Thursday 1 October 2015

ஞாயங்கள்

ஞாயப்படுத்த முடியாதவைகளால்
நிறைந்திருக்கிறது
என் அலமாரி

என் தர்க்கங்களின் வழி
எழும் ஞாயங்கள்
சவலைப்பிள்ளைகள்

அவைகளின் வாக்குவாதங்கள்
இங்கே யாருக்கும்
புரிந்ததில்லை

தர்க்க ஞாயங்களும்
தர்ம ஞாயங்களும்
நிறைந்த என் அலமாரியில்
ஒன்றைக் கூட
நீங்கள் ஞாயப்படுத்த இயலவில்லை

எவர்மீதும் குறுக்கீடு செய்யாத
பாவனைகளுடன்
நீளும் எனது ஞாயங்கள்
உங்களுக்கு அசௌகரியங்களை தருவது பற்றி
எனக்கு கவலையொன்றுமில்லை

என் அந்தரங்கத்தின்
வழி பயணிக்கும்
ஞாயங்களின் மீது மட்டும் அதிக கவனமுடன்
இருக்கிறதுங்கள்  துலாக்கோல்

எனது ஞாயங்களின்
கழுத்தை நான்  தடவிக்கொடுக்கையில்
எங்கிருந்தோ முளைக்கிறது
உங்களுக்கு கொடுங்கசப்பு

நான் வஞ்சிக்கப்படுதல்
பற்றி உங்களுக்கு அக்கறையில்லாத பொழுது
இது யாருடைய கரு
என்ற அக்கறையில்லாத பெண் போலவே
நான் இருந்துவிட்டுப் போகிறேன்
உங்கள் தயவுகள் வேண்டாத
என் ஞாயங்களின்  துணையோடு

எல்லா நேரத்திலும்
ஞாயங்கள் வேண்டுவதில்லை
தனக்கொரு விளக்கத்தை
மேலும்
தனக்காக ஓங்கி ஒலிக்கும் ஒரு குரலை



No comments:

Post a Comment