Monday 30 December 2013

காற்றில் கலந்துவிட்ட இயற்கை காதலன் நம்மாழ்வார்



இயற்கையை நேசிக்கிறவன் இன்பமாக வாழுகிறான் . அவனுக்கு பரமானந்தம் இங்கேயே வாழும் காலத்திலேயே கிடைத்துவிடுகிறது என்பதை இயற்கை  விஞ்ஞானி  நம்மாழ்வாரை பார்த்து படித்து தெரிந்துகொள்ளலாம் .

"செடி ஒன்றை நட்டுவைத்து, அது வளர்வதையும் மொட்டுவிடுவதையும் காய்ப்பதையும் கவனித்துவந்தால், மனதுக்குள் குதூகலம் பிறக்கும்." என்ற அவரின் கூற்று எத்தனை உண்மையானது . ஆனந்தவிகடனில் ஒரு முறை இதை படித்துவிட்டே நான் சென்னையில் தங்கி இருந்த வீட்டின் பால்கனியில் தொட்டிச் செடிகளை வளர்க்க ஆரம்பித்திருந்தேன் . வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு "தொட்டிச் செடிகள் " தானே விதிக்கப் பட்டிருக்கிறது . காலையில் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றுவது , சில நேரங்களில் அவைகளோடு பேசுவது என நம்மாழ்வார் சொன்னது போல செடி ஒன்றை வளர்ப்பது மனதை இலகுவாக்கி மகிழ்ச்சியை விதைக்க வல்லது .

வேளாண் துறையில் பட்டம் பெற்று நம்மாழ்வார் ஒரு அரசு பணியில் சேர்ந்தாலும் , பொருளீட்ட அல்ல நான் படிப்பை படித்தது என வேளாண் சார்ந்த விவசாய விழிப்புணர்வுக்கு  தன்னை அர்ப்பணித்தவர் . நம்மாழ்வார் இல்லாமல் போயிருந்தால் , வேப்பிலை நமக்கு உரிமையானது இல்லை . ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி வேப்பிலைக்கான  காப்புரிமையை நமக்கு மீட்டுக் கொடுத்தவர் நம்மாழ்வார் .

திருக்குறளை விவாசய விழிப்புணர்வுக்கு இவர் அளவுக்கு வேறொருவர் பயன்படுத்தி இருக்கமாட்டார்கள் . திருக்குறள் ஒரு நீதி இலக்கியம் , அரசியல் இலக்கியம் என்று மட்டுமில்லாமல் அது மக்களின் வாழ்க்கைமுறைக்கும் உணவு முறைக்குமான இலக்கியமாக அடையாளப் படுத்தியதில் நம்மாழ்வாரின் பங்கு மிகப் பெரியது . 

‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை’

'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்’  

"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்."

என்றெல்லாம் இவர் எடுத்தாண்ட திருக்குறள்களின் மூலமாக தான் சொல்லவருகிற செய்தி எவ்வளவு முக்கியமானது என ஆதாரப் பூர்வமாக நிறுவ விரும்பியவர் நம்மாழ்வார் . 

காடும் , அதன் வழியாக பெருகும் நீருமே  மக்களுக்கு முக்கிய பாதுகாப்பு . ஆனால் மரங்களை வெட்டி காட்டை அழித்து வெறும் ரோடு போட்டே முன்னேறிவிடலாம் என்று சொல்கிற இம்மக்கள் முட்டாள்கள் என்று சொன்ன நம்மாழ்வாரின் வாதம் அசட்டயானது அல்ல . 

தன் செயல்பாடுகள் மூலமும் , விழிப்புணர்வு மூலமும் எத்தனையோ இளைஞர்களுக்கு விவாசயத்தின் மீது காதல் வர காரணமாயிருந்தவர் . அனேக விவசாயிகளை இயற்கை வேளாண் பக்கம் திருப்பியவர் . என் முப்பாட்டன் முடிதிருத்தும் தொழில் செய்தார் . என் பாட்டன் அதையே பின்பற்றினார் . அப்பா படித்து அரசாங்க வேலையில் கிடந்தார் . இப்படியான விவாசயத்தின் பக்கம் தலைவைத்திராத என்னை போன்றவர்களை கூட "நான் சொல்வதை கேளுங்கள் ..." என்று திரும்பிப் பார்க்க வைத்தவர் . விவசாயத்திர்க்கென கைப்பிடி நிலம் இல்லாத நான் நம்மாழ்வாரின் "உழவுக்கும் உண்டு வரலாறு " , "தாய் மண்ணே வணக்கம்" , "நோயினைக் கொண்டாடுவோம்" , "எந்நாடுடையே இயற்கையே போற்றி " , "களை எடு " என அவர் எழுதிய புத்தகங்களை காதலோடு வாங்கிப் படிக்க வைத்தவர் .  இவைகளை பற்றி நண்பர்களோடு அனேக கூட்டங்களில் விவாதிக்கவும் செய்திருக்கிறோம் .  

