும்
இல்லை ஒரு வருத்தமும்

வாஞ்சையோடு அழைக்கையில்
முகம் திருப்பிக் கொண்ட
பூனைக் குட்டியோடு
இல்லை ஒரு பிணக்கும்

காற்று வேண்டி
தோட்டத்தில் அமர்ந்திருக்கையில்
என்னை நிரகரிக்கும்படியாக
ஆடாது அசங்காது
நின்ற மரங்களின் மீது
இல்லை ஒரு கோவமும்

நான் தூங்கும்போது பொழிந்திருந்துவிட்டு
கண்விழித்ததும் காணமல் போன
மழையின் மீது
இல்லை ஒரு குற்றச்சாட்டும்

என் வருத்தமெல்லாம்
என் ஏக்கமெல்லாம்
நீ என்னை பொருட்படுத்தாததும்
நீ என்னை நிராகரித்ததும் தான்
உயிர் வலிக்க
தரையடித்து அழச்செய்கிறது

காற்றில் தன்போக்கிர்க்கு
பறந்துபோகும்
உதிர்ந்த இலையென ஆனேன்
கைவிடப்பட்டவர்களின்  கதியெல்லாம் இதுதானே

எனது கவிதை

காற்றும் மழையும் 
நான் கொஞ்சி மகிழ்ந்த அணிலும் 
அறியும் எனது கவிதையை 

எதிலிருந்தும் 
எழுதாமல்
என்னிலிருந்து
தன்னைத் தானே எழுதிக்கொள்ளும்
என் கவிதைகள் அறியும் என்னை

எனக்கும் கவிதைகளுக்கும்
இடையே ஒன்றுமில்லை
நேசமாய் தழுவிக்கொள்ளும்
காற்றைத் தவிர

உனக்கோ
என்னையும் தெரியவில்லை
என் கவிதைகளையும் தெரியவில்லை

கண்ணீர் தொட்டு
காற்று எழுதும்
என் கவிதைகள்
எப்போதும் சரணடையாது உன்னிடம்
என் கவிதைக்குள்
நான் என்பது நான் மட்டுமே
நீ ஒருபோதும்
அதன் உலகமாகமாட்டாய்

Friday 23 October 2015

உனது விசுவாசம்

நடு  நிசிக்கு
பிந்தைய
இரவுகளில்
பயணிக்கிறேன்
பாதாளத்திற்கு
கருமையடைந்த  அதன்
சுவர்களோ
எனை அச்சப்படுத்துகின்றன

மீண்டு வருகிறேன்
நிசி தாண்டி பகல் பொழுதிற்கு
அங்கே
காத்திருப்பதோ
விசுவாசமற்ற
உனதுறவு

அதன் திசைகளில்
வியாபித்திருப்பதோ
சூழ்ச்சிகளும்
ஈரமற்ற காட்சிகளுமே

நான்
நடுங்கிக்கிடக்கிறேன்
அதை
நீயோ
அல்லது
இந்த வாழ்வோ
சட்டை செய்ததாய் தெரியவில்லை

என்னை மீறி
வேகமாக
எங்கோ கடந்து போய்கொண்டிருக்கிறது
இந்த வாழ்க்கை

நீ வினவுகிறாய்
விசுவாசமாய்
இருத்தல் என்றால் என்ன என்று
நான் உனக்கு எப்படி விவரிப்பேன்
உண்மையாய் இருக்கும் நிலையை

என் முகத்துக்கு நேரே
பேசு
என் கண்களை பார்த்து
சிரி 

எல்லா நிலையிலும்
எனை நம்பு

நீரள்ளி  அருந்தசொன்னால்
குடி

நெருப்பள்ளி தின்னசொன்னால்
தின்று தீர்

வலிக்கிறது என்று நான் சொல்லுமுன்பே
என்  வலியுணர்

வழியும் என் கண்ணீரை
உண்மையென நம்பி
உள்ளங்கையில் பொத்திக்கொள்

என் உடல்சூட்டில்
துளி துளியாய்  நம்பி கரைந்துவிடு

என் காலடிசுவடுகளின்
பாதையை தேடிவந்து 
ஒழுக்கத்தை சந்தேகிக்காதே
ஒருபோதும்
எனது நிர்வாணத்தில்
களங்கம் காணாதே

நான் அழுதிருக்கும் வேளையில்
எனது விரல்களுக்குள்
உனது
விரல்களை நுழைத்து
இறுக்கி அணை
உண்மையாய்  இருப்பதை
வேறெப்படி நான் விவரிக்க

இது தான்
இப்படி இப்படியாக இருப்பது தான்
விசுவாசம்

நான்
விசுவாசித்திருந்தேன்
உனது
உறவை
உனது
ஆன்மாவை
மற்றும்
உனது
கண்ணீரை

ஆனால்
நீயோ
என்னிடம் வேண்டியது
மிரட்டல் தொனியில்
சில உத்திரவாதங்களை
மற்றும் சில சந்தேகங்களை

எப்படி
பொருந்திப்போகமுடியும்
இப்படியொரு உறவுக்குள்

உனதுறவு
எனக்கு
பூட்டிவிட்ட சிறகுகளை
நான்
இரக்கமின்றி துண்டித்துக்கொண்டேன்
உன் மீதான
எனது விசுவாசங்களை
காற்று வெளிதனில்  பறக்கவிட்டுவிட்டேன்

நான் இப்போது
உணர்வதோ
கனமற்ற ஒரு மேகத்தை போல