Saturday 5 October 2013

ஏவாளைத் தொலைத்த ஆதாமின் இரவு


இச்சைகள் மேலிட
பார்வைகள் மேயும்
படுக்கையறை வனாந்தரத்தில்
துணையற்ற இப்பருவத்தின் காமம்
கொடிதினும் கொடிது


நட்ட நடு நிசியில்
பாலையென காந்தும் இவ்வுடலம்
ஒவ்வாத உணர்ச்சிகளைக்
கசியவிடும் தருணம்
பெருஞ்சாபம்


யாமத்தின் இடுக்குகளில்
துழாவும் காமத்திற்கு
பசலை போர்த்திய
இப்பருவத்தின் அடுக்குகளில்
பெருமூச்சைத் தவிர
வேறென்ன கிடைத்துவிடப்போகிறது


துக்க வீட்டில்
களியாட்டாம் கொண்டாடுதலைப் போல
பொருத்தமற்ற
மற்றும் இரக்கமற்ற
இக்காமத்தை என்ன செய்யலாம்


பசிக்கும் வயிற்றைத்
தண்டிப்பதை போல
ஒரு எதேச்சாதிகாரம்
தலைதூக்குகிறது
அடங்கா காமத்தை அறுத்தெறிய


பின்
உடலிடும் ஒப்பாரியில்
கரைகிறது மனசு
கத்தியைத் தவறவிட்டு

.
.
.

இறைஞ்சியும் கிடைக்காமல்
ஏமாற்றத்தில்
விம்மி வேர்த்தழும் தோலுக்கு
வேடிக்கை காட்டவென
சுவரில்
ஏவாளின் சித்திரம் வரைகிறான்
ஆதாம்



க.உதயகுமார்

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5556

குறிப்பு   : April 30, 2012 அன்று எழுதியது .

1 comment: