Monday 14 October 2013

ஆதாமின் துணையற்ற வனம் 




நினைவு நதியில்
பளீர் பளீரென வெட்டும்
ஏவாளின் பிம்பக்கீற்றுகளை
யாமத்தில் எதிர்கொள்வது
அவ்வளவு எளிதாய் இல்லை ஆதாமிற்கு 

அம்மகிழ்காலங்களை
புணர்கையிலெல்லாம்   
உயிர் நரம்பை அறுக்கிறது வலி

வாழ்வாங்கு வாழ்வோம்
என 
வார்த்தையில் கட்டிவைத்த  கோட்டையில்
அவன் மட்டும் உலவித்திரும்புகையிலெல்லாம்
உதிரம் பிசிபிசுக்கும்
காயங்களோடே கரையொதுங்குகிறான்

அந்நாட்களில் தின்னக்கொடுத்த
அவள் பேரன்பின் மதுரத்தை
இந்நாளில்
பசுவைப் போல அசைபோடுதல்
கண்ணீரில் முடிகிறது

மலர் நிகர்த்த ஏவாளை 
ஊழ்விதி உதிர்த்தபின்னே
பச்சையற்ற வனமென  
வெளிறிக்கிடக்கிறது ஆதாமின் வாழ்வு

ஏவாளின் தீஞ்சுவை நேசமெல்லாம்
தீயோடு போனபின்னே
அகால இரவில் அழுவது மட்டுமே
துணையற்ற அவ்வனத்தில்
ஆதாமிற்கு தொழிலாக இருக்கிறது

--க.உதயகுமார்


குறிப்பு : ஜூலை 30 ,2013 அன்று உயிரோசையில் வெளியானது . வலைப்பூவில் மீள்பதிவிடுகிறேன்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5805

No comments:

Post a Comment