Sunday, 29 September 2013

துள்ளு தமிழ் வாலி !!!




வாலி !!!

பதின் பருவக் காலத்தில் , வீட்டு ரேடியோவில் பெரும்பாலும் அப்பாவும் அம்மாவும் விரும்பிக் கேட்பது பழைய பாடல்களாகத் தான் இருக்கும் . அப்போதைக்கு "பழைய பாடல்களை எழுதியவர் " என்று எனக்கு தெரிந்த ஒரே கவிஞர் கண்ணதாசன் . எனவே கேட்கும் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் எழுதியது தான் , இசையமைத்தது எம்.எஸ்.வீ   தான் என்று நினைத்துகொள்வேன் .

விழுப்புரத்தில் ஒரு பட்டிமன்றம் . லியோனி தலைமையில் . நான் லியோனியின் பட்டிமன்றம் பார்ப்பது அது தான் முதல் முறை . "எப்படி எப்படி சமஞ்சது  எப்படி ..." என்ற பாடலை மேற்கோள் காட்டி எழுதிய கவிஞரை பெயர் சொல்லாமல் வெளுத்து வாங்கினார் லியோனி . ஆனால் எனக்கு அதன் பிறகு தான் யார் அந்த பாடலை எழுதி இருப்பார் என்று ஆவல் பொருக்க முடியாமல் , பக்கத்தில் உக்காந்திருந்த முகம் தெரியாத ஒருவரிடம் கேட்டேன் . "வாலி" என்று பதில் வந்தது . வாலி என்ற கவிஞர் பெயர் எனக்கு இப்படியாகத்  தான்  முதல் அறிமுகம் . அந்த பருவத்துக்கே உரிய குறுகுறுப்பு . அந்த பாடலை முழுசா கேட்டுடணும் என்ற ஆவலில் அந்தப் பாடலை ஆராய்ந்தால் பாடல் முழுக்கவே ஒரு மார்க்கமாகத் தான் இருந்தது .ஓஹோ இவர் இப்படியான பாடல் எழுதுகிற கவிஞர் போல என்று தான் அன்றைக்கு நினைத்தேன் .

பின்னாளில் தான் தெரியவந்தது . வாலி என்ற கவிஞர் தொட்டு எழுதாத சந்தங்களே  இல்லை என்று . இன்றைக்கும் கிராமங்களில் "எம்ஜியார் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா ..?"  என்று மேற்கோள் காட்டுகிற பாடல்கள் முழுக்க வாலி எழுதியவயாகத் தான் இருக்கிறது .

இன்றைக்கு வரைக்கும் எனக்கு மிக பிடித்த பாடல் , எம்ஜியார் வாயசைத்து வாலி எழுதிய பாடல்களான "கண் போன போக்கிலே கால் போகலாமா " மற்றும் "தரை மேல் பிறக்க வைத்தான் " . 

பணம் படைத்தவன் திரைப்படத்தில் எம்ஜியார் மிடுக்காக கையில் 'பெல்லோஸ்' என்ற இசைக்கருவியோடு  வாயசைத்து பாடுவார் . அமரர் T .M .S இன் குரல் அத்தனை கம்பீரமாக இருக்கும் . வாலியின் வரிகளோ சகலத்தையும் விஞ்சி இருக்கும் .

"பொய்யான  சிலபேர்க்கு  புது  நாகரீகம்
புரியாத  பல  பேர்க்கு  இது  நாகரீகம்
முறையாக  வாழ்வோருக்கு   எது  நாகரீகம்
முன்னோர்கள்  சொன்னார்கள்  அது  நாகரீகம்  "

கண் போன போக்கிலே பாடலில் எனக்கு மிக மிக பிடித்த வரிகள் இந்த வரிகள் . இதே  பாடலில் வரும் இன்னும் ஒரு பத்தி நெஞ்சுக்கு நெருக்கமானது

"நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் .."

எனக்கு நானே அடிக்கடி பாடிக்கொள்ளும் வரிகள் . குறிப்பாக ஏகாந்த இரவுகளில் .  சுய ஆற்றுப்படுத்துதல் என்று உளவியல் மருத்துவம் சொல்கிறதே , அப்படி எனக்கு இவ்வரிகள் உதவி இருக்கிறது , உதவிக் கொண்டிருக்கிறது ....

"செத்து செத்து பிழைப்பது " என்று சொல்லுவார்களே . அப்படி ஒரு பிழைப்பு மீனவர்களுடையது ...இதுவரைக்கும் மீனவர்களின் கதையை படமாக எடுக்கிறேன் பேர்விழி என்று கிளம்பிய இயக்குனர்கள் அதை முழுமையாக  செய்யவே இல்லை என்பது என் கருத்து . ஆனால் ஒரே பாடல் . ஒரே ஒரு பாடல் . மீனவர்களின் துயரத்தை அங்குலம் அங்குலமாக விவரித்த பாட்டு .

"தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான் ..."

டி.எம்.எஸ் குரல் உயர்த்தி  "ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்,ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்" என்று பாடுவார் , சில சமயங்களில் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் வரும் ...

"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை .."

என்று கவிஞர் வாலியை  விட இது வரைக்கும் மீனவரின் துயர வாழ்க்கையை வேறு ஒரு பாடலாசிரியர்  பாடலாக எழுதவில்லை என்றே நான் எண்ணுகிறேன் ...

திருவான்மியூரில் குப்பம் கடற்கரை செல்லும்  சாலையில் கொஞ்ச நாள் குடி இருந்தேன் . அப்போது இரவுகளில் குப்பம் கடற்கரையில் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பது வழக்கம் . அங்கே மீனவர் குடியிருப்பு  உண்டு .அதில் மீனவப் பெரியவர்  ஒருவர் தினமும் குடித்துவிட்டு வேத பாடம்  போல இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பார் . உடைந்த  குரலில் அந்தப் பாடலை கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு அவருக்கு ரசிகனாகவே ஆகிவிட்டேன் . மீனவ  நண்பன் என்று எம்.ஜி.யாரை இன்றும் சென்னையில் சொல்லுவார்கள் , எனக்கென்னவோ வாலியை அப்படி சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது .

"மறுபடியும்"  என்று ஒரு திரைப்படம் . அதில் "எல்லோரும் சொல்லும் பாட்டு .." என்று SPB  பாடிய பாடல் . எழுதியது கவிஞர் வாலி . அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் எனக்கு அத்துப்படி . நீண்ட நாட்களாக என் கைபேசியில் அழைப்பு பாடலாக அது தான் இருந்தது .  

மேடையே வையகம் ஒரு மேடையே
வேசமே அங்கெல்லாம் வெறும் வேசமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

ஷேக்ஸ்பியர் சொன்ன   பெருந்தத்துவம் இந்த நாளே  வரிகளில் அடக்கி சொல்லிவிட்டார் வாலி .

எனக்கு ஆச்சர்யம் ."பக்கம் வந்த மாமா,இதுக்கு பேரம் பேசலாமா?பாக்குப்பாய போட்டு, நீயும் பயாஸ்கோப்பு காட்டு" என்றெல்லாம் எழுதிய வாலியால் எப்படி இப்படியும் எழுத முடிகிறது ? என்று அதிசயமாக இருக்கும் , கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கும் . ஆனால் பின் வாலியே "நான் காசுக்கு பாட்டெழுதவந்தவன்" என்று சுயவாக்குமூலம் கொடுத்த பின்னால் , என் மனம் அவர் நிலைப்பாட்டில் அதிக மூக்கை நுழைத்தெல்லாம் ஆராய்ச்சி  செய்ய விரும்பியதில்லை .

அந்த பாடலில் எனக்கு எல்லா வரிகளும் பிடிக்கும் என்றாலும் , சிலப்பதிகாரத்தின் சாரத்தை இரண்டு வரிகளில் எழுதி இருப்பார் வாலி .அது தான் மிகுந்த வியப்பு எனக்கு

"கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று"

அட ..என்று கேட்பவரை ரசிக்க வைக்கும் அவ்வரிகள் ...

வாலியின் சினிமா பாடல்களை எடுத்து சிலாகிக்க வேண்டுமென்றால் , ஒரு புத்தகம் தான் எழுதவேண்டும் . ஊர் உலகம் அறிந்த விஷயம்  இது .

எல்லா சினிமாப் பாடல்களையும் விட , வாலி எழுதிய கவிதை ஒன்று . எனக்கு மட்டுமில்லை தமிழர்  யாருக்கும் அது பிடிக்கும் . தமிழ் சமுதாயம் முழுமைக்கும்  அவ்வரிகள் மிக உன்னதமானது ..என்ன கவிதை என்று யோசிக்குறீர்களா..?

தமிழர் தலைவர் பிரபாகரனை பற்றி வாலி எழுதிய வரிகள்

"முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது -
தமிழின் உயிரும் மெய்யும்;
ஆனால்-
ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது-
தமிழரின் உயிரும் மெய்யும் !
பிரபாகரன்!
அவ்
ஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ
உலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார?

நீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை-
நிலையெழுத்து என்று ஆக்கவல்லது -
அவ்
ஆறெழுத்து அன்றி ஆரெழுத்து ? "

மேலும் அதே கவிதையில்

"நிலப்படை;
நீர்ப்படை;
நீள் விசும்புப்படை;
என்றவன் முப்படை கண்டான்;
எம்நிலத்தை -
எம்மிடம் ஒப்படை என்றான்!
சேர-
சோழ-
பாண்டியர்க்குப்
பிற்பாடு -
படை திரட்டிய
பச்சைத் தமிழன் இவனானான்;
முக்கண்ணாகக் கொண்ட
சிவனானான்!

எனக்கு படிக்க படிக்க சிலிர்க்கும் . வாலியை கையெடுத்து கும்பிட தோன்றும் இவ்வரிகளை படிக்கும்போதெல்லாம் . எவ்வளவு பொருத்தமான  வரிகள் ...

கலைஞருக்கு  நடந்த பாராட்டு விழாக்களில் கவியரங்கம் இசைப்பது , எதன் பொருட்டும் அவர்களை விமர்சிக்க வாய் திறக்காதது போன்ற விடயங்கள் எனக்கு பல சமயங்களில் பெரியவர் மீது வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது . நண்பர்களிடத்தில் மனம் வருந்தி பேசி இருக்கிறேன் . ஆனால் என்னவோ "கவிஞர்" என்ற வாலியை என்னால் விட்டுக் கொடுக்கவே முடியவில்லை . கலைஞரோடு இருந்தாலும் , பார்வதி தாயார் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரத்தில் அரசை சாடியும் கவிதை எழுதிய விதத்தில் வாலி தன் நிலைப்பாட்டில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார் என்பதை  புரிந்துக் கொண்டேன் .

சகோதரி செங்கொடி உயிரை ஈகித்து வீரமரணம் அடைந்த பொழுது , வாலி அய்யா எழுதிய கவிதை எனக்கு அன்றைக்கு மேலும் அழுகையை கூட்டியது .

"கொடிகாக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட உயிருண்டு-
உயிர்காக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட கொடியுண்டா?

உண்டு
அதன் பெயர் செங்கொடி:
இனிமேல் -
அதுதான் என் கொடி!"  என்று மகளை  இழந்த தந்தையின் பரிதவிப்பை இந்த கவிதையில் பார்க்க முடியும் .

 இதோ மிக சமீபத்தில் புலிக்குட்டி பாலச்சந்திரனின் படுகொலையை கண்டித்து பெரியவர் வாலி  எழுதிய கவிதையும் அத்தனை  நெகிழ்சியானது .

"முடிகூட முளைக்காத-
வழ வழ மார்பும்; சின்னஞ்சிறு
வயிறு மடிப்பும் கண்டால்…
எவனாவது
ஏவுவானா தோட்டா?
ஏவினான் என்றால்-
புத்தனே
புலால் தின்னக் கூட்டா?

என் சொல்லி என்ன?
தன் தலையாய்
இலங்கை ஏற்றிருக்கிறது -
ஒரு விலங்கை!"

என்று பெரியவர் வாலி எழுதிய இரங்கல் கவிதை தமிழர் நெஞ்சில் வலியோடு பதிந்துபோனது .

காசுக்கு பாட்டெழுதுகிறவன் என்று அவரே சொல்லிக் கொண்ட பொழுதும் , படைப்பாளிக்கே உரிய சமூக கோவத்தோடு பேனா பிரித்து தோலுரிக்கவும் தவறியதில்லை வாலி . தமிழின் துணைகொண்டு  தனக்கே உரித்தான மிடுக்கோடு வாழ்ந்து மறைந்திருக்கிறார் பெரியவர் வாலி .

அகவை எண்பதை கடந்த பொழுதும் , இவரின் வார்த்தைகளில் மட்டும் முதுமை தெரிந்ததே இல்லை .

 "தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே...
பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்...." என்று காதல் செய்யும் யாரும் கேட்ட மாத்திரத்தில் கிறங்கி மயங்கும் பாடல் இது . இதை எழுதும் பொழுது வாலி எண்பதை கடந்துவிட்டார் . தமிழ் திரையுலகம் கண்ட கவிஞர்களில் இந்த வரம் கண்ணதாசனை விடவும் வாலிக்கே மிக அதிகமாய் கிடைத்திருந்தது என்பது என் கருத்து .

கம்பராமயணத்தில் வானர அரசன் வீரன் வாலியை பற்றி கம்பன் எழுதியப் பாடல் . இலக்கியவாதிகள் எல்லோருக்கும் மிக பரிட்சயமான  ஒரு ராமாயணப்   பாடல் உண்டென்றால் அது வாலியை மெச்சி கம்பன் எழுதிய

"கால் செலாது அவன் முன்னர்; கந்த வேள்
வேல் செலாது அவன் மார்பில்; "  என்ற பாடல் .