நம் மண்ணில் விளைகிற பொருட்களே நம் உடம்புக்கு ஏற்றது என தெளிவாக சொல்லிப் போனவர் . ஆப்பிளை காட்டிலும் கொய்யாக் கனிகளே நம் உடம்புக்கு இனிய நண்பன் என்று நம்மாழ்வார் சொல்லும்போது மண்டையில் ஏறியது . நெல்லிக்காய்களில் இல்லாத ஊட்டச்சத்துக்கலையா பிற இறக்குமதி செய்யப் பட்ட பழங்களில் கண்டுவிட்டீர்கள் என்று இவர் சொன்ன பிறகு நம் மண்ணில் காய்கனிகள் நமக்கு அருமருந்து என்பது புரிந்தது . ஆலிவ் எண்ணைக்கும் நம் மண்ணுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ? எள்ளில் இருந்து நாம எடுக்கிற நல்லெண்ணெய்  போன்ற வரபிரசாதம் கிடைத்தும் நாம் அவைகளை புறந்தள்ளி விளம்பரங்களில் மோகம் கொண்டு பொய்யான கவுரவத்துக்கு உணவு முறைகளை மாற்றிக் கொள்கிறோம் என்று நம்மாழ்வார் சொன்ன போது மனம் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டது . 

இங்கே ஆயிரம் அரசியல் வாதி செய்ய முடியாததை நம்மாழ்வார் சாதித்துக் காட்டினார் . மெத்த படித்த மேதாவி பிரதமர் ஒருவர் "விவாசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களை மேற்கொள்ள வேண்டும் " என்று சொன்ன பொழுது , விவசாயத்தை கைவிடுகிற நாடு தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று சம்மட்டியால் அடித்தார் .  தொழிற்சாலைகளுக்கு விலை நிலங்களை அரசுகள் ஒதுக்கீடு செய்த பொழுது , "கிராமங்களில் இருக்கின்ற நிலங்கள் மூன்றே மூன்றிற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஒன்று: மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்காதபடி அங்கேயே குளம் வெட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும். இரண்டு : அங்குள்ள ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்களை உண்டு பண்ண பயன்படுத்த வேண்டும். மூன்று. : அங்கேயும் காற்று சுத்தமாக, மழை வர, குளிர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காக மரங்களை நட பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றிற்கும் தவிர, வேறு எதற்கும் கிராமத்தின் நிலத்தை இவர்கள் கொடுக்கிறார்கள் என்றால், வேறு ஏதோ ஆதாயம் கருதி செய்கிறார்கள் என்று அர்த்தமே தவிர நாட்டு நலனுக்காக செய்வதற்காக அல்ல"  என்று துணிச்சலாக ஆளுகிறவர்களின் மக்கள் விரோத போக்கை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் .  கூடங்குளம் அணு உலை வருவதே தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக மாற்றத்தான் என சில "திடீர் விஞ்ஞானிகள்" ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேட்டியாய் கொடுத்துக் கொண்டிருந்தபொழுது , "இன்னும் எத்தனை காலத்திற்கு மக்களை ஏமாற்றி மக்கள் தலைக்கே நீங்கள் கொல்லி வைக்கப் போகிறீர்கள் " என இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக நின்ற போராளி நம்மாழ்வார் ..

வெளிநாட்டு விதைகளை , வெளிநாட்டு பூச்சிக் கொல்லி மருந்துகளை எல்லாம் "பசுமை புரட்சி" என்ற பெயரில் இந்தியாவுக்குள் கொண்டுவந்தவரை கொண்டாடிய அரசுகள் விருது கொடுத்து கவுரவித்த அரசுகள் எங்கள் நம்மாழ்வாரை மட்டும் தொடர்ந்து புறக்கணித்தது . தன பாக்கெட்டுக்கு ஆதாயம் இல்லாமல் இது வரை எந்த அரசுகள் இன்னொருவரை அங்கீகரித்திருக்கிறது ? அதிலும் "இந்தியாவில் 15,000 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்க நாடு உருவாகியே 300 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது. விவசாயத்தில் இத்தனை ஆண்டு அனுபவமிக்க இந்தியா, அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்பது வெட்கமாக இல்லையா?"  என்று சட்டையை பிடித்து கேள்விக் கேட்கிற விஞ்ஞானியை  எந்த அரசுகள் தான் விருதுகளால் கௌரவப்படுத்தும் ? மரபணு மாற்றம் செய்யப் பட்ட "பிடி கத்திரிக்காய்களுக்கு" இந்தியா தன் கதவுகளை அகலமாக திறந்து விட்ட பொழுது  , "அந்த விதைகள் நம் குடலுக்கும் ஏற்றதில்லை , நம் நிலத்துக்கும் ஏற்றதில்லை " என விவசாயிகளுக்கு புரியவைத்து அவர்களை ஒன்று திரட்டி போராட்ட களத்துக்கு கூட்டி வந்தவரை அரசுகளுக்கும் முதாளித்துவ முதலைகளுக்கும் எப்படி பிடிக்கும் ..?  இவர்கள் விருதுகளை கொடுப்பதற்கு பின்னணியில் எல்லாம் மிகப் பெரிய அரசியல் இருக்கிறது என்பது நமக்கு தெரியாதா என்ன ?  

