Sunday 29 September 2013

துள்ளு தமிழ் வாலி !!!




வாலி !!!

பதின் பருவக் காலத்தில் , வீட்டு ரேடியோவில் பெரும்பாலும் அப்பாவும் அம்மாவும் விரும்பிக் கேட்பது பழைய பாடல்களாகத் தான் இருக்கும் . அப்போதைக்கு "பழைய பாடல்களை எழுதியவர் " என்று எனக்கு தெரிந்த ஒரே கவிஞர் கண்ணதாசன் . எனவே கேட்கும் பாடல்கள் அனைத்தும் கண்ணதாசன் எழுதியது தான் , இசையமைத்தது எம்.எஸ்.வீ   தான் என்று நினைத்துகொள்வேன் .

விழுப்புரத்தில் ஒரு பட்டிமன்றம் . லியோனி தலைமையில் . நான் லியோனியின் பட்டிமன்றம் பார்ப்பது அது தான் முதல் முறை . "எப்படி எப்படி சமஞ்சது  எப்படி ..." என்ற பாடலை மேற்கோள் காட்டி எழுதிய கவிஞரை பெயர் சொல்லாமல் வெளுத்து வாங்கினார் லியோனி . ஆனால் எனக்கு அதன் பிறகு தான் யார் அந்த பாடலை எழுதி இருப்பார் என்று ஆவல் பொருக்க முடியாமல் , பக்கத்தில் உக்காந்திருந்த முகம் தெரியாத ஒருவரிடம் கேட்டேன் . "வாலி" என்று பதில் வந்தது . வாலி என்ற கவிஞர் பெயர் எனக்கு இப்படியாகத்  தான்  முதல் அறிமுகம் . அந்த பருவத்துக்கே உரிய குறுகுறுப்பு . அந்த பாடலை முழுசா கேட்டுடணும் என்ற ஆவலில் அந்தப் பாடலை ஆராய்ந்தால் பாடல் முழுக்கவே ஒரு மார்க்கமாகத் தான் இருந்தது .ஓஹோ இவர் இப்படியான பாடல் எழுதுகிற கவிஞர் போல என்று தான் அன்றைக்கு நினைத்தேன் .

பின்னாளில் தான் தெரியவந்தது . வாலி என்ற கவிஞர் தொட்டு எழுதாத சந்தங்களே  இல்லை என்று . இன்றைக்கும் கிராமங்களில் "எம்ஜியார் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா ..?"  என்று மேற்கோள் காட்டுகிற பாடல்கள் முழுக்க வாலி எழுதியவயாகத் தான் இருக்கிறது .

இன்றைக்கு வரைக்கும் எனக்கு மிக பிடித்த பாடல் , எம்ஜியார் வாயசைத்து வாலி எழுதிய பாடல்களான "கண் போன போக்கிலே கால் போகலாமா " மற்றும் "தரை மேல் பிறக்க வைத்தான் " . 

பணம் படைத்தவன் திரைப்படத்தில் எம்ஜியார் மிடுக்காக கையில் 'பெல்லோஸ்' என்ற இசைக்கருவியோடு  வாயசைத்து பாடுவார் . அமரர் T .M .S இன் குரல் அத்தனை கம்பீரமாக இருக்கும் . வாலியின் வரிகளோ சகலத்தையும் விஞ்சி இருக்கும் .

"பொய்யான  சிலபேர்க்கு  புது  நாகரீகம்
புரியாத  பல  பேர்க்கு  இது  நாகரீகம்
முறையாக  வாழ்வோருக்கு   எது  நாகரீகம்
முன்னோர்கள்  சொன்னார்கள்  அது  நாகரீகம்  "

கண் போன போக்கிலே பாடலில் எனக்கு மிக மிக பிடித்த வரிகள் இந்த வரிகள் . இதே  பாடலில் வரும் இன்னும் ஒரு பத்தி நெஞ்சுக்கு நெருக்கமானது

"நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் .."

எனக்கு நானே அடிக்கடி பாடிக்கொள்ளும் வரிகள் . குறிப்பாக ஏகாந்த இரவுகளில் .  சுய ஆற்றுப்படுத்துதல் என்று உளவியல் மருத்துவம் சொல்கிறதே , அப்படி எனக்கு இவ்வரிகள் உதவி இருக்கிறது , உதவிக் கொண்டிருக்கிறது ....

"செத்து செத்து பிழைப்பது " என்று சொல்லுவார்களே . அப்படி ஒரு பிழைப்பு மீனவர்களுடையது ...இதுவரைக்கும் மீனவர்களின் கதையை படமாக எடுக்கிறேன் பேர்விழி என்று கிளம்பிய இயக்குனர்கள் அதை முழுமையாக  செய்யவே இல்லை என்பது என் கருத்து . ஆனால் ஒரே பாடல் . ஒரே ஒரு பாடல் . மீனவர்களின் துயரத்தை அங்குலம் அங்குலமாக விவரித்த பாட்டு .

"தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான் ..."

டி.எம்.எஸ் குரல் உயர்த்தி  "ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்,ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்" என்று பாடுவார் , சில சமயங்களில் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் வரும் ...

"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை .."

என்று கவிஞர் வாலியை  விட இது வரைக்கும் மீனவரின் துயர வாழ்க்கையை வேறு ஒரு பாடலாசிரியர்  பாடலாக எழுதவில்லை என்றே நான் எண்ணுகிறேன் ...

திருவான்மியூரில் குப்பம் கடற்கரை செல்லும்  சாலையில் கொஞ்ச நாள் குடி இருந்தேன் . அப்போது இரவுகளில் குப்பம் கடற்கரையில் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பது வழக்கம் . அங்கே மீனவர் குடியிருப்பு  உண்டு .அதில் மீனவப் பெரியவர்  ஒருவர் தினமும் குடித்துவிட்டு வேத பாடம்  போல இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பார் . உடைந்த  குரலில் அந்தப் பாடலை கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு அவருக்கு ரசிகனாகவே ஆகிவிட்டேன் . மீனவ  நண்பன் என்று எம்.ஜி.யாரை இன்றும் சென்னையில் சொல்லுவார்கள் , எனக்கென்னவோ வாலியை அப்படி சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது .

