Saturday 19 October 2013

கிளியோபாட்ரா இல்லாத சீசரின் அந்திமக்காலம்



உறைந்த நைல் நதியென
வாழ்வின் முற்றத்தில்
அமர்ந்திருக்கிறான் சீசர்

அவனெதிரே ஒரு கோப்பை
இருக்கிறது
கிளியோபாட்ரா இல்லாத
சீசரின் ரோமைப் போல
ததும்பும் வெறுமையோடு

முன்பந்த சுகந்தகாலத்தில்
அவன் உதட்டில்
எப்போதும் ஒட்டி இருந்த
கிளியோபாட்ராவின் எச்சில்
இப்போது உலர்ந்துபோய்விட்டது

ஒற்றையாய் நிற்கும்
ஆலிவ் மரங்கள்
சபிக்கப் பட்டவை
என புலம்பித்தீர்க்கிறான்
தான் போர்வீரன் என்பதை மறந்து

தூரத்தில் பறக்கும்
எகிப்திய கழுகு கொத்திச்செல்வது
அலெக்சாண்ட்ரியா காற்றில் மிதந்த
இவனின் காதலைத்தான்
என்று விசும்புகிறான்
பின் பெருங்குரலெடுத்து
ஒப்பாரி வைக்கிறான்
அவன் போர்த்தழும்புகளில்
ஒழுகுகிறது
காதல்

கிளியோபாட்ராவின் அந்திமக்கால
மரணக்கனவுகளில் தீண்டிய
அதே சர்ப்பம்
சீசரின் கனவுகளிலும் இப்போது நெளிகிறது .
இல்லாமல் போன கிளியோபாட்ராவைப்போல்
தன்னை
ரோமின் குறிப்புகளில் இருந்து நீக்கும்படி
அதனிடம் மன்றாடுகிறான் .

மன்றாட்டுகள் எப்போதும் கேட்கப்படுவதில்லை
என சலிப்புற்ற சீசர்
ப்ரூட்டஸ்ஸைத் தேடுகிறான் ......

எனதருமை ப்ரூட்டஸ் !!!
நானொன்றும் சாக்ரடீஸ் இல்லை தான்
பரவாயில்லை
கொஞ்சம் கருணையோடு
ஹெம்லாக் ஊற்று ..

வெறுமை கரைந்து
துளித்துளியாய் நிறைகிறது
சீசரின் கோப்பை

 -க.உதயகுமார்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6108

No comments:

Post a Comment