Monday 16 June 2014

..............................

பகல் எரிந்துகொண்டிருந்த 
கோடைக்காலத்தின் மத்தியானத்தில் 
புல்தரையில் அமர்ந்திருந்தேன் 
வெயிலை குடித்துக்கொண்டு

வெகுமதி அளிக்கப்பட்ட உதாசீனங்களோடும் 
புனைவாக வரையப்பட்ட 
என்னை பற்றிய பிம்பங்களின் 
முதுகுக் கீறல்களோடும் 
நீங்கள் சூட்டிய அவமான கிரீடத்தோடும் 
புல்தரையில் வேர்பிடிக்க கிடந்திருந்தேன் 
வெயிலெனக்கு உறைக்கவே இல்லை 

வண்ணங்களை சுமந்து கொண்டு 
சிறகசைத்து சிறகசைத்து 
பறந்துவந்த வண்ணத்துப் பூச்சியொன்று 
என் தலை வந்து அமர்ந்தது 
தலை சிலுப்பலோ 
உடல் அசைவோ 
வண்ணத்துப் பூச்சியை விரட்டிவிடும் 
என்பதுணர்ந்து 
நெடுநேரம் அமர்ந்திருந்தேன் 
நிச்சலன மரம் போல 

ரத்தமும் சதையுமான 
மனம் கொண்ட மனுஷனென 
உங்களுக்கு என்னை புரிந்திடாதபோதும் 
அந்த 
வண்ணத்துப் பூச்சி 
எனை பூவென்றா நினைத்தது ? 

No comments:

Post a Comment