Friday 23 October 2015

உனது விசுவாசம்

நடு  நிசிக்கு
பிந்தைய
இரவுகளில்
பயணிக்கிறேன்
பாதாளத்திற்கு
கருமையடைந்த  அதன்
சுவர்களோ
எனை அச்சப்படுத்துகின்றன

மீண்டு வருகிறேன்
நிசி தாண்டி பகல் பொழுதிற்கு
அங்கே
காத்திருப்பதோ
விசுவாசமற்ற
உனதுறவு

அதன் திசைகளில்
வியாபித்திருப்பதோ
சூழ்ச்சிகளும்
ஈரமற்ற காட்சிகளுமே

நான்
நடுங்கிக்கிடக்கிறேன்
அதை
நீயோ
அல்லது
இந்த வாழ்வோ
சட்டை செய்ததாய் தெரியவில்லை

என்னை மீறி
வேகமாக
எங்கோ கடந்து போய்கொண்டிருக்கிறது
இந்த வாழ்க்கை

நீ வினவுகிறாய்
விசுவாசமாய்
இருத்தல் என்றால் என்ன என்று
நான் உனக்கு எப்படி விவரிப்பேன்
உண்மையாய் இருக்கும் நிலையை

என் முகத்துக்கு நேரே
பேசு
என் கண்களை பார்த்து
சிரி 

எல்லா நிலையிலும்
எனை நம்பு

நீரள்ளி  அருந்தசொன்னால்
குடி

நெருப்பள்ளி தின்னசொன்னால்
தின்று தீர்

வலிக்கிறது என்று நான் சொல்லுமுன்பே
என்  வலியுணர்

வழியும் என் கண்ணீரை
உண்மையென நம்பி
உள்ளங்கையில் பொத்திக்கொள்

என் உடல்சூட்டில்
துளி துளியாய்  நம்பி கரைந்துவிடு

என் காலடிசுவடுகளின்
பாதையை தேடிவந்து 
ஒழுக்கத்தை சந்தேகிக்காதே
ஒருபோதும்
எனது நிர்வாணத்தில்
களங்கம் காணாதே

நான் அழுதிருக்கும் வேளையில்
எனது விரல்களுக்குள்
உனது
விரல்களை நுழைத்து
இறுக்கி அணை
உண்மையாய்  இருப்பதை
வேறெப்படி நான் விவரிக்க

இது தான்
இப்படி இப்படியாக இருப்பது தான்
விசுவாசம்

நான்
விசுவாசித்திருந்தேன்
உனது
உறவை
உனது
ஆன்மாவை
மற்றும்
உனது
கண்ணீரை

ஆனால்
நீயோ
என்னிடம் வேண்டியது
மிரட்டல் தொனியில்
சில உத்திரவாதங்களை
மற்றும் சில சந்தேகங்களை

எப்படி
பொருந்திப்போகமுடியும்
இப்படியொரு உறவுக்குள்

உனதுறவு
எனக்கு
பூட்டிவிட்ட சிறகுகளை
நான்
இரக்கமின்றி துண்டித்துக்கொண்டேன்
உன் மீதான
எனது விசுவாசங்களை
காற்று வெளிதனில்  பறக்கவிட்டுவிட்டேன்

நான் இப்போது
உணர்வதோ
கனமற்ற ஒரு மேகத்தை போல

No comments:

Post a Comment