நான் உன்னை தேடிக் கொண்டிருப்பதைப் பற்றி
உனக்கு கவலையொன்றுமில்லை
என் அழுகையை
ஒரு கோமாளியின் நாடகக் கண்ணீர் என
கடந்து போக சுலபமாக இருக்கிறது
எத்தனையோ உதாசீனங்களுக்கு பிறகும்
உன் கைபேசி எண்ணை மீண்டும் அழுத்தும்
என் நேசத்தை பற்றி
உனக்கு அக்கறையொன்றுமில்லை
நீ வந்திராத திசைகளில்
உன் வருகையை எதிர்ப் பார்த்திருந்த நாளில்
வீசியதெல்லாம் தேரிக்காற்று தான்
இருந்தும் கைகளில் பிரியங்களை பொத்திக் கொண்டு
சோட்டுக்காரனுக்கு கொடுக்க
கையில் நீர்வடியும் மிட்டாயோடு
நின்றிருக்கும் சிறுவனென காத்திருந்தேன்
உன் சொற்கள்
எளியோர் அவையில் வாய்திறக்கப் போவதில்லை
உன் பிரியங்கள்
காயப் பட்டவர்களுக்கு களிம்பாகப்போவதில்லை
உன் நேரம்
யாசித்தவருக்கு பதில் கூறாது
உன் அலாதி அன்பும்
உடைந்தழுபவர்களுக்கில்லை என்றான பின்
காத்திருப்பதில்
அர்த்தமொன்றுமில்லை
விடைபெறுகிறேன்
உன் திசைக்கு முற்றிலும்
எதிர் திசை நோக்கி
அங்கொரு அணில் இருந்தால் போதும்
மிச்ச அன்பை அணிலுண்ணக் கொடுப்பேன்