Friday 11 October 2013

அமிலச்சொல்


மிகுந்த கசப்பான
உரையாடலுக்குப்பின்
செம்பிழம்பாய்
கொதிக்கும் இம்மனம்
அவமானத்தில்
கதறி அழுவது
சகிக்கப் பொறுக்கவில்லை

பின் ஏன்
இவ்விதயம் இன்னும்
துடிப்பதை நிறுத்தவே இல்லை ...

வெறுமையாக நீளும்
ஒவ்வொரு மணித்துளியும்
விஷம் என விழுந்த வார்த்தைகளை
நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது

புரிதல்கள் கோணலான
எல்லா உறவுமே
இப்படித்தான்
துடிக்க துடிக்க
கழுத்தறுக்கப்படுகிறதா..?

எல்லா பழியையும்
காலத்தின் மீதேற்றி
இலகுவாக திரிய
எனக்கொன்றும்
காகித கால்கள் இல்லையே
நன்மைகள் கழித்து மிஞ்சும் தீதை
நானே ஏற்கிறேன்

அன்பை
அளவு பார்த்து பரிமாறும்
நுணுக்கம் அறிந்திராத என்னை
தூற்றிக் கொண்டே இருப்பதைவிடவும்
ஒரு கூர் வாள் கொணர்ந்து
இதயப்பகுதியில்
மொத்த வன்மத்தையும் செலுத்து
உன் கால்களில் தெண்டனிட்டு
சட்டென விடுதலையடைகிறேன்

இனி ஒரு அமிலச்சொல் வேண்டாம்
ரயிலேறிரிக்கடந்த முண்டம் போல்
உதிரம் உதறி
துடிக்கிறதென் உடலம்

--க.உதயகுமார்


http://keetru.com/index.php?option=com_content&view=article&id=25148&Itemid=265

No comments:

Post a Comment