Showing posts with label உயிரோசை. Show all posts
Showing posts with label உயிரோசை. Show all posts

Saturday, 19 October 2013

கிளியோபாட்ரா இல்லாத சீசரின் அந்திமக்காலம்



உறைந்த நைல் நதியென
வாழ்வின் முற்றத்தில்
அமர்ந்திருக்கிறான் சீசர்

அவனெதிரே ஒரு கோப்பை
இருக்கிறது
கிளியோபாட்ரா இல்லாத
சீசரின் ரோமைப் போல
ததும்பும் வெறுமையோடு

முன்பந்த சுகந்தகாலத்தில்
அவன் உதட்டில்
எப்போதும் ஒட்டி இருந்த
கிளியோபாட்ராவின் எச்சில்
இப்போது உலர்ந்துபோய்விட்டது

ஒற்றையாய் நிற்கும்
ஆலிவ் மரங்கள்
சபிக்கப் பட்டவை
என புலம்பித்தீர்க்கிறான்
தான் போர்வீரன் என்பதை மறந்து

தூரத்தில் பறக்கும்
எகிப்திய கழுகு கொத்திச்செல்வது
அலெக்சாண்ட்ரியா காற்றில் மிதந்த
இவனின் காதலைத்தான்
என்று விசும்புகிறான்
பின் பெருங்குரலெடுத்து
ஒப்பாரி வைக்கிறான்
அவன் போர்த்தழும்புகளில்
ஒழுகுகிறது
காதல்

கிளியோபாட்ராவின் அந்திமக்கால
மரணக்கனவுகளில் தீண்டிய
அதே சர்ப்பம்
சீசரின் கனவுகளிலும் இப்போது நெளிகிறது .
இல்லாமல் போன கிளியோபாட்ராவைப்போல்
தன்னை
ரோமின் குறிப்புகளில் இருந்து நீக்கும்படி
அதனிடம் மன்றாடுகிறான் .

மன்றாட்டுகள் எப்போதும் கேட்கப்படுவதில்லை
என சலிப்புற்ற சீசர்
ப்ரூட்டஸ்ஸைத் தேடுகிறான் ......

எனதருமை ப்ரூட்டஸ் !!!
நானொன்றும் சாக்ரடீஸ் இல்லை தான்
பரவாயில்லை
கொஞ்சம் கருணையோடு
ஹெம்லாக் ஊற்று ..

வெறுமை கரைந்து
துளித்துளியாய் நிறைகிறது
சீசரின் கோப்பை

 -க.உதயகுமார்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6108

Tuesday, 15 October 2013

பாழடைந்த வீடு


எல்லா ஊரிலும்
ஒரு பாழடைந்த
வீடு நிற்கிறது

முடிந்துபோன ஒரு வாழ்க்கையின்
மிச்சமாக ,
அடைக்கப்பட்டோ
உடைக்கப்பட்டோ இருக்கும்
கதவுகள் .....

வீட்டின் மேல்தளம் எங்கும்
தலைகீழாய்த் தொங்கும்
முன்னம் வாழ்ந்த நினைவுகள் ....

பிரசவமும் மரணமும்
மாறி மாறி
பார்த்துக்கிடந்த
சுவரெங்கும்
சிலந்திக்கூடு .....

காயப்போட எதுவும் இல்லை ,
காத்தாடி விட
அந்த சிறுவனும் இல்லை ,
மொட்டையாய் நிற்கும்
மொட்டைமாடி ....

பிரார்த்தனைகளைத்  தின்று ,
கரையான் புத்தாகிப்போன
துளசி மாடம் ....

ஒருத்தியின்  வளவியோசையை
இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கும்
ஈரம் அற்றுப்போன
கிணத்து ராட்டை ....

எத்தனை முத்தங்கள்  உதிர்க்கப்பட்டது
எத்தனை கூடல்கள் வெற்றியடைந்தது
என கணக்குவைத்திருக்கும்
அறுந்துபோன
அந்த கயிற்றுக்கட்டில் ......

சாயம் வெளுத்து
திட்டுதிட்டாய்க் கிடக்கும்
ஒரு பெருமாட்டியின்
வெற்றிலை எச்சில் ....

வாழ்ந்த   வாழ்க்கையின்
நினைவுச்சின்னம்
சிதலமாகி நிற்கிறது
எல்லா ஊர்களிலும் .....

என் வீடும்
ஒரு நாள்
பாழடைந்துபோகுமோ ?