"மறுபடியும்"  என்று ஒரு திரைப்படம் . அதில் "எல்லோரும் சொல்லும் பாட்டு .." என்று SPB  பாடிய பாடல் . எழுதியது கவிஞர் வாலி . அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் எனக்கு அத்துப்படி . நீண்ட நாட்களாக என் கைபேசியில் அழைப்பு பாடலாக அது தான் இருந்தது .  

மேடையே வையகம் ஒரு மேடையே
வேசமே அங்கெல்லாம் வெறும் வேசமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

ஷேக்ஸ்பியர் சொன்ன   பெருந்தத்துவம் இந்த நாளே  வரிகளில் அடக்கி சொல்லிவிட்டார் வாலி .

எனக்கு ஆச்சர்யம் ."பக்கம் வந்த மாமா,இதுக்கு பேரம் பேசலாமா?பாக்குப்பாய போட்டு, நீயும் பயாஸ்கோப்பு காட்டு" என்றெல்லாம் எழுதிய வாலியால் எப்படி இப்படியும் எழுத முடிகிறது ? என்று அதிசயமாக இருக்கும் , கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கும் . ஆனால் பின் வாலியே "நான் காசுக்கு பாட்டெழுதவந்தவன்" என்று சுயவாக்குமூலம் கொடுத்த பின்னால் , என் மனம் அவர் நிலைப்பாட்டில் அதிக மூக்கை நுழைத்தெல்லாம் ஆராய்ச்சி  செய்ய விரும்பியதில்லை .

அந்த பாடலில் எனக்கு எல்லா வரிகளும் பிடிக்கும் என்றாலும் , சிலப்பதிகாரத்தின் சாரத்தை இரண்டு வரிகளில் எழுதி இருப்பார் வாலி .அது தான் மிகுந்த வியப்பு எனக்கு

"கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று"

அட ..என்று கேட்பவரை ரசிக்க வைக்கும் அவ்வரிகள் ...

வாலியின் சினிமா பாடல்களை எடுத்து சிலாகிக்க வேண்டுமென்றால் , ஒரு புத்தகம் தான் எழுதவேண்டும் . ஊர் உலகம் அறிந்த விஷயம்  இது .

எல்லா சினிமாப் பாடல்களையும் விட , வாலி எழுதிய கவிதை ஒன்று . எனக்கு மட்டுமில்லை தமிழர்  யாருக்கும் அது பிடிக்கும் . தமிழ் சமுதாயம் முழுமைக்கும்  அவ்வரிகள் மிக உன்னதமானது ..என்ன கவிதை என்று யோசிக்குறீர்களா..?

தமிழர் தலைவர் பிரபாகரனை பற்றி வாலி எழுதிய வரிகள்

"முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது -
தமிழின் உயிரும் மெய்யும்;
ஆனால்-
ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது-
தமிழரின் உயிரும் மெய்யும் !
பிரபாகரன்!
அவ்
ஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ
உலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார?

நீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை-
நிலையெழுத்து என்று ஆக்கவல்லது -
அவ்
ஆறெழுத்து அன்றி ஆரெழுத்து ? "

மேலும் அதே கவிதையில்

"நிலப்படை;
நீர்ப்படை;
நீள் விசும்புப்படை;
என்றவன் முப்படை கண்டான்;
எம்நிலத்தை -
எம்மிடம் ஒப்படை என்றான்!
சேர-
சோழ-
பாண்டியர்க்குப்
பிற்பாடு -
படை திரட்டிய
பச்சைத் தமிழன் இவனானான்;
முக்கண்ணாகக் கொண்ட
சிவனானான்!

எனக்கு படிக்க படிக்க சிலிர்க்கும் . வாலியை கையெடுத்து கும்பிட தோன்றும் இவ்வரிகளை படிக்கும்போதெல்லாம் . எவ்வளவு பொருத்தமான  வரிகள் ...

கலைஞருக்கு  நடந்த பாராட்டு விழாக்களில் கவியரங்கம் இசைப்பது , எதன் பொருட்டும் அவர்களை விமர்சிக்க வாய் திறக்காதது போன்ற விடயங்கள் எனக்கு பல சமயங்களில் பெரியவர் மீது வருத்தம் கொள்ளச் செய்திருக்கிறது . நண்பர்களிடத்தில் மனம் வருந்தி பேசி இருக்கிறேன் . ஆனால் என்னவோ "கவிஞர்" என்ற வாலியை என்னால் விட்டுக் கொடுக்கவே முடியவில்லை . கலைஞரோடு இருந்தாலும் , பார்வதி தாயார் திருப்பி அனுப்பப் பட்ட விவகாரத்தில் அரசை சாடியும் கவிதை எழுதிய விதத்தில் வாலி தன் நிலைப்பாட்டில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார் என்பதை  புரிந்துக் கொண்டேன் .

சகோதரி செங்கொடி உயிரை ஈகித்து வீரமரணம் அடைந்த பொழுது , வாலி அய்யா எழுதிய கவிதை எனக்கு அன்றைக்கு மேலும் அழுகையை கூட்டியது .

"கொடிகாக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட உயிருண்டு-
உயிர்காக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட கொடியுண்டா?

உண்டு
அதன் பெயர் செங்கொடி:
இனிமேல் -
அதுதான் என் கொடி!"  என்று மகளை  இழந்த தந்தையின் பரிதவிப்பை இந்த கவிதையில் பார்க்க முடியும் .

 இதோ மிக சமீபத்தில் புலிக்குட்டி பாலச்சந்திரனின் படுகொலையை கண்டித்து பெரியவர் வாலி  எழுதிய கவிதையும் அத்தனை  நெகிழ்சியானது .

"முடிகூட முளைக்காத-
வழ வழ மார்பும்; சின்னஞ்சிறு
வயிறு மடிப்பும் கண்டால்…
எவனாவது
ஏவுவானா தோட்டா?
ஏவினான் என்றால்-
புத்தனே
புலால் தின்னக் கூட்டா?

என் சொல்லி என்ன?
தன் தலையாய்
இலங்கை ஏற்றிருக்கிறது -
ஒரு விலங்கை!"

என்று பெரியவர் வாலி எழுதிய இரங்கல் கவிதை தமிழர் நெஞ்சில் வலியோடு பதிந்துபோனது .