சச்சின் டெண்டுல்கர் செய்தது எவ்வளவு பெரிய சாதனை . இந்த மண்ணை மக்களை தன் ரன் குவிப்பால் எவ்வளவு மெருகேற்றி இருக்கிறார் . அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க இங்கே எத்தனை விவாதங்கள் , நாடாளுமன்றமே கூடி ஒரு நாள் விவாதிக்கிறது . அவருக்கு விருது கிடைக்கவும் அவரை MP ஆக்கி மக்களுக்கு உழைக்கவும் !?!? வாய்ப்பு கொடுத்த அரசாங்கங்கள் , நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானியை அவர் தன் வாழ்வு முழுக்க  இந்த மண்ணுக்காக மக்களுக்காக குரல் கொடுத்த விடயங்களை காதில் வாங்கிக் கொள்ள கூட தயாராக இல்லை என்பது தான் பெருத்த வேதனைக்குரிய விடயம் .   மத்திய அரசு "ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்" என்ற தனியார் நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து கொண்டு காவிரி படுகை நிலத்தில் மீத்தேன் வாயுவை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட திட்டமிட்டதும் , " இது மட்டும் நடந்தால் , காவிரிப் படுகை உப்பளமாக மாறும், வங்கக் கடல் நீர் விவசாய நிலத்தை ஊடுருவும்  " என்று தள்ளாத வயதிலும் தெருவில் இறங்கி போராடினார் . எங்கள் மண்ணின் மூத்த விஞ்ஞானிக்கு போதிய அங்கீகாரத்தை அரசுகள் வழங்கவில்லையே என நாம் கவலைபடுகிறோமே  ஒழிய ,  நம்மாழ்வார் விருதுகளை எதிர்நோக்கி எப்போதும் காத்திருந்ததில்லை . மக்கள் நலன் சார்ந்து மண் நலன் சார்ந்து தன் காலத்தை  எல்லாம் கரைத்து ஆய்வு செய்து தான் வைத்திருக்கும் திட்டங்களுக்கு கொஞ்சம் செவி சாயுங்கள் என்பது தான் நம்மாழ்வாருக்கு இந்த மத்திய மாநில அரசுகளிடம் இருந்த அதிகபட்ச எதிர்பார்ப்பு .ஆனால் மனிதம் போற்றும் இவ்விஞ்ஞானியை எப்போதும் அரசுகள் செவி கொடுத்து கேட்டதில்லை என்பது எவ்வளவு துரதிர்ஷ்ட்டமானது . 

"உழுது விழித்து அறுப்பாருக்கு உணவில்லை. பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வமெல்லாம் உண்டு"  என்ற பாரதியின் வரிகளை இன்னும் இன்னும் சத்தம் போட்டு பாடி விவாசய பெருங்குடிகளுக்காக வாழ்நாளெல்லாம் வருத்தப் பட்ட  மகோன்னத  ஆன்மா  இன்றைக்கு  காற்றில் கரைந்துவிட்டது . "இங்கே எப்போதும் எளிய மக்களுக்கு எதிராக அநீதியை கட்டவிழ்விக்கவே பணம் படைத்தவன் அதிகாரம் கொண்டவன் தன் வாழ்நாளை செலவு செய்கிறான் " என இன்றைய சமூகத்தின் கசப்பான உண்மையை கிராமங்களில் வேர்கொண்ட மனிதர்களுக்கு புரியவைக்க வாழ்வெலாம் பாடுபட்ட எங்கள் இயற்கை நேசன் இயற்கையோடு சேர்ந்துவிட்டார் .  

நம் மண்ணுக்கும் ,மரம் செடி கொடிகளுக்கும்  , வாயில்லா பிராணிகள் அத்தனைக்கும் ,  மக்களுக்கும் ஈடுசெய்யவே முடியாத பெரிய இழப்பு , நம்மாழ்வாரின் மரணம் . இறந்தவர்களை "இயற்க்கை அடைந்தார் " என்று சொல்கிற வழக்கம் உண்டு . எனக்கென்னவோ அந்த வாக்கியம் அது நம்மாழ்வாருக்கு இன்னும் கச்சிதமாக அர்த்தத்தோடு பொருந்துவதாக தோன்றுகிறது .

நம்மாழ்வார் இயற்கையை அடைந்திருக்கிறார் . சோற்றில் கைவைக்கும்போதேல்லாம் உம்மை நினைத்துக் கொள்வோம் எங்கள் மண்ணில் விளைந்து எங்கள் மண்ணுக்கே உரமான ஆழ்வாரே .....


வெறும்  கண்ணீர்த்துளிகளையும் சம்பிரதாய இரங்கல் கூட்டங்களையும் , அடையாள மலர்வளையங்களையும்  அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார் .மரங்களையும் மண்ணையும் விவசாயத்தையும் விவசாயிகளையும் போற்றிப் பாதுகாப்பதே இந்த அரசும் மக்களும் நம்மாழ்வாருக்கு செய்யவேண்டிய உண்மையான அஞ்சலி . 

