Sunday 22 September 2013

மழைக்கால நினைவுகள்

வெயிலெரிக்கும்
இக்காலத்தில்
எனக்கு மழையை பற்றியே
சிந்தனையாக இருக்கிறது

மழையில் நனைந்து
துளி துளியாய் சொட்டி
குளிர் கவிதை எழுதும்
முருங்கை மரம்
இக்காலத்தில் வெளிறிக் கிடக்கிறது

சன்னலில் வந்தமர்ந்து
வண்ணங்களை தூவிச்செல்லும்
வண்ணத்துப் பூச்சிகள்
இப்போது
என் வாசல் வருவதே இல்லை  

மழையில் நனைந்திடாத
செம்பருத்திப் பூக்களில்
என்ன அழகு இருக்கிறது ?

பாதி நனைந்து
தெருவோர டீக்கடையில் பதுங்கி
இருகைகளிலும் சூடு பரவ
உள்நாக்கால் உணர்ந்து சுவைக்கும்
தேநீர்
இவ்வெயில் நேரத்தில்
பிரிந்துபோன நண்பனைப் போல்
தள்ளி நிற்கிறது

முகம்தெரியாத  ஒருவன்
திடுமென
குடைக்குள் நுழைந்து
சிநேகமாய் புன்னகை சிந்தி
மழையை சிலாகிக்கும்
தருணங்கள்
இப்போது வாய்ப்பதே  இல்லை

மழையில்
மண்வாசம் கிளர்ந்தெழும்
செம்மண் சாலைகளில்
ஏகாந்தமாய் பாடித்திரிந்த 
தும்பிகள்
கொதிக்கும் தார் சாலைகளில்
என்ன செய்யும் ..?

வெளியே கரம் நீட்டி
மழையை நிறைத்து
முகத்தை கழுவி
சிலு சிலுக்கும்
மழைக்கால நினைவுகளோடு
வெயிலை வெறிக்கிறது
அனல் ததும்பும் வாழ்வு

கண்ணாடி சன்னலில்
ஒழுகி ஓவியம் வரையும்
மழையோடு பேசிக்கொண்டே
பயணிக்க முடியவில்லை ...
பயணங்கள்
இக்காலத்தில் வியர்த்து  நனைகிறது

எனக்கேனோ
மழையின் நினைப்பாகவே இருக்கிறது,
அது பெய்யும் காலத்தில்
இம்சை என முணுமுணுத்திருந்த போதிலும்...

~~க.உதயகுமார்

No comments:

Post a Comment