Tuesday, 29 October 2013

நிர்தாட்சண்யம்

அறையெங்கும் நிறைந்திருக்கிறது 
அத்துவானப் பேரமைதி 
உதிர்ந்த மலரைப் போல 
மௌனம் போர்த்திக் கிடக்கிறது காலம்     
அரவமற்ற பொட்டலில்  பெய்யும் 
மாரியென கண்கள் 
நத்தையென   நகரும் 
காதலற்ற வெறும்நாட்கள்  
கூழாங்கல்லின்   அடியில் 
தேங்கிக் கிடக்கும் இருளைப் போல 
தனித்த வாழ்வு 

தானே   போட்டு  
தானே  சுவைக்கும் 
தேநீரின்   சுவை போல 
பகிரவென யாருமற்ற 
கொடும்வாழ்வின் பக்கங்கள் 
கொடும்  கசப்பென்கிறேன் 
நீங்களோ 
பைத்தியம் என்ற 
தாட்சண்யமற்ற  ஒரு வார்த்தையில் 
என் வாசலை 
கடந்து போகிறீர்கள் 

~~க.உதயகுமார்

இலையின் இயல்பற்ற இதயம்

நதிவழி நீந்தும் 
இலைபோல் 
லாவகம் வருவதில்லை 
விதிவழி வற்றும் வாழ்வில் 
ஓவியத்தின் கண்களென 
நிலைகுத்தியே நிற்கிறது 
துயர் 
சன்னமாய் விரிசல் விட்டு 
சுக்குநூறாய் உடைகிறது 
கண்ணாடி மனசு 

இலைகளுக்கு எப்படி 
இவ்வளவு எளிதாக இருக்கிறது 
தன்னை விடுவித்துக் கொண்டு 
சுதந்திரமாய் சுற்றித் திரிய ?
மெலிதாய் விழவும்
ஒரு மழைக்குமுன்னதான காற்றில் 
ஈரமாய் எழவும் 
இலையின் இயல்பற்ற இதயத்தால் 
முடிவதில்லை 

பச்சை காய்ந்து 
பழுப்பு மினுங்கும் 
பருவத்தே 
நானுமோர் இலையாவேன் 
என்ற எதிர்பார்ப்பு இல்லாமலில்லை 

--க.உதயகுமார் 

http://navinavirutcham.blogspot.com/2013/07/blog-post_7.html

Saturday, 26 October 2013

வழமை

ஒவ்வொரு துண்டாய்
ஒவ்வொரு துண்டாய்
சிதறித்தெறித்த என்னை
நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன்

முழுமையாய் மீட்சியுற்று
நிமிர்ந்தெழுகிறேன் 
சகிக்கப்பொறுக்காமல்
மறுபடி உடைக்க
நீளும் உன் கரங்களை
சபிக்கத் தோன்றுவதேயில்லை எனக்கு

சிதறடிப்பது
உன் தொழிலாகவும்
மீட்டெடுப்பது
என் தொழிலாகவும்
நிர்ணயிக்கப்பட்டுவிட்ட இவ்வாழ்வில்
புதர்மண்டும் இருளுக்காக
நான் அழுதென்ன ஆகப்போகிறது ?

--க.உதயகுமார்

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=25302&Itemid=265