காசுக்கு பாட்டெழுதுகிறவன் என்று அவரே சொல்லிக் கொண்ட பொழுதும் , படைப்பாளிக்கே உரிய சமூக கோவத்தோடு பேனா பிரித்து தோலுரிக்கவும் தவறியதில்லை வாலி . தமிழின் துணைகொண்டு  தனக்கே உரித்தான மிடுக்கோடு வாழ்ந்து மறைந்திருக்கிறார் பெரியவர் வாலி .

அகவை எண்பதை கடந்த பொழுதும் , இவரின் வார்த்தைகளில் மட்டும் முதுமை தெரிந்ததே இல்லை .

 "தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே...
பூவில்லை மடலில்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்...." என்று காதல் செய்யும் யாரும் கேட்ட மாத்திரத்தில் கிறங்கி மயங்கும் பாடல் இது . இதை எழுதும் பொழுது வாலி எண்பதை கடந்துவிட்டார் . தமிழ் திரையுலகம் கண்ட கவிஞர்களில் இந்த வரம் கண்ணதாசனை விடவும் வாலிக்கே மிக அதிகமாய் கிடைத்திருந்தது என்பது என் கருத்து .

கம்பராமயணத்தில் வானர அரசன் வீரன் வாலியை பற்றி கம்பன் எழுதியப் பாடல் . இலக்கியவாதிகள் எல்லோருக்கும் மிக பரிட்சயமான  ஒரு ராமாயணப்   பாடல் உண்டென்றால் அது வாலியை மெச்சி கம்பன் எழுதிய

"கால் செலாது அவன் முன்னர்; கந்த வேள்
வேல் செலாது அவன் மார்பில்; "  என்ற பாடல் .

காற்று கூட வாலியின் வேகத்தின் முன்னால் தோற்றுப் போய்விடும் , முருகனின் வேல் கூட வாலியின் மார்பில் செல்லாது  என்றெல்லாம் கம்பன் வாலியை புகழ்ந்தான் . இது கவிஞர் வாலிக்கும்  ஒப்புப் படுத்திப் பார்க்கிறேன் . காற்றின் வேகத்தை விடவும் தமிழ் வார்த்தைகளை புதிதுபுதிதாக கோர்த்து பாடல் எழுதுவதில் வாலி ஒரு அதிசயம் தான் . வாலியை யாரோ ஒருவர் வம்புக்கு இழுத்த பொழுது மேடையிலேயே வாலி சொன்னாராம் "டேய் நான் மாமிசம் திங்குற பாப்பான் , என்கிட்டே வச்சிக்காத " என்று .  போலியாக வாழாமல் நான் இப்படித்தான் என்று ஊருக்கு உரைத்த விதத்தில் உறுதியான நெஞ்சம் தான் கவிஞர் வாலிக்கும் .


எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

என்று எழுதிய வாலி , மண்ணை விட்டு கிளம்பி விட்டார் . விதியின் வாய்க்குள் எல்லோரும் ஒரு நாள் விழத்தான் போகிறோம் . கவிஞர் வாலி காலத்தால் மறக்க முடியாத பாடல்களை  எழுதி  அழியாப் புகழ் பெற்று பூரணமாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டு இறுதி யாத்திரை கிளம்பி இருக்கிறார் . "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் .." என்று எழுதிய வாலியையும் அவர் திரையிசை பாடல்களையும் தமிழ் நெஞ்சங்கள் என்றைக்கும் மறக்க முடியாது .

அவர் பெரிதும் விரும்பி சேவித்த ரங்கராஜனை நானும் வேண்டிக் கொள்கிறேன் . அந்த வெண்தாடி கவிஞன் , ரங்கனின் திருவடியில் ஆழ்ந்த இளைப்பாறுதல் பெறட்டும் . "என் வெற்றி என்பது என் வலிமையில் வந்தது இல்லை , தமிழின் வலிமையால் வந்தது" என்று சொன்ன வாலி , தமிழுள்ள வரையிலும் புகழ் தழைத்திருப்பார் .


ஆண்டாண்டு காலம்
தொன்மையுடைத்த
தெள்ளு தமிழ்
உம் விரல்களின் வழியே
துள்ளு தமிழானது
வாலி ..!
உங்கள்
தமிழ்த் திரையிசைப் பாடல்கள்
எங்கள் சந்ததிக்கும்  ஆகுமோர்  
தூளி !!


ஆழ்ந்த இரங்கல்
க.உதயகுமார்




குறிப்பு : இந்தப் பதிவு கவிஞர் வாலி அவர்கள் மறைந்த மறுநாள் (ஜூலை 19,2013) எழுதிய இரங்கல் கட்டுரை .

Friday 27 September 2013

மெர்லின் என்றொரு சபிக்கப்பட்டவள் !

சென்றவாரம்  நான் எனக்கு நன்கு பழக்கப்பட்ட ஒரு மன நல மருத்துவரிடம் சென்றிருந்தேன் தூக்கம் வரவில்லை என மாத்திரை வேண்டி  . அப்போது  எங்கள் உரையாடல் எங்கோ ஆரம்பித்து , எங்கெல்லாமோ பயணித்து ஒரு நடிகையின் வாழ்க்கை பக்கம் திரும்பிற்று . எனக்கு அந்த நடிகையின் பெயர் தெரியும் , அவரின் புகைப்படம் பார்த்திருக்கிறேன் . ஆனால் அவரின் வாழ்வை , அவரின் மரணத்தின் காரணம் என எதையும் நான் அறிந்திருக்கவில்லை . ஆனால் என் அந்த  நண்பர் மூலமாக சென்றவாரம் எனக்கு அந்த நடிகையின் வாழ்க்கை மீது கவனம் குவிந்தது . பின் எங்கள் கலந்தாய்வு முடிந்து , நான் வேளச்சேரி செல்ல , சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் கடைசி வண்டிக்காக காத்திருந்தேன் . அங்கே என்னை தவிர வெறும் இரண்டு பேர் மட்டுமே இருந்தார்கள் . பெருத்த அமைதி .  எனக்கோ அனிச்சையாக அந்த நடிகை பற்றி என் நண்பர் சொன்னவை சுழன்று சுழன்று கனத்தது .