--க.உதயகுமார் 

Monday 23 December 2013

இப்போது எப்படி உணர்கிறாய் சில்வியா ....



பிரியத்திற்குரிய  சில்வியா , 


நீ விடுதலை அடைந்த பிறகு இப்போது எப்படி உணர்கிறாய் ?  


என்ன இவன் நலன்களை விசாரிக்காமல் எடுத்த உடனேயே கடிதத்தை இப்படி துவக்குகிறான் என்று நினைக்கிறாயா ? உனக்கோ எனக்கோ அவைகளை  பற்றி பேசி என்ன ஆகப் போகிறது .  நீ முன்பொரு முறை உன் காரை வேகமாக ஓட்டிச்சென்று மோதி தற்கொலைக்கு முயன்றாயே அதன் பிறகு உன்னை நான்  மருத்துவமனைக்கு வந்து பார்த்தேன் . "சில்வியா நீ நலமாக இருக்கிறாயா ?" என்று கேட்டபொழுது உன் உதடுகள் வறண்டு சுருங்கிக் கிடந்தன . உன் கண்களில் எந்த ஒளியுமின்றி அவை என்னை வெறித்துப் பார்த்தது . அதிலிருந்தே உன்னிடம் "நீ நலமாக இருக்கிறாயா " என்று நான்  கேட்பதில்லை . 


எப்படியாவாது சாவை எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்று சதா முயன்று கொண்டிருக்கிறவளை , வாழ்தலின் கணங்கள் கழுத்தை நெரிப்பதாக தூக்கத்தில் அலறிதுடிக்கிறவளை  நான் "நலமாக இருக்கிறாயா " என்று கேட்பதைவிட ஒரு அபத்தம் உண்டா .... நீ நலமாக இருக்கிறாயா என்று எப்போதும் கேட்கமாட்டேன் சில்வியா . 


உனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை . அப்போது நீ மயக்கத்தில் இருந்தாய் . உனக்கு இருபது வயதிருக்கும் அப்பொழுது . நாற்பது தூக்கமாத்திரைகளை விழுங்கிவிட்டு சாவகாசமாக உன் வீட்டின் நிலவறைக்கு சென்று படுத்துக் கொண்டாய் . நான் அப்போது உன்னை பின்தொடர்ந்தேன் . மிகுந்த அழகோடு நீ இருந்தாய் . சாவதற்கு முன்னால்  அழகு மிளிரும் என்று எனக்கு தோன்றியது . நான் உன் அருகில் தான் இருந்தேன் . எனக்கு விடுதலை வேண்டும் விடுதலை வேண்டும் என்று தான் கடைசியாக நீ முனகிய வார்த்தைகள் . உன் தலையை எடுத்து என் மடி மீது கிடத்திக் கொண்டேன் . உன் முகத்தில் வியர்வைகள் பூக்கத்தொடங்கியபோழுது அவைகளை துடைத்துவிட்டு நானுனக்கு ஒரு பாடல் பாடினேன் ....


லா லா லா லா லா லா பூவொன்று உடல் உதிர்ந்து பூமியை நீங்கும் பின்னொருநாள் நானும் பின்தொடர்வேன் சில்வியா லா லா லா லா லா லா 


நான் பாடிக்கொண்டிருந்தபொழுதே  நீ வாந்தி எடுத்தாய் . எனக்கு அப்போதே தெரிந்தது நீ பிழைத்துக் கொள்வாய் என்று ...


ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ நீ துர்பாக்கியசாலி சில்வியா நீ துர்பாக்கியசாலி சில்வியா லா லா லா லா லா லா 


என்று நான் மீண்டும் பாடத் தொடங்குகையில்  உன்னை கண்டுபிடித்துவிட்டார்கள் . அவர்கள் உன்னை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடிய பொழுது எனக்கு என்னவோ அவ்வளவு அழுகையாக வந்தது . உன் வலி இன்னதென்று எனக்கு புரிந்திருந்தது சில்வியா ...நான் முகத்தில் அறைந்து கொண்டு தரையில் விழுந்து அழுதேன் . உனக்கு இது நினைவிருக்காது . நீ அப்போது மயக்கத்தில் இருந்தாய் . நான் எப்போதும் உன்னிடம் நலமாக இருக்கிறாயா என்று கேட்கவே மாட்டேன் சில்வியா ....அந்த கேள்வியை எதிர்கொள்வது உனக்கு கூடுதல் சித்ரவதையாக இருக்கும் என்பது எனக்கு தெரியும்தானே ...