காற்று கூட வாலியின் வேகத்தின் முன்னால் தோற்றுப் போய்விடும் , முருகனின் வேல் கூட வாலியின் மார்பில் செல்லாது  என்றெல்லாம் கம்பன் வாலியை புகழ்ந்தான் . இது கவிஞர் வாலிக்கும்  ஒப்புப் படுத்திப் பார்க்கிறேன் . காற்றின் வேகத்தை விடவும் தமிழ் வார்த்தைகளை புதிதுபுதிதாக கோர்த்து பாடல் எழுதுவதில் வாலி ஒரு அதிசயம் தான் . வாலியை யாரோ ஒருவர் வம்புக்கு இழுத்த பொழுது மேடையிலேயே வாலி சொன்னாராம் "டேய் நான் மாமிசம் திங்குற பாப்பான் , என்கிட்டே வச்சிக்காத " என்று .  போலியாக வாழாமல் நான் இப்படித்தான் என்று ஊருக்கு உரைத்த விதத்தில் உறுதியான நெஞ்சம் தான் கவிஞர் வாலிக்கும் .


எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

என்று எழுதிய வாலி , மண்ணை விட்டு கிளம்பி விட்டார் . விதியின் வாய்க்குள் எல்லோரும் ஒரு நாள் விழத்தான் போகிறோம் . கவிஞர் வாலி காலத்தால் மறக்க முடியாத பாடல்களை  எழுதி  அழியாப் புகழ் பெற்று பூரணமாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டு இறுதி யாத்திரை கிளம்பி இருக்கிறார் . "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் .." என்று எழுதிய வாலியையும் அவர் திரையிசை பாடல்களையும் தமிழ் நெஞ்சங்கள் என்றைக்கும் மறக்க முடியாது .

அவர் பெரிதும் விரும்பி சேவித்த ரங்கராஜனை நானும் வேண்டிக் கொள்கிறேன் . அந்த வெண்தாடி கவிஞன் , ரங்கனின் திருவடியில் ஆழ்ந்த இளைப்பாறுதல் பெறட்டும் . "என் வெற்றி என்பது என் வலிமையில் வந்தது இல்லை , தமிழின் வலிமையால் வந்தது" என்று சொன்ன வாலி , தமிழுள்ள வரையிலும் புகழ் தழைத்திருப்பார் .


ஆண்டாண்டு காலம்
தொன்மையுடைத்த
தெள்ளு தமிழ்
உம் விரல்களின் வழியே
துள்ளு தமிழானது
வாலி ..!
உங்கள்
தமிழ்த் திரையிசைப் பாடல்கள்
எங்கள் சந்ததிக்கும்  ஆகுமோர்  
தூளி !!


ஆழ்ந்த இரங்கல்
க.உதயகுமார்




குறிப்பு : இந்தப் பதிவு கவிஞர் வாலி அவர்கள் மறைந்த மறுநாள் (ஜூலை 19,2013) எழுதிய இரங்கல் கட்டுரை .

Friday, 27 September 2013

மெர்லின் என்றொரு சபிக்கப்பட்டவள் !

சென்றவாரம்  நான் எனக்கு நன்கு பழக்கப்பட்ட ஒரு மன நல மருத்துவரிடம் சென்றிருந்தேன் தூக்கம் வரவில்லை என மாத்திரை வேண்டி  . அப்போது  எங்கள் உரையாடல் எங்கோ ஆரம்பித்து , எங்கெல்லாமோ பயணித்து ஒரு நடிகையின் வாழ்க்கை பக்கம் திரும்பிற்று . எனக்கு அந்த நடிகையின் பெயர் தெரியும் , அவரின் புகைப்படம் பார்த்திருக்கிறேன் . ஆனால் அவரின் வாழ்வை , அவரின் மரணத்தின் காரணம் என எதையும் நான் அறிந்திருக்கவில்லை . ஆனால் என் அந்த  நண்பர் மூலமாக சென்றவாரம் எனக்கு அந்த நடிகையின் வாழ்க்கை மீது கவனம் குவிந்தது . பின் எங்கள் கலந்தாய்வு முடிந்து , நான் வேளச்சேரி செல்ல , சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் கடைசி வண்டிக்காக காத்திருந்தேன் . அங்கே என்னை தவிர வெறும் இரண்டு பேர் மட்டுமே இருந்தார்கள் . பெருத்த அமைதி .  எனக்கோ அனிச்சையாக அந்த நடிகை பற்றி என் நண்பர் சொன்னவை சுழன்று சுழன்று கனத்தது .

அதன் பிறகு புத்தகங்கள் வாயிலாகவும் , இணையத்தின் வாயிலாகவும் , சில ஊடக நண்பர்கள் மூலமாகவும் அந்த நடிகை பற்றி படித்து , நிம்மதி இழந்து போனேன் .

நார்மா ஜீன் மார்டின்சென் (எ) மெர்லின் மன்றோ !