அதன் பிறகு புத்தகங்கள் வாயிலாகவும் , இணையத்தின் வாயிலாகவும் , சில ஊடக நண்பர்கள் மூலமாகவும் அந்த நடிகை பற்றி படித்து , நிம்மதி இழந்து போனேன் .

நார்மா ஜீன் மார்டின்சென் (எ) மெர்லின் மன்றோ !

மிக அழகாக  உதித்து , பின் அவசரத்தில் உதிர்ந்த பூவை போன்ற ஒரு வாழ்க்கைக்கு சொந்தக்காரர் மெர்லின்  .  பெருக்கெடுத்து ஓடத்தொடங்கிய நதி , பாதி வாழியில் ஆவியானதை  போல காணமல் போன வாழ்க்கைக்கு சொந்தக்காரி . உலக ஆண்களின் கனவுக்கன்னியாக , கவர்ச்சி குறியீடாக , பாலுணர்ச்சியை வடிக்கும் வடிகாலாக  உலகத்தால் மிகத்தவறாக அறியப்பட்ட துரதிர்ஷ்டக்காரி  மெர்லின் !

சில குழந்தைகளுக்கு தன் தகப்பன் யாரென தெரியாது . ஆனால்  மெர்லின் வாழ்வோ , புதிர் நிறைந்தது . மெர்லினின் தாய்க்கே தன் மகளுக்கு தகப்பன் யாரென தெரியாது . காரணம் ஒரே காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களோடு உடலுறவு வைத்திருந்திருக்கிறார்   மெர்லினின் தாய் "க்ளாடிஸ் மன்றோ பேக்கர்" . தாய்க்கே தெரியாத போது , மெர்லினுக்கு எப்படி தெரியும் தன தந்தை யாரென ? . இவள் தன் வாழ்வின் கடைசி அத்தியாயம்  வரைக்கும் தகப்பனின் பாசத்திற்கு ஏங்குகிற சிறுமியாகவே இருந்தார் என்பது பலருக்கு தெரியாது .  தன் வாழ்வில் தகப்பன் என்கிற உறவு மட்டும் வெற்றிடமாக இருந்ததில்  ஆரம்பித்தது மெர்லினுக்கு முதல் மன அழுத்தம் . இவளுடைய தகப்பன் என்கிற நேசத்தின்  தேடல் தான் , இவள்  தன் வாழ்வின் பலதரப்பட்ட ஆண்களோடு  உறவு வைத்திருந்ததற்கு காரணமாக இருந்திருக்க கூடும் . இவள்,  தான் திருமணம் செய்துகொண்ட ஆண்களை "டாடி " என்றே அழைத்தார் என்கிற  செய்தியில்  இருந்து இதை என்னால் அனுமானிக்க முடிகிறது .


மெர்லின் பிறந்த இரண்டு வாரங்களில் , மெர்லினின் தாய் இவளை ஒரு தம்பதியிடம் தத்து கொடுத்திருக்கிறாள் . அவள் பிறந்த இரண்டு வாரங்களில் ஆரம்பித்த இந்த நாடோடி வாழ்க்கை அன்றிலிருந்து மெர்லின் என்கிற பூ , பல கைகளுக்கு மாறி மாறி கடைசியில் மிச்சமில்லாமல் சிதைந்துபோன அவளின்  வரலாறு தான் அன்றைக்கு என்னை நிம்மதி இழக்க செய்தது .  இவள் பல வளர்ப்பு பெற்றோர்களுக்கு  மாற்றி மாற்றி கொடுக்கபட்டாள் . பிறகு ஒரு அநாதை விடுதியில் வந்து விழுந்திருக்கிறது மெர்லினின் வாழ்க்கை . தன் தாய் "க்லாடிசை " அவ்வபோது சென்று பார்த்து வந்திருக்கிறாள் , விதி அவள் தாயின் மன நலத்தை சிதைத்த போது, மெர்லினும் சிதைந்தே போனாள் . மெர்லினின்   தாய் ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் , இவள் மீண்டும் வளர்ப்பு பெற்றோர்களிடமே வந்துவிழுந்திருக்கிறாள் .


இவள் வாழ்வின் உச்சகட்ட சோகம் , மெர்லின் தன் வளர்ப்பு தந்தையாலேயே  வன்புணர்ச்சிக்கு ஆளானாள் என்பது தான் . அதுவும் மெர்லினுக்கு எட்டு வயதாகும்போது  மெர்லினை வளர்த்த "கிம்மல்" என்கிற கிழ நாய் மெர்லினை பாலியல் வன்புணர்ச்சி செய்தது என்பது தான் எனக்கு பேரதிர்ச்சியையும் , தாளா துக்கத்தையும் இவள் வரலாற்றை படிக்கும் போது தந்தது .  கிம்மலை தொடர்ந்து சிறுவயதிலேயே இவள் பலரால் குதறபட்டிருக்கிறாள். "அந்த வயதில் என்னை சுற்றிய உலகம் முழுவதுமே இருண்டு கிடந்தது. வெளியேறும் வழியில்லாமல் பயந்துபோயிருந்தேன்"  என்று மெர்லினே பின்னாளில்  , தன்னுடைய அன்றைய சூன்ய நாட்களை பற்றி சொல்கிறார் . பாவம் மெர்லின் ! வேறென்ன சொல்ல ....

தன் பதினாறாவது வயதில் மெர்லினுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் அவளது வளர்ப்பு பெற்றோர் . இந்த திருமணத்திற்கு பிறகு தான் , தன் கணவனோடு தங்கி இருந்த ஊரில் "டேவிட் கொனோவர் " என்ற புகைப்பட காரனின் கண்ணில் பட்டிருக்கிறார் மெர்லின் . இந்த டேவிட் கொனோவர் தான் "நார்மா ஜீன் மார்டின்சென்" என்கிற அழகு பதுமை "மெர்லின் " என்கிற புது அவதாரம் எடுக்க காரணமாயிருந்திருக்கிறார் . வெறும் ஐந்து டாலருக்கு ஒப்பந்தம் செய்து இவர் மெர்லினை எடுத்த புகைப்படங்கள் பின்னாளில் பல முன்னணி பத்திரிக்கையின் அட்டைப்படங்களில் வந்து அமெரிக்காவை வாய்பிளக்க வைத்திருக்கிறது .

