Sunday 22 September 2013

விழைவு

ஓங்கி உயர்ந்த மரங்கள்
இச்சாலைகளை போர்த்தி இருக்கிறது
கூடடைந்த பறவைகளின்
குதூகலகுரல்
அமைதியை விடவும்
மதுரமாய் இனிக்கிறது

நாயினை
மடியில் ஏந்தி  நடக்கும்
இக்கரை தாயொருத்தியின்
விலையுயர்ந்த கைநுனி கயிற்றில்
சிரித்துக் கொண்டே கடக்கிறது குழந்தை
எப்படியான வாழ்க்கையிலும்
சிரிக்கத்  தவறுவதில்லை
குழந்தைகள்

அருவியைப்  போல
சதா புகைந்து கொண்டே இருக்கிற
விடைத்த மூக்கு தாத்தாவின்
முகமன்
எப்போதும்போல்  வரவேற்கிறது
குடியிருப்பின் வாசலில்
நீண்டு  விரியும்
புல்தரையில்
தங்கமென ஜொலிக்கிறது
மீதமிருக்கும் பகல்

மழைக்கு  முன்னதாக
தாழப் பறக்கும்
தும்பியினை போலொருத்தி
இன்றும் பெயர் சொல்லி அழைக்கிறாள்
திரும்பிச் சிரிக்கையில்
இன்றைய நாள் எப்படியென கேட்டு
புருவம் வளைக்கிறாள்
சொல்லும்படியான நாளில்லாத  பொழுதும்
அவள் எதிர்பார்த்த பதிலுரைக்கிறேன்
ரசிக்கத்தகுந்ததாய் இருக்கிறது
அவளுதிர்த்த முத்து

கதவடைத்து
உள்நுழைகையில்
இன்றும் அமர்ந்திருக்கிறது
அறையினுள் நடுநாயகமாய்
எனக்கெனவே காத்திருக்கும்
தனித்த அந்தி


இன்றும் மழை வந்தால்
நன்றாக இருக்கும்


~~க.உதயகுமார்

No comments:

Post a Comment