Thursday 1 October 2015

..........................................

மழையில்லா
இப்பொழுதில்
வலுவாக காற்றில்
ஆடுகின்றன
பச்சைக்  கொடிகள்

இம்மாலை
நினைவுகளை கிளர்த்துகிறது

அன்று
என் பெயரை
கேட்டவுடன்
தொலைபேசி அழைப்பை துண்டித்தாய் நீ
மறுபக்கம் உயிர் வலிக்க
அழுதேன் நான்

அன்று
இனி இந்த உறவு
நீடித்திருக்க
முகாந்திரம் இல்லையென
புரிந்ததெனக்கு


உன்  குரல்
வசீகரம் எனக்கு
அது ஒரு போதை
நீ எனக்கு
கடைசி வரை அதை கொடுக்காமல்
போனதில் தான்
என் வலியெல்லாம் சேர்ந்து கொண்டு
தரை மோதி அழச் செய்கிறது

நீ ஏன் அப்படி செய்தாய்
என்று கேட்கக் கூட
எனக்கொரு சந்தர்ப்பம்
தரவில்லை
பின்
வேராரிடம்  கேட்பேன்

நீ என் அன்பில்
நம்பிக்கையிழந்துபோனாயா

காற்றோடு பேச மறுக்குமா
பூங்கொடி
கரையோடு புழங்க மறுக்குமா
நதியலை
நீ மட்டும் ஏன்  நீங்கிப்போனாய்
என்ற
என் கேள்வி மட்டும்
தொக்கி நிற்கிறது
தெற்கே வீசும் காற்றில்

உனக்கு நினைவிருக்கிறதா
அன்றொருநாள்
மாடத்தில் கூடி இருந்தோம்
அந்த இரவை
நினைக்கையில்  எல்லாம்
உதிர்ந்து போகிறது உயிர்

கசந்து வழியும்
என் கண்ணீர்
உனக்கு புரியப்போவதில்லை  என்றானபின்
கதி  நீதான் என்றிருந்தாகப்போவதென்ன

வெளியே
முன்னை விடவும்
வலுவாக வீசுகிறது காற்று

No comments:

Post a Comment