Monday 19 October 2015

மீளுமோ இனி

காற்றில்
எருகஞ்செடி மெல்ல படபடக்க ...

எங்கோ கேட்கிறது
துயர்நிறைந்த பாடலொன்று

இனி எப்போதும் சந்திக்கப் போகிறோம்
என்ற உத்திரவாதங்கள் ஏதுமற்று
பிரிந்தோம் அன்றொரு நாள்

முகமுகமாய் பார்த்துக்கொள்ளவோ
விரல் கோர்த்து பின்
விடிவிக்கவோ
மெல்ல விசும்புகையில்
என் கண்ணீர் துடைத்து முத்தமிடவோ
அன்பொழுக ஏதொன்றும் செய்யாமல் தான்
அன்று பிரிந்தோம்

யாதொரு வலியுமில்லை
என நீயும்
எல்லாவித வலியும் தருகிறது
என நானும்
நம் பிரிவை பற்றிக்கொன்று நிற்கின்றோம்

காற்றில் சலசலக்கும்
குளத்தின் மேற்பரப்பு
சற்று நேரத்தில் அடங்கிவிடும்
என்றல்லவா நினைத்திருந்தேன்
இறுதியில்
எப்போதும் அலையடிக்கும்
கடலாகிப்போனேனே

இன்னமும் காற்றில் ஆடுகிறது
எருகஞ்செடி
காற்றோய்ந்தால் நீ வந்தென்னை
அள்ளிக்கொள்வாயா

No comments:

Post a Comment