மெர்லின் மீது கொஞ்சம் கொஞ்சமாக புகழின் வெளிச்சம் விழத்தொடங்கிய காலகட்டத்தில் மெர்லினின் முதல் கணவனுக்கும் இவளுக்கு பிணக்கு ஏற்பட்டு அது மண முறிவில் வந்து நின்றிருக்கிறது . அதன் பின்னால் "ஜோ டி மாகியோ " என்கிறவரோடு இரண்டாம் திருமணம் , பின் மூன்று நான்கு என மெர்லினுக்கும் ஆண்களுக்குமான  உறவு நீடித்திருக்கிறது . இதை வெறும் காம கண்ணோட்டத்தில்  மட்டும் பார்க்காதீர்கள் . இவளோடு வாழ்ந்த ஆண்களுக்கு வேண்டுமானால் அப்படி ஒரு தேவையோடு மெர்லினின் காலடியில் விழுந்து கிடந்திருக்கலாம் , ஆனால் மெர்லினுக்கு அப்படி இருக்க அவசியம் இருந்ததாக தோன்றவில்லை . காரணம் , இவள் மூன்றாவதாக கட்டிக்கொண்ட ஆணுக்கு வயது 60  . அவர் வேறு யாருமல்ல பிரபல எழுத்தாளர் "ஆர்த்தர் மில்லர்"  .  முன்னாள் கணவர்கள் மெர்லினை உருகி உருகி காதலித்தார்கள் . ஆனால் மெர்லினோ மூன்றாவதாக வந்த "ஆர்த்தர்" என்கிற 60  வயது எழுத்தாளரை காதலித்திருக்கிறாள் . ஆர்த்தரோடு  படுக்கையை பங்கிட்டபோதும்   இவள்  அவரை "டாடி" என்றே அழைத்திருக்கிறாள் . வெறும் காமத்தேவைக்கா 60  வயது ஆணோடு வாழ துணிந்தாள் மெர்லின் ?

மெர்லின் என்பவள் வெறும் கண்களாலேயே ஆண்களை கற்பிழக்க தூண்டுவாள் , இவளின் மிதமிஞ்சிய காமம் சொட்டும் நடிப்பு பல இளைஞர்களை புரட்டி போட்டது , மெர்லின் என்கிறவள் ஆண்களின் பாலினதேவையின் குறியீடு என்றே இந்த உலகம் தப்பு தப்பாக  பிம்பம் உருவாக்கியது .. .. பெண்கள் என்றால் , அதுவும் சகஜமாக சிரித்துப் பேசும் அழகான பெண்களென்றால் அவர்கள் சுலபத்தில் நமக்கு இசைந்து நம்மோடு படுத்துவிடுவார்கள் என்றே சில ஆண்களின் புத்தி வரையறை செய்திருக்கிறது . அதன் விளைவே இப்படி மெர்லின் காட்சிபடுத்தபட்டாள் . மெர்லின் ஒருபோதும் உடலுறவின் மீது அதீத ஆர்வம் காட்டவில்லை . ஆனால் ஆண்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்க வேண்டும் என்கிற அவளின் மனநிலை தான் அவளை அப்படிப்பட்ட படங்களில் வெறும் கவர்ச்சி பிம்பமாக நடிக்க வைத்திருக்கிறது .  ஆனால் அதுவல்ல மெர்லினின்  நிஜ உருவம் . மெர்லின்  என்பவள் இலக்கியங்களை காதலிக்கிறவளாக , கவிதைகளை காதலிக்கிறவளாக , நாடகங்களை காதலிக்கிறவளாக இருந்திருக்கிறாள் . ஆனால் ஆண்கள் அதை எதையும்  பார்க்கவில்லை , உரித்து தொங்கவிடப்பட்ட அவள் உடலின் சதைகளை தவிர . மெர்லின் நடிகை என்று தெரிந்தவர்கள் கூட , மெர்லின் ஒரு அற்புதமான பாடகி என்பதை தெரிந்திருக்கவில்லை , அல்லது அதை பொருட்படுத்த அவர்களுக்கு விருப்பமில்லை . கிட்டத்தட்ட முப்பதிற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி இருக்கிறாள் மெர்லின். அத்தனையும் பிரபலம் . ஆனால் மெர்லினிடம் இதெல்லாம் யார் எதிர்பார்த்தார்கள் , அவளின் வாளிப்பான உடலை தவிர .

 சிக்மன்ட் ஃப்ராயிட், தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர் என இவளுக்கு இருந்த இலக்கிய தேடல் தான் ,  இந்த அறிவுக்காதல் தான் ஆர்த்தர் மில்லர் என்கிற முதியவரை நோக்கி மெர்லினை அழைத்தது . ஆனால் இதில் சோகம் என்னவென்றால் , மில்லரும் கூட மெர்லினிடம் மண்டியிருந்த அறிவின் ஆர்வங்களை அங்கீகரிக்கவில்லை , மாறாக அவளின் கட்டுடல்  மீது விழுந்து பிரள மட்டுமே மில்லர் ஆசைப்பட்டிருக்கிறார் .

புகழின் வெளிச்சம் இவள் மீது பெரு ஒளியை பாய்ச்சத்தொடங்கிய  போதே , இவள் மனச்சிதைவின் ஆரம்ப கட்டத்தில் காலெடுத்து வைத்துவிட்டாள். இந்த "ஹாலிவுட்  உலகம் ஒரு பரத்தையர் விடுதி " என பின்னாளில் மெர்லின் சொன்னதை போல , மெர்லினை மேலோட்டமாக  சதைகளை மேயவே அங்கு பெருங்கூட்டம் அலைந்துகிடந்திருக்கிறது . ஒரு பக்கம் , மெர்லின்  உலக  இளைஞர்களின் தேவதையாக  விஸ்வரூபம் எடுத்திருந்தாள், ஆனால்  அதே சமயம் இவள் உடம்பிற்குள்ளும்  மனஉளைச்சல் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருந்திருக்கிறது . வலி உணரா மருந்துகளும் , தூக்க மாத்திரைகளும் , மிதமிஞ்சிய குடியும் இவள் வலிகளை குறைக்கவில்லை , மாறாக அது இன்னும் இன்னும் அதிகபடுத்தி இருந்திருக்கிறது .

அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி , மற்றும் அவரின் சகோதரர் ராபர்ட் கென்னடி ஆகிய இருவரும் ஒரே காலகட்டத்தில் மெர்லினோடு உறவில் இருந்திருக்கிறார்கள் . ஆனால் அதுவே மெர்லினை பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது . மெர்லின் ஒரு உளவாளி , கென்னடி இடம் இருந்து ராஜ ரகசியங்களை திருடுகிறாள் என இவள் மீது வசை மாறி பொழிய ஆரமபித்த போது மெர்லின் இன்னும் ஒடிந்து போனாள் .

மிதமிஞ்சிய குடி , அளவுக்கதிகமான தூக்க மாத்திரை , அடிக்கடி நிகழ்ந்த கருச்சிதைவு என மெர்லின்  சிதயதொடங்கினாள். இவளின் புகழ் ஏணி சரியதொடங்கியது . 1962  ஆகஸ்ட்டு ஐந்தாம் தேதி தன்னுடைய வீட்டின் படுக்கையறையில் மெர்லின் இறந்துகிடந்தார் , நிர்வாணமாக .  இறப்பிற்கு காரணம் "அன்றிரவு எடுத்துக்கொண்ட அதிகப்படியான தூக்கமாத்திரை மற்றும் வலியுணரா மாத்திரைகள் " என மருத்துவர்கள் சொன்னார்கள் .


(மெர்லின் படுக்கையில் இறந்துகிடக்கும் புகைப்படம் . மெர்லினின் கடைசி புகைப்படம்)

கொடுமையின் உச்சம் இனி தான் . எந்த உடலை இந்த உலகம் ஆராதித்ததோ , எந்த உடலை நக்கி ருசிக்க நாக்கை தொங்கபோட்டு அலைந்தார்களோ , எந்த உடலின் சந்துகளில் குடி இருக்க இவர்கள் ஆசைபட்டார்களோ அந்த உடல் வாங்க ஆளில்லாமல் பிணவறையில் மூன்று நாட்கள் கிடந்திருக்கிறது . மெர்லின் என்கிற சதை பிண்டத்தில் ரத்த ஓட்டம் இருந்தபோது அவளுக்காக எதையும் செய்ய தயார் என சொன்னவர்கள் , ரத்த ஓட்டம் உறைந்த போது இவளின் பிணத்தை பெற்று இறுதி அஞ்சலி செலுத்தகூட தயாராக இருக்கவில்லை என்கிற செய்தி தான் என்னை அறுத்தது .

மெர்லின் யாரோ ஒரு முகம்தெரியாத  நடிகரோடு  வாய் வழி புணர்ச்சியில் ஈடுபடும் பதினைந்து நிமிட கருப்புவெள்ளை காட்சி 2006  இல் 1 .5 மில்லியன் டாலருக்கு விலை போனது . ஆனால் அந்த சதைக்கு பின்னால் ரத்தமும் வலியுமாய் உணர்ச்சிகள் இருந்தது என்பதை உணரத்தான் இங்கே ஆளில்லை . வெறும் காட்சியை காசு கொடுத்து வாங்கிய உலகம் , இவள் உடலை பெற்று இறுதி மரியாதை கூட செய்ய துணியவில்லை .


தந்தை யாரென தெரியாது , தாய் பைத்தியமாகிபோனாள், வளர்த்த தந்தையாலேயே  வன்புணர்ச்சிக்கு ஆளானாள், காலத்தின் கடைசி அத்தியாயம் வரை  ஆண்களால் கடித்து குதறபட்டாள், வாழ்வு முழுக்க வலி வலி வலி என இருந்தவள்  அதிகப்படியான வலி நிவாரணிகளால் இறந்துபோனாள் என்பது என்னால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை .

மெர்லின் படிக்கபடாமல் கிழிக்கப்பட்ட பொருள் பொதிந்த கவிதை . வாசிக்கபடாமல் உடைத்தெறியபட்ட  இசையின் யாழ் . ஒரு பாடகியாக , ஒரு இலக்கியவாதியாக இவள் உருவாகி இருக்க வேண்டியவள் . இவள் அழகாய் பிறந்து தொலைத்தாள், அதனாலேயே தன் வாழ்வை வெறும் 36  வயதில் தொலைத்து கண் மூடி மண்ணுக்கு இரையாகிப்போனாள் . இனியும்  இவள் வெறும் காமத்தின் குறியீடு , கவர்ச்சியின் பதுமை என எனக்கு சொல்ல தோன்றவில்லை .

மெர்லின்
நீ சபிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததற்காய்
இங்கே ஒரு "டாடி" அழுகிறான் .!

"ஒட்டடை படிந்த என் இளமையின் மீது , நேற்றிரவு ஒரு  நாய் வந்து மூத்திரம் பெய்ததது " என நான் ஒரு சூன்ய காலத்தில்  கிறுக்கிய வரிகள் உன் வாழ்க்கைக்கு பொருந்திப்போவது  எனக்கு வேதனை அளிக்கிறது  மெர்லின் .

மீளாத்துயில் கொள்ளும் எழில் தேவதையே , வலி நிறைந்த வாழ்வில் கிடைக்காத அமைதி , உன் மரணத்தில் கிடைத்திருக்கும் என்று மட்டும் ஆறுதல் கொள்கிறேன் .


-- க.உதயகுமார்


குறிப்பு : இந்த கட்டுரை எழுதப்பட்ட தேதி அக்டோபர் 15 , 2011 . வலைப்பூவில் மீள்பதிவிடுகிறேன்

Thursday 26 September 2013

வழியனுப்புதல் சுலபமில்லை

உங்களைப் போல்
எனக்கு
சுலபமாக இருப்பதில்லை
வழியனுப்பிவைத்தல்

கையசைத்து
இதழ் விரித்து
பல்காட்டி
வழியனுப்பிவைக்கும்
வழமையில்
எனக்கு உடன்பாடில்லை