உனக்கு இன்னொன்று தெரியுமா சில்வியா உன் மகன் நிக்கலஸ் தூக்கிட்டுக் கொண்டான் . என்னிடம் அவன் காரணம் எதையும் சொல்லவில்லை . எப்போதும் மன அழுத்தத்தில் இருந்தான் . அவனுடைய சடலத்தை கீழிறக்கும் போது அவனும் அத்தனை அழகாக இருந்தான் . ஒரு குளிர்காலத்தில் இரவில் நான் அவனுக்கு காப்பிப் போட்டு கொண்டுவந்தேன் . இந்த காப்பி இனிக்கிறது எனக்கு கசப்பாக போட்டுக் கொடு உதயா என்று கேட்டான் . சரி என நானும் கசப்பை கூட்டி தயார்செய்து கொடுத்தேன் . ஆனால் நிக்கலசோ இன்னும் கசப்பை கூட்டு கசப்பை கூட்டு என்று அழத் தொடங்கிவிட்டான் .  எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை . சமயலறையில் இருக்கும் கத்தியில் என் கையை கிழித்து இரண்டு சொட்டு ரத்தம் கலந்தேன் . அப்போது நிக்கலசுக்கு அந்த காப்பி மிகவும் பிடித்திருந்தது . ருசித்து ருசித்து குடித்தான் . உன் மகன் நிக்கலஸ் உன்னைபோலவே கசப்பு சுவை விரும்புகிறவனாகவே இருந்தான் . ஆனால்  எப்போதும் மன அழுத்ததிர்க்கான காரணத்தை அவன் என்னிடம் சொல்லவே இல்லை . அவன் மரணித்த பிறகு தாயின் தற்கொலை தான் நிக்கலசை கொன்றது என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள் . நான் அதை கிஞ்சித்தும் நம்பவில்லை சில்வியா .... 


நிக்கலஸ் இறந்த பிறகு நான் அந்த வீட்டுக்கு போகவில்லை . நீ போயிருந்தாயா சில்வியா ..? சரி எப்போதாவது போனால் நிக்கலஸின் படுக்கைக்கு வலப்புறமாக ஒரு காகிதத்தில் என்னவோ வரைந்து ஒட்டி வைத்திருக்கிறான் . அது எனக்கு இன்னதென்று  புரியவே இல்லை . நீ பார்த்து எனக்கு விளக்கம் சொல் சில்வியா . நீரற்ற ஒரு நதி . அதில் கவிழ்ந்துகிடக்கிற ஒரு படகு . படகின் மீதெங்கும் ரத்தம் வழிகிறது ....அவன் என்ன தான் அந்த வரைபடத்தில் சொல்ல வருகிறான் என்று எனக்கு புரியவே இல்லை . உன் மகனின் ஓவியம் உனக்கு நிச்சயம் புரியும் . நீ பார்த்து எனக்கு சொல் . நிக்கலஸ் என்னிடம் சொல்ல நினைத்ததை புரிந்துகொள்ள எனக்கு விருப்பமாக இருக்கிறது .


என்னவோ கேட்க வந்து எதைஎதையோ பேசிக் கொண்டிருக்கிறேன் இல்லையா .....சரி சொல் ...நீ விடுதலை அடைந்த பிறகு இப்போது எப்படி உணர்கிறாய் ?  


உனக்கு எப்படி அப்படி தோன்றியது ....? அடுப்பை திறந்து உள்ளே தலையை வைத்துக் கொண்டு எரிவாயுவை திறந்து மெல்ல மெல்ல மரணத்தை உள்ளிழுத்துவிடவேண்டும் என்று உனக்கு எப்படி தோன்றியது ? நான் அன்றைக்கு உன்னோடு அங்கிருந்திருந்தால் உன் இறுதிக் கணங்களை பார்த்திருப்பேன் . உன்  வலிகளை  எல்லாம் பார்த்திருந்தவன் நீ விடுதலை அடையும் நிமிடங்களை தவறவிட்டேன் என்பது எனக்கு மிகுந்த அழுகையை தருகிறது . அப்போது உனக்கு வலித்ததா சில்வியா . கார்பன் மோனோ ஆக்சைட் நறுமணம் எப்படி இருந்தது ? உனக்கு பிடித்திருந்ததா ...இல்லை நுரையீரலில் வலியுணர்ந்தாயா ....வலித்திருந்தாலும்  அது வாழ்தலின் வலியை  விட குறைவாகத்தான் இருந்திருக்கும் இல்லையா 


இப்போது எப்படி உணர்கிறாய் சில்வியா ....நீ விரும்பிய மரணத்தை எப்படியோ தழுவிவிட்டாய் . உனக்கு பிடிக்கவே படிக்காத வாழ்தலின் பக்கங்களை கிழித்து கிழித்து காற்றில் வீசி மகிழ்ச்சியோடு தீர்ந்துவிட்டாய் ...இப்போது எப்படி உணர்கிறாய் ....