மிக அழகாக  உதித்து , பின் அவசரத்தில் உதிர்ந்த பூவை போன்ற ஒரு வாழ்க்கைக்கு சொந்தக்காரர் மெர்லின்  .  பெருக்கெடுத்து ஓடத்தொடங்கிய நதி , பாதி வாழியில் ஆவியானதை  போல காணமல் போன வாழ்க்கைக்கு சொந்தக்காரி . உலக ஆண்களின் கனவுக்கன்னியாக , கவர்ச்சி குறியீடாக , பாலுணர்ச்சியை வடிக்கும் வடிகாலாக  உலகத்தால் மிகத்தவறாக அறியப்பட்ட துரதிர்ஷ்டக்காரி  மெர்லின் !

சில குழந்தைகளுக்கு தன் தகப்பன் யாரென தெரியாது . ஆனால்  மெர்லின் வாழ்வோ , புதிர் நிறைந்தது . மெர்லினின் தாய்க்கே தன் மகளுக்கு தகப்பன் யாரென தெரியாது . காரணம் ஒரே காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களோடு உடலுறவு வைத்திருந்திருக்கிறார்   மெர்லினின் தாய் "க்ளாடிஸ் மன்றோ பேக்கர்" . தாய்க்கே தெரியாத போது , மெர்லினுக்கு எப்படி தெரியும் தன தந்தை யாரென ? . இவள் தன் வாழ்வின் கடைசி அத்தியாயம்  வரைக்கும் தகப்பனின் பாசத்திற்கு ஏங்குகிற சிறுமியாகவே இருந்தார் என்பது பலருக்கு தெரியாது .  தன் வாழ்வில் தகப்பன் என்கிற உறவு மட்டும் வெற்றிடமாக இருந்ததில்  ஆரம்பித்தது மெர்லினுக்கு முதல் மன அழுத்தம் . இவளுடைய தகப்பன் என்கிற நேசத்தின்  தேடல் தான் , இவள்  தன் வாழ்வின் பலதரப்பட்ட ஆண்களோடு  உறவு வைத்திருந்ததற்கு காரணமாக இருந்திருக்க கூடும் . இவள்,  தான் திருமணம் செய்துகொண்ட ஆண்களை "டாடி " என்றே அழைத்தார் என்கிற  செய்தியில்  இருந்து இதை என்னால் அனுமானிக்க முடிகிறது .


மெர்லின் பிறந்த இரண்டு வாரங்களில் , மெர்லினின் தாய் இவளை ஒரு தம்பதியிடம் தத்து கொடுத்திருக்கிறாள் . அவள் பிறந்த இரண்டு வாரங்களில் ஆரம்பித்த இந்த நாடோடி வாழ்க்கை அன்றிலிருந்து மெர்லின் என்கிற பூ , பல கைகளுக்கு மாறி மாறி கடைசியில் மிச்சமில்லாமல் சிதைந்துபோன அவளின்  வரலாறு தான் அன்றைக்கு என்னை நிம்மதி இழக்க செய்தது .  இவள் பல வளர்ப்பு பெற்றோர்களுக்கு  மாற்றி மாற்றி கொடுக்கபட்டாள் . பிறகு ஒரு அநாதை விடுதியில் வந்து விழுந்திருக்கிறது மெர்லினின் வாழ்க்கை . தன் தாய் "க்லாடிசை " அவ்வபோது சென்று பார்த்து வந்திருக்கிறாள் , விதி அவள் தாயின் மன நலத்தை சிதைத்த போது, மெர்லினும் சிதைந்தே போனாள் . மெர்லினின்   தாய் ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் , இவள் மீண்டும் வளர்ப்பு பெற்றோர்களிடமே வந்துவிழுந்திருக்கிறாள் .


இவள் வாழ்வின் உச்சகட்ட சோகம் , மெர்லின் தன் வளர்ப்பு தந்தையாலேயே  வன்புணர்ச்சிக்கு ஆளானாள் என்பது தான் . அதுவும் மெர்லினுக்கு எட்டு வயதாகும்போது  மெர்லினை வளர்த்த "கிம்மல்" என்கிற கிழ நாய் மெர்லினை பாலியல் வன்புணர்ச்சி செய்தது என்பது தான் எனக்கு பேரதிர்ச்சியையும் , தாளா துக்கத்தையும் இவள் வரலாற்றை படிக்கும் போது தந்தது .  கிம்மலை தொடர்ந்து சிறுவயதிலேயே இவள் பலரால் குதறபட்டிருக்கிறாள். "அந்த வயதில் என்னை சுற்றிய உலகம் முழுவதுமே இருண்டு கிடந்தது. வெளியேறும் வழியில்லாமல் பயந்துபோயிருந்தேன்"  என்று மெர்லினே பின்னாளில்  , தன்னுடைய அன்றைய சூன்ய நாட்களை பற்றி சொல்கிறார் . பாவம் மெர்லின் ! வேறென்ன சொல்ல ....