குறைந்தபட்சம்
ஆழ்மனதைத்தொடும்
ஒரு முத்தமிடவேண்டும்

உள்ளங்கை பற்றி
ஒவ்வொரு ரேகையாய்
தடவிக்கொடுக்க வேண்டும்

பிசகற்ற அன்போடு
தோள்சேர்த்து
ஸ்பரிசிக்கவேண்டும்

பொய்மையற்ற
புன்னகையொன்றை
வழிச்செலவுக்குப் பகிர வேண்டும்

மிச்சமிருக்கும்
சொற்களனைத்தையும்
பேச்சுத்துணைக்கு
ஒரு கைப்பையில் நிரப்பி
ரயிலேற்ற  வேண்டும்

திடுமென
வெறுமை படர்ந்த
ரயில்  கிளம்பிய
நடைமேடையில்
வேர்பிடிக்க அமர்ந்தபடி
சொட்டுச் சொட்டாய்
புன்கணீர் உகுக்கவேண்டும்
.
.
.
உங்களைப் போல்
எனக்கு
சுலபமாக இருப்பதில்லை
வழியனுப்பிவைத்தல்

~~க.உதயகுமார்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5358

Tuesday 24 September 2013

முள் - ஒரு பெண்ணின் எதிர்நீச்சல் வாழ்க்கை !!!


நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் . என் இடக் கண்ணின் புருவத்திற்க்கு கீழே  வெண்மையாக  மினுமினுப்போடு  ஒரு தழும்பு உருவானது . நானோ அல்லது எங்கள் வீட்டில் உள்ளவர்களோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . ஒரு குடும்ப விழாவிற்கு வந்திருந்த என்னுடைய அத்தை ஒருவர் தான் அந்த தழும்பை அடையாளம் கண்டு கொண்டார் . எப்போதிலிருந்து இப்படி இருக்கிறது என்றார் என் அம்மாவிடம் . "கொஞ்ச நாளாதான் இருக்கு , அது ஒண்ணுமில்ல அழுக்கு தேமல் அண்ணி . படிகாரம் தேய்ச்சி குளிச்சா சரியாபோயிடும் " என்றார் அம்மா . ஆனால் என் அத்தையோ என்னை அருகில் அழைத்து அந்த தழும்பில் கிள்ளினார் . வலிக்கிறதா என்றார் . எனக்கு வலிக்கவே இல்லை . என் அத்தை கலவரமானார் . முதலில் இவனை உரிய மருத்துவரிடம் காமிக்க வேண்டும் என்று விவரங்களை சொன்னார் . அடுத்த நாளே என் அப்பா , அம்மா என்னை அழைத்துக் கொண்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில்   இருக்கிற "தொழு நோய் " பிரிவிற்கு சென்றார்கள் .

அங்கே மருத்துவர் என்னை பரிசோதித்தார் . ஒரு ஊசியால் என் தழும்பில் குத்தினார் .

"வலிக்குதா .?" .

 வலிக்கல சார் .

என் கன்னத்தில் ஊசியில் குத்தினார்

"வலிக்குதா?"

வலிக்குது சார் .

தொழுநோயோட அறிகுறி மாதிரி தான் இருக்கு . ரத்த மாதிரிகள குடுத்துட்டு போங்க . பரிசோதிச்சு முடிவுசெய்யலாம் என்று சொன்னார் மருத்துவர் . என் அப்பாவின் முகம் வாடி விட்டது . என் அம்மா அங்கேயே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார் . என் அம்மா அழுவதை பார்த்த பின்னால் தான் எனக்கு கலவரமானது . என்னவோ நோய் வந்து விட்டது . நாம் சீக்கிரம் செத்துவிடுவோம் என்று முடிவுசெய்துவிட்டேன் . என் அப்பாவிடம் "நான் செத்துடுவனா " என்று கேட்ட பொழுது என் அப்பா , என் அம்மாவை திட்டினார் . அழுது தொலைக்காம வா . உன்னால் என் புள்ள பயப்படுது . "அதெல்லாம் ஒண்ணுமில்ல . மாத்திர தின்னா சரியா போயிடும் "  என்று எனக்கு சமாதானம் சொன்னார் . வழியில் எனக்கு சோன் பப்படி வாங்கி கொடுத்தார் .

அப்போதைக்கு நான் சமாதனமானேனே தவிர , பயந்து பயந்து இரவு எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது . மீண்டும் மருத்துவமனைக்கு செல்லும்ப் போது என் அப்பா அம்மாவை வரவேண்டாம் என்று சொல்லி விட்டு என்னை மட்டும் அழைத்துக் கொண்டு போனார் . மருத்துவமனையில் பரிசோதனைகளின் முடிவை பார்த்து எனக்கு தொழு நோயின் ஆரம்ப கட்டம் என்று மருத்துவர் சொன்னார் . என் அப்பா உடைந்து போனார் . என் அப்பா கண்கலங்கி மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தார் . என் குடும்பத்துல யாருக்கும் இந்த வியாதி வந்ததில்ல சார் . இந்த சின்ன பையனுக்கு எப்படி சார் இந்த வியாதி என்று சொல்லும்போதே அழுதுவிட்டார் அப்பா . அப்பா அழுவதை  பார்த்த உடன் எனக்கும் அழுகை பொத்துக் கொண்டு வந்துவிட்டது .

அந்த அமருத்துவர் மிகவும் கனிவானவர் . அவர் பெயர் கூட இன்னும் எனக்கு நினைவிருக்கிறது . தேவராஜ் !!!  அவர் தான் என்னிடம் சொன்னார் ," இது ஒண்ணுமே பிரச்சன இல்ல . நீ தினமும் காலையும்  இரவும்  ஒரு மாத்திரை சாப்பிடனும் . ஒரு வருஷம் சாப்பிட்டா போதும் . எல்லாமே சரியாகிடும் ." என்று என் கன்னங்களை  தட்டிக் கொடுத்து பேசினார் . அப்பாவிடமும் அதையே சொன்னார் . "இது ஆரம்ப கட்டம் . ஒரு வருடம் மருந்தெடுத்துக்  கொண்டால் பூரணமாக குணமாகிவிடும் . நீங்கள் நினைப்பது போலெல்லாம்  ஆகவே ஆகாது  என்று அப்பாவிற்கு  தைரியம்  சொன்னார் .  