உன்னிடம் யாரேனும் இப்போதும் சொல்கிறார்களா "ஏன்  சில்வியா மகிழ்ச்சியான கவிதைகளையே நீ எழுதுவதில்லை " என்று ..? நீ பாக்கியசாலி வாழ்கையில் இருந்து தப்பிக்கும்பொழுது அப்படியான கேள்விகளிடமிருந்தும் தப்பிச் சென்றுவிட்டாய் ... நான் உன்னிடம் சொன்னதே இல்லை ...எனக்கு நீ எழுதியதில் மிகப் பிடித்த கவிதை எது தெரியுமா ..? உன் கணவனை கொலை செய்ய வேண்டும் என்று எழுதி இருப்பாயே  அது தான் இப்போதும் என் விருப்பத்திற்குரிய கவிதை ...நான் சமீபத்தில் பாஸ்டன் நகரத்திற்கு போயிருந்தேன் ..காற்றெங்கும் உன் வாசனையாகத் தான் இருந்தது ... ஒரு கருகிய பூவின் வாசனை போன்ற அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது ..பிறகு அழுதுவிட்டேன் சில்வியா ...


நான் உன்னை சந்திக்க வரும்நாளில் உனக்கும் மிகுந்த கசப்போடு ஒரு காப்பி போட்டு கொண்டுவருகிறேன் ... நிக்கலசுக்கு பிடித்த  அதே சுவையில் ... அதற்கு முன் நீ இப்போது எப்படி உணர்கிறாய் என்பதை எனக்கு கடிதமாக எழுது . 


நான் காத்திருப்பேன் என் பிரியத்திற்குரிய  சில்வியா ..... நிக்கலசுக்கு என் அன்பான முத்தங்களை தெரியப் படுத்து .



க.உதயகுமார்
29-Nov-2013

Thursday 19 December 2013

..........................

நான் கடலேறிப்போய் 
அதற்கப்பால் ஒரு கானகம் புகட்டுமா...
ஏதோ ஒரு மரம் 
ஏதோ ஒரு நதி 
எனக்கே எனக்கென அங்கிருக்காதா 
எனக்கென ஒரு ஊர்குருவி 
அங்கந்த பாடலை இசைக்காதா 
நதியில் மிதக்கும் இலையில் 
சேர்ந்தென் 
ஆவி போக்கட்டுமா 
என்னை கேள்விகேட்காத மலரின் இதழ்களில்
முத்தமிட்டு மரிக்கட்டுமா
என்னை சந்தேகிக்காத மானொன்றோடு
களித்து நடனமிட்டு
உயிர் நீங்கி உய்க்கட்டுமா

எனக்கென்ன இருக்கிறது இங்கே
புரிந்துகொள்ள யாருமற்ற ஊரைவிடவும்
புரிந்த காடொன்று உசிதமில்லையா

Wednesday 4 December 2013

வேறென்ன கேட்டுவிடப் போகிறேன்

அதிகபட்ச எதிர்பார்ப்பு வேறொன்றுமில்லை .
நேசம் ததும்ப ஒரு சொல் 
இந்நாளை அழகாக்க ஒரு புன்னகை 
இவ்வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கவென கொஞ்சமே கொஞ்சம் பிரியம் 
இது தான் 
இவ்வளவே தான்

Monday 2 December 2013

நான் வந்துவிடுவேன் செந்தூரா ...

அன்பு நிறைந்த செந்தூரா ,


உன் அண்ணன் உதயகுமார் உனக்கு எழுதும் முதல் கடிதம் . போர்க்களத்தில் தொலைந்துபோனவர்களில் ஒருவரான  உன் அண்ணனுக்கு நீ எழுதிய ஆறாவது கடிதம் கிடைக்கப் பெற்றேன் . கடிதத்தை படித்து தரையில் சாய்ந்த பொழுது கண்கள் சரஞ்சரமாய் அழுதது . 


நீ முன்பொரு முறை எழுதிய கட்டுரையில் "எனக்கும் உதயகுமாருக்கும் தீபசெல்வனுக்கும் இளவேனிலுக்கும்  கனவுகள் உண்டு . நாங்கள் கொல்லப்  படுவோம் . எங்கள் கனவுகளோடு சேர்த்தே நாங்கள் கொல்லப்  படுவோம் " என்று குறிப்பிட்டிருந்தாய் அல்லவா ...எனக்கு இப்பொழுது தோன்றுகிறது , நாம் அப்படி கொல்லப்பட்டால் தான் என்ன ? நாம் கொல்லப்  படவேண்டியவர்கள் தான் . புழுத்து நெளியும் இச்சமூகத்தில் எதன்  நிமித்தம் நாம் வாழவேண்டும் ?  நாம் செத்திருக்கவேண்டியவர்கள் . ஆனால் காலம் எப்படியோ நம்மை தப்பிக்கவைத்தது . ஆனாலும் சோதரனே நம் தலைக்குமேல் எப்போதும் ஒரு கத்தி தொங்குவதை நீயோ நானோ இளவேனிலோ தீபனோ உணராமல் இல்லை . நமக்கு மரணத்தை பற்றிய அச்சமும் எப்போதும் இருந்திருக்கவில்லை . நம்மில் ஒருவன் மரணம் எப்போதுவேண்டுமானாலும் தன் வீட்டுக்  கதவை தட்டும் என்று தெரிந்தே நாம் எவ்வளவு தடுத்தும் விமானம் ஏரினான் . சப்பாத்துக் கால்களுக்கு பயப்படுகிறவர்களாக  நம்மில் ஒருவனும் இல்லை . அப்படி ஒரு பயத்தை இன்னொருவனின் கண்ணில் பார்த்துவிட்டால் அவன் நம்மோடு இருக்க உகந்தவனில்லை என்று கூட தீர்மானித்திருந்தோம் . உண்மையில் மரணம் தான் நம்மை நெருங்க அச்சப் படுகிறது . வலியப்போய் தழுவ நினைத்தாலும் நம் உடலின் வெப்பம் பொறுக்காமல் அது விலகி ஓடிவிடுகிறது . 