தன் பதினாறாவது வயதில் மெர்லினுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் அவளது வளர்ப்பு பெற்றோர் . இந்த திருமணத்திற்கு பிறகு தான் , தன் கணவனோடு தங்கி இருந்த ஊரில் "டேவிட் கொனோவர் " என்ற புகைப்பட காரனின் கண்ணில் பட்டிருக்கிறார் மெர்லின் . இந்த டேவிட் கொனோவர் தான் "நார்மா ஜீன் மார்டின்சென்" என்கிற அழகு பதுமை "மெர்லின் " என்கிற புது அவதாரம் எடுக்க காரணமாயிருந்திருக்கிறார் . வெறும் ஐந்து டாலருக்கு ஒப்பந்தம் செய்து இவர் மெர்லினை எடுத்த புகைப்படங்கள் பின்னாளில் பல முன்னணி பத்திரிக்கையின் அட்டைப்படங்களில் வந்து அமெரிக்காவை வாய்பிளக்க வைத்திருக்கிறது .

மெர்லின் மீது கொஞ்சம் கொஞ்சமாக புகழின் வெளிச்சம் விழத்தொடங்கிய காலகட்டத்தில் மெர்லினின் முதல் கணவனுக்கும் இவளுக்கு பிணக்கு ஏற்பட்டு அது மண முறிவில் வந்து நின்றிருக்கிறது . அதன் பின்னால் "ஜோ டி மாகியோ " என்கிறவரோடு இரண்டாம் திருமணம் , பின் மூன்று நான்கு என மெர்லினுக்கும் ஆண்களுக்குமான  உறவு நீடித்திருக்கிறது . இதை வெறும் காம கண்ணோட்டத்தில்  மட்டும் பார்க்காதீர்கள் . இவளோடு வாழ்ந்த ஆண்களுக்கு வேண்டுமானால் அப்படி ஒரு தேவையோடு மெர்லினின் காலடியில் விழுந்து கிடந்திருக்கலாம் , ஆனால் மெர்லினுக்கு அப்படி இருக்க அவசியம் இருந்ததாக தோன்றவில்லை . காரணம் , இவள் மூன்றாவதாக கட்டிக்கொண்ட ஆணுக்கு வயது 60  . அவர் வேறு யாருமல்ல பிரபல எழுத்தாளர் "ஆர்த்தர் மில்லர்"  .  முன்னாள் கணவர்கள் மெர்லினை உருகி உருகி காதலித்தார்கள் . ஆனால் மெர்லினோ மூன்றாவதாக வந்த "ஆர்த்தர்" என்கிற 60  வயது எழுத்தாளரை காதலித்திருக்கிறாள் . ஆர்த்தரோடு  படுக்கையை பங்கிட்டபோதும்   இவள்  அவரை "டாடி" என்றே அழைத்திருக்கிறாள் . வெறும் காமத்தேவைக்கா 60  வயது ஆணோடு வாழ துணிந்தாள் மெர்லின் ?

மெர்லின் என்பவள் வெறும் கண்களாலேயே ஆண்களை கற்பிழக்க தூண்டுவாள் , இவளின் மிதமிஞ்சிய காமம் சொட்டும் நடிப்பு பல இளைஞர்களை புரட்டி போட்டது , மெர்லின் என்கிறவள் ஆண்களின் பாலினதேவையின் குறியீடு என்றே இந்த உலகம் தப்பு தப்பாக  பிம்பம் உருவாக்கியது .. .. பெண்கள் என்றால் , அதுவும் சகஜமாக சிரித்துப் பேசும் அழகான பெண்களென்றால் அவர்கள் சுலபத்தில் நமக்கு இசைந்து நம்மோடு படுத்துவிடுவார்கள் என்றே சில ஆண்களின் புத்தி வரையறை செய்திருக்கிறது . அதன் விளைவே இப்படி மெர்லின் காட்சிபடுத்தபட்டாள் . மெர்லின் ஒருபோதும் உடலுறவின் மீது அதீத ஆர்வம் காட்டவில்லை . ஆனால் ஆண்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்க வேண்டும் என்கிற அவளின் மனநிலை தான் அவளை அப்படிப்பட்ட படங்களில் வெறும் கவர்ச்சி பிம்பமாக நடிக்க வைத்திருக்கிறது .  ஆனால் அதுவல்ல மெர்லினின்  நிஜ உருவம் . மெர்லின்  என்பவள் இலக்கியங்களை காதலிக்கிறவளாக , கவிதைகளை காதலிக்கிறவளாக , நாடகங்களை காதலிக்கிறவளாக இருந்திருக்கிறாள் . ஆனால் ஆண்கள் அதை எதையும்  பார்க்கவில்லை , உரித்து தொங்கவிடப்பட்ட அவள் உடலின் சதைகளை தவிர . மெர்லின் நடிகை என்று தெரிந்தவர்கள் கூட , மெர்லின் ஒரு அற்புதமான பாடகி என்பதை தெரிந்திருக்கவில்லை , அல்லது அதை பொருட்படுத்த அவர்களுக்கு விருப்பமில்லை . கிட்டத்தட்ட முப்பதிற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி இருக்கிறாள் மெர்லின். அத்தனையும் பிரபலம் . ஆனால் மெர்லினிடம் இதெல்லாம் யார் எதிர்பார்த்தார்கள் , அவளின் வாளிப்பான உடலை தவிர .

