Tuesday 15 October 2013

பாழடைந்த வீடு


எல்லா ஊரிலும்
ஒரு பாழடைந்த
வீடு நிற்கிறது

முடிந்துபோன ஒரு வாழ்க்கையின்
மிச்சமாக ,
அடைக்கப்பட்டோ
உடைக்கப்பட்டோ இருக்கும்
கதவுகள் .....

வீட்டின் மேல்தளம் எங்கும்
தலைகீழாய்த் தொங்கும்
முன்னம் வாழ்ந்த நினைவுகள் ....

பிரசவமும் மரணமும்
மாறி மாறி
பார்த்துக்கிடந்த
சுவரெங்கும்
சிலந்திக்கூடு .....

காயப்போட எதுவும் இல்லை ,
காத்தாடி விட
அந்த சிறுவனும் இல்லை ,
மொட்டையாய் நிற்கும்
மொட்டைமாடி ....

பிரார்த்தனைகளைத்  தின்று ,
கரையான் புத்தாகிப்போன
துளசி மாடம் ....

ஒருத்தியின்  வளவியோசையை
இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கும்
ஈரம் அற்றுப்போன
கிணத்து ராட்டை ....

எத்தனை முத்தங்கள்  உதிர்க்கப்பட்டது
எத்தனை கூடல்கள் வெற்றியடைந்தது
என கணக்குவைத்திருக்கும்
அறுந்துபோன
அந்த கயிற்றுக்கட்டில் ......

சாயம் வெளுத்து
திட்டுதிட்டாய்க் கிடக்கும்
ஒரு பெருமாட்டியின்
வெற்றிலை எச்சில் ....

வாழ்ந்த   வாழ்க்கையின்
நினைவுச்சின்னம்
சிதலமாகி நிற்கிறது
எல்லா ஊர்களிலும் .....

என் வீடும்
ஒரு நாள்
பாழடைந்துபோகுமோ ?


--க.உதயகுமார்


குறிப்பு : ஜூலை 12, 2011 இல் உயிரோசையில் வெளியான கவிதை . வலைப்பூவில் மீள்பதிவிடுகிறேன்

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4500

No comments:

Post a Comment