நம்முடைய மரணம் இயற்கையாக இருக்காது என்பதிலும் உனக்கோ எனக்கோ மாற்றுக் கருத்து இல்லை . அன்றைக்கு தொலைபேசி உரையாடலில் சொன்னாய் தெரியுமா "திசைகள் தெரியாமல் எங்காவது பாடல்களை பாடிக் கொண்டே பயணிப்போம் , சலிக்கும் நேரத்தில் பறவைகளை போல பறந்துவிடலாம் அண்ணா " என்று ...எனக்கு அந்த தீர்மானம் பிடித்திருந்தது . ஒன்று நம்மை கொல்வார்கள்  இல்லையேல் நாமே நம்மை கொலைசெய்து கொள்வோம்  .


நான் வந்துவிடுவேன் செந்தூரா ...கலை இலக்கிய சமூக தளங்களில் இயங்கவேண்டும் என்பது நம்முடைய கனவுகளில் ஒன்றாக இருக்கிறது . வாழ்வு சலிப்பதர்க்கு முன்னதாக நாம் அழுந்த நம் தடங்களை பதிவு செய்ய வேண்டி இருக்கிறது . மாவீரர் துயிலும் இடங்களை பார்க்கையில் இது இன்னும் இன்னும் நமக்கு உறுதிப் பட்டிருக்கிறது இல்லையா ...கடற்கரையில் ஓடித்திரியும் நண்டுகளை பார்த்திருக்கிறாயா நீ ?  சொற்ப வாழ்விலும் அவை தன்  காலடித்தடங்களை வரைந்துவைத்துவிட்டு செல்கின்றன . நாம் விடைபெறுவதற்கு முன்னதாக இங்கே செய்யவேண்டியவைகள் இருக்கிறது என்பது நான் சொல்லி உனக்கு தெரியவேண்டியதில்லை . உன் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் "இறையாண்மையை காக்க புனிதப் படுகொலைகளை " செய்த அரசர்களின் கால்களை நக்கி பிழைப்பு நடுத்தவோ அரசிகளின் கூந்தலுக்கு சிக்கெடுக்கவோ அல்ல , வலிந்து நம் மீது திணிக்கப் பட்ட நாம்  கொஞ்சமும் விரும்பாத அடையாளங்களுக்காக அல்ல , எதன்  நிமித்தமும் யார் செருப்பையும் சுமக்கவேண்டிய கட்டாயமும் நமக்கு இல்லை . மாறாக ஒரு நாள் நாம் நம்மில் இருந்தே நெருப்பை வெளியில் எடுக்கப் போகிறோம் . இப்போதைக்கு என்னை நினைத்துக் கொண்டு சாந்தமாய் இரு என் சகோதரா ...


இப்போதும் உன்னை முதன் முதலில் சந்தித்த நாள் பசுமையாக இருக்கிறது தம்பி . "ஜெய் பீம் " ஆவணத் திரைப்படத்தின் பதிவை கொடுக்க இளவேனில் வேளச்சேரிக்கு என்னை சந்திக்க வந்திருந்த பொழுது நீ அவனோடு வந்திருந்தாய் . உன்னுடைய தமிழ் உச்சரிப்பு எனக்கு அவ்வளவு பிடித்துப் போனது .  உன் உருவமோ இலக்கற்று காற்றில் பறக்கும் வண்ணத்துப் பூச்சியை போல இருந்தது . ஆனால் அந்த கண்களுக்குள் தான் எத்தனை வலிமிகுந்த வரலாற்றின் கதைகள் தளும்பிக் கொண்டிருந்தன . இரண்டாவது முறை "ஈழத் தமிழர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் " சந்தித்தோம் . இடையே "கூடங்குளம் " சம்பந்தமாக உன் "எதிர்" இதழில் எழுதச்சொல்லி என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தாய் , அதன் நிமித்தம் தொலைபேசியில் உரையாடினோம் . மூன்றாவது சந்திப்பு தான் நம்மளவில் மிக முக்கியமான சந்திப்பு . அந்த இரவை மறக்க முடியுமா செந்தூரா . என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு எப்போதும் உடன் இரு அண்ணா என்ற என் செந்தூரனோடான  அந்த இரவை என்னால் மறந்துவிட முடியுமா செந்தூரா ....  கடற்கரை சாலையில் அந்த விடுதிக்கு அருகே இருக்கும் மரத்தடி யாரை மறந்தாலும் உன்னையும் என்னையும் தீபசெல்வனையும் மறந்துவிடாது .  