 சிக்மன்ட் ஃப்ராயிட், தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர் என இவளுக்கு இருந்த இலக்கிய தேடல் தான் ,  இந்த அறிவுக்காதல் தான் ஆர்த்தர் மில்லர் என்கிற முதியவரை நோக்கி மெர்லினை அழைத்தது . ஆனால் இதில் சோகம் என்னவென்றால் , மில்லரும் கூட மெர்லினிடம் மண்டியிருந்த அறிவின் ஆர்வங்களை அங்கீகரிக்கவில்லை , மாறாக அவளின் கட்டுடல்  மீது விழுந்து பிரள மட்டுமே மில்லர் ஆசைப்பட்டிருக்கிறார் .

புகழின் வெளிச்சம் இவள் மீது பெரு ஒளியை பாய்ச்சத்தொடங்கிய  போதே , இவள் மனச்சிதைவின் ஆரம்ப கட்டத்தில் காலெடுத்து வைத்துவிட்டாள். இந்த "ஹாலிவுட்  உலகம் ஒரு பரத்தையர் விடுதி " என பின்னாளில் மெர்லின் சொன்னதை போல , மெர்லினை மேலோட்டமாக  சதைகளை மேயவே அங்கு பெருங்கூட்டம் அலைந்துகிடந்திருக்கிறது . ஒரு பக்கம் , மெர்லின்  உலக  இளைஞர்களின் தேவதையாக  விஸ்வரூபம் எடுத்திருந்தாள், ஆனால்  அதே சமயம் இவள் உடம்பிற்குள்ளும்  மனஉளைச்சல் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருந்திருக்கிறது . வலி உணரா மருந்துகளும் , தூக்க மாத்திரைகளும் , மிதமிஞ்சிய குடியும் இவள் வலிகளை குறைக்கவில்லை , மாறாக அது இன்னும் இன்னும் அதிகபடுத்தி இருந்திருக்கிறது .

அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி , மற்றும் அவரின் சகோதரர் ராபர்ட் கென்னடி ஆகிய இருவரும் ஒரே காலகட்டத்தில் மெர்லினோடு உறவில் இருந்திருக்கிறார்கள் . ஆனால் அதுவே மெர்லினை பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது . மெர்லின் ஒரு உளவாளி , கென்னடி இடம் இருந்து ராஜ ரகசியங்களை திருடுகிறாள் என இவள் மீது வசை மாறி பொழிய ஆரமபித்த போது மெர்லின் இன்னும் ஒடிந்து போனாள் .

மிதமிஞ்சிய குடி , அளவுக்கதிகமான தூக்க மாத்திரை , அடிக்கடி நிகழ்ந்த கருச்சிதைவு என மெர்லின்  சிதயதொடங்கினாள். இவளின் புகழ் ஏணி சரியதொடங்கியது . 1962  ஆகஸ்ட்டு ஐந்தாம் தேதி தன்னுடைய வீட்டின் படுக்கையறையில் மெர்லின் இறந்துகிடந்தார் , நிர்வாணமாக .  இறப்பிற்கு காரணம் "அன்றிரவு எடுத்துக்கொண்ட அதிகப்படியான தூக்கமாத்திரை மற்றும் வலியுணரா மாத்திரைகள் " என மருத்துவர்கள் சொன்னார்கள் .


(மெர்லின் படுக்கையில் இறந்துகிடக்கும் புகைப்படம் . மெர்லினின் கடைசி புகைப்படம்)

கொடுமையின் உச்சம் இனி தான் . எந்த உடலை இந்த உலகம் ஆராதித்ததோ , எந்த உடலை நக்கி ருசிக்க நாக்கை தொங்கபோட்டு அலைந்தார்களோ , எந்த உடலின் சந்துகளில் குடி இருக்க இவர்கள் ஆசைபட்டார்களோ அந்த உடல் வாங்க ஆளில்லாமல் பிணவறையில் மூன்று நாட்கள் கிடந்திருக்கிறது . மெர்லின் என்கிற சதை பிண்டத்தில் ரத்த ஓட்டம் இருந்தபோது அவளுக்காக எதையும் செய்ய தயார் என சொன்னவர்கள் , ரத்த ஓட்டம் உறைந்த போது இவளின் பிணத்தை பெற்று இறுதி அஞ்சலி செலுத்தகூட தயாராக இருக்கவில்லை என்கிற செய்தி தான் என்னை அறுத்தது .

