Tuesday 15 December 2015

உன்னை அடைதலென்பது ....

தேடித் தேடி
ஏமாற்றங்களோடு  திரும்புதலென்பது
இந்நாட்களில்
எனக்கு
இயல்பாகி இருக்கிறது



நீ இருக்கும்
திசைகளை
எனக்கு திறக்க தெரியவில்லை



ஒரு பறவையென
உன் கிளையினில்
வந்தமரும்
கொடுப்பினை எனக்கில்லை



துயரடர்ந்த இந்த வாழ்வின்
முடிச்சுகளை
அவிழ்க்கத்தெரியாத
நான் எப்படி
உடையும் உன் மௌனத்தை
மொழிபெயர்ப்பது



என்னை தவிர்க்க முயலும்
உன் குரலை
பற்றிக்கொள்ள விழையும்
நடுங்கும் என் கரங்களுக்கு
ஏதொன்றும் வாய்ப்பதில்லை



நீ கைநழுவிப்போவாயோ
என்ற
தாளவியலாத பதற்றத்தில்
சீர்குலைகின்றன
என் தவிப்புகள்



நிராகரிப்பின் விஷம் தீண்டிய
என்னை
யாருக்கு அடையாளம் தெரியாவிட்டாலும்
உனக்கு தெரியுமில்லையா ?



பிரவேசிக்க முடியாத
காலத்தின் ரகசியம் பொதிந்தது
என் வெளி



யாராலும்
எளிதில் நெருங்கிவிட இயலாத
தூரத்தில்
இருக்கிறது
நீ எனக்கு பரிசளித்திருக்கும்  தனிமை



தனிமையில் இருப்பது என்பது
வெறுமனே 
தனித்து இருத்தல் மட்டுமல்ல

No comments:

Post a Comment