ஒரு முறை நள்ளிரவில் KK  நகரில் உன்னுடைய அறையில்  நாம் விவாதித்துக் கொண்டிருந்தோம் . நான் பிரபாகரனை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் நீ சில கருத்துக்களை  சொல்லப்போய்  எனக்கு அழுகை வந்துவிட்டது . நான் வாய் விட்டு அழுதுகொண்டிருந்தேன் . நீயோ பதறிப்போய் என் கண்களை துடைத்துவிட்டு என் கன்னத்திலும் நெற்றியிலும் அழுந்த முத்தங்கள் இட்டாய் . உணவு உண்ண மறுத்த எனக்கு நீயே கெஞ்சி கொஞ்சி மன்னிப்பு கேட்டு ஊட்டிவிட்டாய் . என்னிடம் மன்னிப்பை இப்படி மானசீகமாய் வேறு யாரொருவரும் கேட்டதில்லை . நமக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு என்றாலும் இலக்கை நாம் தீர்க்கமாக தீர்மானித்திருந்தோம் . ஒருவரின் மீது ஒருவர் தாளாத அன்புடனே நாம் இதுகாறும் பயணித்துக் கொண்டிருக்கிறோம் . வாழ்வோ மரணமோ இருவருக்கும் சேர்ந்தே வருகிறதென்றால் அது எதுவென்றாலும் நாம் கொண்டாட்டங்களோடு அதை வரவேற்ப்போம் .


நேற்றைய தொலைபேசி உரையாடலில் "ஆசை முகம் மறந்து போச்சே ..." என்ற பாரதியின் பாடலை பற்றி பேசிக் கொண்டிருந்தோம் இல்லையா . நமதிருவருக்கும் மிக பிடித்த பாடல் இல்லையா அது . எனக்கு இன்னுமொரு பாடல் கூட பிடிக்கும் உனக்கு அதை சொல்ல வேண்டும் என்று தோன்றியது "அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் ..." என்று சுதா ரகுநாதனின் குரலில் அந்தப் பாடலை நீ கூட ஒரு முறை கேள் . பள்ளிப் பருவத்தில் என் அப்பா என்னை பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வைத்தார் . நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக கற்றுக் கொண்டேன் . அப்போது நடனம் ஆட என் விருப்பத்திற்குரிய பாடலாக அது இருந்திருக்கிறது . என் ஆசிரியர் ஜதிசொல்லிக் கொண்டே இந்தப் பாடலை பாடும்பொழுது நான் என்னை மறந்து கால்களில் சுழன்றிருக்கிறேன்  . "ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட .." என்னும் வரிகளில் நானே கண்ணனாகி  ஆடிக் களித்ததுண்டு . அது ஒரு காலம் செந்தூரா . நீ அந்தப் பாடலை கேட்கவேண்டும் .நீ சொன்னாயே திசைகள் தெரியாமல் பயணித்து பின்னொருநாள் பறந்துவிட வேண்டும் என்று , அன்றைய நாட்களில் பாடிக் களிக்கவென சில பாடல்களை நாம் இப்போதே சேர்த்துவைப்போம் .

நீ என்னிடம் இதழுக்கு அனுப்ப வேறொரு கட்டுரை கேட்டிருந்தாய் நேற்று . மாலை தூங்கி எழுந்தவுடன் அதை தான் எழுதவேண்டும் என்று இருந்தேன் . ஆனால் என்னவோ உன் முகம் நினைவுக்கு வரவும் உனக்கு கடிதம் எழுத உக்கார்ந்துவிட்டேன் . கவலைப் படாதே நாளைக்கு மாலைக்குள் உனக்கு அந்தக் கட்டுரை வந்துவிடும் . எழுதிவிடுகிறேன் .


நீ உன் அண்ணனுக்கு எழுதிய ஆறாவது கடிதத்தில் ஒரு பாடல் பாடி இருந்தாய் அல்லவா ...அந்தப் பாடலில் இந்த வரிகளை மட்டும் பைத்தியம் பிடித்தது போல் நானும் பாடிக் கொண்டிருக்கிறேன் ...


லா லா லா லா லா லா லா லா
கடைசியாய் எங்களை நாங்கள் பார்த்திருந்த போது
எங்கள் உடல்கள் மட்டும்-
துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு
நாய்களுக்கு உணவாய் இடப்படுகிறது.
லா லா லா லா லா லா லா லா லா லா லா


எங்கே என்னோடு நீயும் ஒரு முறை இந்தப் பாடலை பாடு என் தொப்புல்கொடியே ... 

 போருக்கு போன மகன் என்ன ஆனான் என்று தெரியாமல்  காத்திருக்கும் தாயைப் போல உன்னிடம் இருந்து தவிப்போடு  பதிலுக்காக காத்திருப்பேன் . என் தவிப்பு அந்தக் கடிதத்தில் என்ன பாடலை பாடப் போகிறாய் என்பதை பற்றியதானது .


மிகுந்து வழியும் கண்ணீரோடும் , நடுங்கிய விரல்களோடும் உன்மீதான பிரியங்களோடும் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன் .
~~க.உதயகுமார்