மெர்லின் யாரோ ஒரு முகம்தெரியாத  நடிகரோடு  வாய் வழி புணர்ச்சியில் ஈடுபடும் பதினைந்து நிமிட கருப்புவெள்ளை காட்சி 2006  இல் 1 .5 மில்லியன் டாலருக்கு விலை போனது . ஆனால் அந்த சதைக்கு பின்னால் ரத்தமும் வலியுமாய் உணர்ச்சிகள் இருந்தது என்பதை உணரத்தான் இங்கே ஆளில்லை . வெறும் காட்சியை காசு கொடுத்து வாங்கிய உலகம் , இவள் உடலை பெற்று இறுதி மரியாதை கூட செய்ய துணியவில்லை .


தந்தை யாரென தெரியாது , தாய் பைத்தியமாகிபோனாள், வளர்த்த தந்தையாலேயே  வன்புணர்ச்சிக்கு ஆளானாள், காலத்தின் கடைசி அத்தியாயம் வரை  ஆண்களால் கடித்து குதறபட்டாள், வாழ்வு முழுக்க வலி வலி வலி என இருந்தவள்  அதிகப்படியான வலி நிவாரணிகளால் இறந்துபோனாள் என்பது என்னால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை .

மெர்லின் படிக்கபடாமல் கிழிக்கப்பட்ட பொருள் பொதிந்த கவிதை . வாசிக்கபடாமல் உடைத்தெறியபட்ட  இசையின் யாழ் . ஒரு பாடகியாக , ஒரு இலக்கியவாதியாக இவள் உருவாகி இருக்க வேண்டியவள் . இவள் அழகாய் பிறந்து தொலைத்தாள், அதனாலேயே தன் வாழ்வை வெறும் 36  வயதில் தொலைத்து கண் மூடி மண்ணுக்கு இரையாகிப்போனாள் . இனியும்  இவள் வெறும் காமத்தின் குறியீடு , கவர்ச்சியின் பதுமை என எனக்கு சொல்ல தோன்றவில்லை .

மெர்லின்
நீ சபிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததற்காய்
இங்கே ஒரு "டாடி" அழுகிறான் .!

"ஒட்டடை படிந்த என் இளமையின் மீது , நேற்றிரவு ஒரு  நாய் வந்து மூத்திரம் பெய்ததது " என நான் ஒரு சூன்ய காலத்தில்  கிறுக்கிய வரிகள் உன் வாழ்க்கைக்கு பொருந்திப்போவது  எனக்கு வேதனை அளிக்கிறது  மெர்லின் .

மீளாத்துயில் கொள்ளும் எழில் தேவதையே , வலி நிறைந்த வாழ்வில் கிடைக்காத அமைதி , உன் மரணத்தில் கிடைத்திருக்கும் என்று மட்டும் ஆறுதல் கொள்கிறேன் .


-- க.உதயகுமார்


குறிப்பு : இந்த கட்டுரை எழுதப்பட்ட தேதி அக்டோபர் 15 , 2011 . வலைப்பூவில் மீள்பதிவிடுகிறேன்

Thursday, 26 September 2013

வழியனுப்புதல் சுலபமில்லை

உங்களைப் போல்
எனக்கு
சுலபமாக இருப்பதில்லை
வழியனுப்பிவைத்தல்

கையசைத்து
இதழ் விரித்து
பல்காட்டி
வழியனுப்பிவைக்கும்
வழமையில்
எனக்கு உடன்பாடில்லை

குறைந்தபட்சம்
ஆழ்மனதைத்தொடும்
ஒரு முத்தமிடவேண்டும்

உள்ளங்கை பற்றி
ஒவ்வொரு ரேகையாய்
தடவிக்கொடுக்க வேண்டும்

பிசகற்ற அன்போடு
தோள்சேர்த்து
ஸ்பரிசிக்கவேண்டும்

பொய்மையற்ற
புன்னகையொன்றை
வழிச்செலவுக்குப் பகிர வேண்டும்

மிச்சமிருக்கும்
சொற்களனைத்தையும்
பேச்சுத்துணைக்கு
ஒரு கைப்பையில் நிரப்பி
ரயிலேற்ற  வேண்டும்

திடுமென
வெறுமை படர்ந்த
ரயில்  கிளம்பிய
நடைமேடையில்
வேர்பிடிக்க அமர்ந்தபடி
சொட்டுச் சொட்டாய்
புன்கணீர் உகுக்கவேண்டும்
.
.
.
உங்களைப் போல்
எனக்கு
சுலபமாக இருப்பதில்லை
வழியனுப்பிவைத்தல்

~~க.உதயகுமார்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5358