--க.உதயகுமார்


குறிப்பு : ஜூலை 12, 2011 இல் உயிரோசையில் வெளியான கவிதை . வலைப்பூவில் மீள்பதிவிடுகிறேன்

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4500

Monday, 14 October 2013

ஆதாமின் துணையற்ற வனம் 




நினைவு நதியில்
பளீர் பளீரென வெட்டும்
ஏவாளின் பிம்பக்கீற்றுகளை
யாமத்தில் எதிர்கொள்வது
அவ்வளவு எளிதாய் இல்லை ஆதாமிற்கு 

அம்மகிழ்காலங்களை
புணர்கையிலெல்லாம்   
உயிர் நரம்பை அறுக்கிறது வலி

வாழ்வாங்கு வாழ்வோம்
என 
வார்த்தையில் கட்டிவைத்த  கோட்டையில்
அவன் மட்டும் உலவித்திரும்புகையிலெல்லாம்
உதிரம் பிசிபிசுக்கும்
காயங்களோடே கரையொதுங்குகிறான்

அந்நாட்களில் தின்னக்கொடுத்த
அவள் பேரன்பின் மதுரத்தை
இந்நாளில்
பசுவைப் போல அசைபோடுதல்
கண்ணீரில் முடிகிறது

மலர் நிகர்த்த ஏவாளை 
ஊழ்விதி உதிர்த்தபின்னே
பச்சையற்ற வனமென  
வெளிறிக்கிடக்கிறது ஆதாமின் வாழ்வு

ஏவாளின் தீஞ்சுவை நேசமெல்லாம்
தீயோடு போனபின்னே
அகால இரவில் அழுவது மட்டுமே
துணையற்ற அவ்வனத்தில்
ஆதாமிற்கு தொழிலாக இருக்கிறது

--க.உதயகுமார்


குறிப்பு : ஜூலை 30 ,2013 அன்று உயிரோசையில் வெளியானது . வலைப்பூவில் மீள்பதிவிடுகிறேன்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5805

Saturday, 5 October 2013

ஏவாளைத் தொலைத்த ஆதாமின் இரவு


இச்சைகள் மேலிட
பார்வைகள் மேயும்
படுக்கையறை வனாந்தரத்தில்
துணையற்ற இப்பருவத்தின் காமம்
கொடிதினும் கொடிது


நட்ட நடு நிசியில்
பாலையென காந்தும் இவ்வுடலம்
ஒவ்வாத உணர்ச்சிகளைக்
கசியவிடும் தருணம்
பெருஞ்சாபம்


யாமத்தின் இடுக்குகளில்
துழாவும் காமத்திற்கு
பசலை போர்த்திய
இப்பருவத்தின் அடுக்குகளில்
பெருமூச்சைத் தவிர
வேறென்ன கிடைத்துவிடப்போகிறது


துக்க வீட்டில்
களியாட்டாம் கொண்டாடுதலைப் போல
பொருத்தமற்ற
மற்றும் இரக்கமற்ற
இக்காமத்தை என்ன செய்யலாம்


பசிக்கும் வயிற்றைத்
தண்டிப்பதை போல
ஒரு எதேச்சாதிகாரம்
தலைதூக்குகிறது
அடங்கா காமத்தை அறுத்தெறிய


பின்
உடலிடும் ஒப்பாரியில்
கரைகிறது மனசு
கத்தியைத் தவறவிட்டு

.
.
.

இறைஞ்சியும் கிடைக்காமல்
ஏமாற்றத்தில்
விம்மி வேர்த்தழும் தோலுக்கு
வேடிக்கை காட்டவென
சுவரில்
ஏவாளின் சித்திரம் வரைகிறான்
ஆதாம்



க.உதயகுமார்

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5556

குறிப்பு   : April 30, 2012 அன்று எழுதியது .

Thursday, 26 September 2013

வழியனுப்புதல் சுலபமில்லை

உங்களைப் போல்
எனக்கு
சுலபமாக இருப்பதில்லை
வழியனுப்பிவைத்தல்

கையசைத்து
இதழ் விரித்து
பல்காட்டி
வழியனுப்பிவைக்கும்
வழமையில்
எனக்கு உடன்பாடில்லை

குறைந்தபட்சம்
ஆழ்மனதைத்தொடும்
ஒரு முத்தமிடவேண்டும்

உள்ளங்கை பற்றி
ஒவ்வொரு ரேகையாய்
தடவிக்கொடுக்க வேண்டும்

பிசகற்ற அன்போடு
தோள்சேர்த்து
ஸ்பரிசிக்கவேண்டும்

பொய்மையற்ற
புன்னகையொன்றை
வழிச்செலவுக்குப் பகிர வேண்டும்

மிச்சமிருக்கும்
சொற்களனைத்தையும்
பேச்சுத்துணைக்கு
ஒரு கைப்பையில் நிரப்பி
ரயிலேற்ற  வேண்டும்

திடுமென
வெறுமை படர்ந்த
ரயில்  கிளம்பிய
நடைமேடையில்
வேர்பிடிக்க அமர்ந்தபடி
சொட்டுச் சொட்டாய்
புன்கணீர் உகுக்கவேண்டும்
.
.
.
உங்களைப் போல்
எனக்கு
சுலபமாக இருப்பதில்லை
வழியனுப்பிவைத்தல்

~~க.உதயகுமார்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5358