அன்றைக்கே மருந்து கொடுத்தார்கள் முப்பது நாளைக்கு . முப்பது நாளைக்கு ஒரு முறை மட்டும் ஒரு சிவப்பு நிறத்தில் தடியான மாத்திரை  கூடுதலாக சாப்பிடவேண்டும்  . இதை தின்றால் ரத்தம் நிறத்தில் ஒன்னுக்கு போகும் , பயப்படக் கூடாது என்று மருத்துவர் சொன்னார் . இனிமேல் நீங்கள் இங்கு   வந்து மருந்து வாங்க   வேண்டாம் , கீழ்பெரும்பாக்கத்தில் இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாதமொரு முறை நாங்களே வருவோம் வந்து மருந்து வாங்கி கொள்ளுங்கள் என்று மருத்துவர் சொன்னார் . கிளம்பும் போது தன் மேசையில் இருந்து எனக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பி வைத்தார் .

எங்கள் வீட்டில் என்னிடம் "இந்த மாத்திரை திங்குறேன்னு  பக்கத்து   வீட்லயோ பள்ளிகூடத்துலையோ சொல்லக் கூடாது" என்று என்னிடம் சொல்லி வைத்தார்கள் . ஆனால் ஒரு மாதத்தின் முதல் நாள் அந்த சிவப்பு நிற மாத்திரை தின்ற தினம் . பள்ளியில் இடைவேளையின் பொழுது சிறுநீர் கழிக்க சென்றேன் . பள்ளிக்காலத்தில் தண்ணிக் குடிக்கவென்றாலும் சிறுநீர்கழிக்க வென்றாலும்  கும்பலாக போவது தானே வழக்கம் . அப்படி  போகும் போது நண்பர்கள் "அய்யய்யோ உதயாவுக்கு ஒன்னுக்குல ரத்தம் வருது" என்று பள்ளிக்கே சொல்லி விட்டார்கள்  . என் ஆசிரியர் நாகரத்தினம் எனை அழைத்து என்னிடம்  உடம்பு  சரியில்லையா என்று கேட்ட பொழுது நான் உண்மையை சொல்லி விட்டேன் . எந்த   பள்ளிக்கூடத்தில் சொல்லக் கூடாது என்று சொன்னார்களோ அங்கே என்னை ஒன்றும் வித்யாசமாக நடத்தவில்லை . ஆனால் என் உறவினர் ஒருவரிடம்  எங்கள் வீட்டில் தான்  எனக்கு இப்படி ஆகிவிட்டது என்று சொன்னார்கள் . அவர் வீட்டுக்கு விடுமுறைக்கு சென்ற பொழுது எனக்கு தனி தட்டும் , துண்டும் கொடுத்தார் அந்த உறவினர்  . நான் இதை அப்பாவிடம் சொல்லப் போய் பெரிய சண்டையானது . இப்படி என் அம்மாவும் என் அப்பாவும் அந்த ஒரு வருடம் நெஞ்சில் நெருப்பிருப்பதை போலவே இருந்தார்கள் , என் மீது அதீத அக்கறையோடு .

இப்படியாக ஒரு வருட சிகிச்சைக்கு பிறகு எனக்கு நோய் சரியாயிற்று என்றும் , தேமல் அப்படியே இருக்கும் ஆனால் கொஞ்சம் நிறம் மங்கி இருக்கும் . பயப்படதேவயில்லை என்றும் தேவராஜ் மருத்துவர் சொன்னார் . அப்பாடா இனி தினமும் மாத்திரை திங்க வேண்டாம் என்ற மகிழ்ச்சி எனக்கு .

சரி, இதை நான் ஏன் இப்போது இங்கே எழுதுகிறேன் ? எனக்கு இப்படி ஒரு நோய் வந்ததையோ நான் சிகிச்சை எடுத்துக் கொண்டதையோ நான் இதுவரையில்  என் கல்லூரி நண்பர்களிடமோ மற்ற நண்பர்களிடமோ , அலுவலகத்திலோ சொல்லிகொண்டதே இல்லை . யாருக்கும் தெரியாது . காரணம் விவரம் தெரிந்த பின்னால் , அதுவும் ரத்தக் கண்ணீர் திரைப்படம் எல்லாம் பார்த்த  பின்னால் எனக்குமே தொழுநோய் என்றால் இப்படியெல்லாம் ஆகுமா என்ற அருவருப்பும் அச்சமும் வந்தது . இதை வெளியே சொல்வது அசிங்கம் , நம்மை கேவலமாக பார்ப்பார்கள் இப்படி எதை எதையோ நினைத்துக் கொண்டு வெளியில் யாரிடம் சொல்லிக் கொண்டதில்லை இதுநாள் வரையில்.

இப்போது எது என்னை பகிர்ந்து கொள்ள வைத்தது ?

முத்துமீனாள் அவர்கள் எழுதிய "முள் " என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன் . அந்த புத்தகம் தான் என்னை தைரியமாக இதை  வெளியே பகிர்ந்து கொள்ள தூண்டியது . இதை வெளியே சொல்வதன் மூலம் இந்நோய் ஒரு குணப்படுத்த  முடியாத நோயில்லை , இது தொற்று நோயில்லை , இந்த நோயின் ஆரம்பத்திலேயே மருந்து உட்கொண்டு விட்டால் நோய் இருந்த   இடம் இல்லாமல் அழிந்து   போய் விடும்  . இந்த  நோய் சிகிச்சை காலத்தில் வேறு எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்ற உண்மைகளை நாம் நமக்கு   ஏற்பட்ட அனுபவத்தில் மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியுமே என்று எனக்கு தோன்றியது .

முத்து மீனாள் எழுதி இருக்கும் முள் என்ற புத்தகம் அவரின் சொந்த வாழ்வின் பக்கங்கள் . ஐந்தாவதும்  பிறக்கிற பிள்ளை ஆணாக பிறந்துவிடுமோ என்று முத்து மீனாளின் அம்மா கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டு , அந்த மருந்துக்கு தப்பித்து முத்து மீனாள் பிறந்ததில்  இருந்து தொடங்குகிறது புத்தகம் .

பிறந்தது முதல் பால்ய நாட்கள் வரை எல்லோரையும் போல நகர்கிற முத்து மீனாளின் வாழ்க்கை பால்யத்தில் கன்னத்தில் புதிதாக முளைத்த தழும்பில் வேறு திசைக்கு முத்து மீனாளை ஒப்புக்கொடுக்கிறது . எல்லோரும் குடும்பத்தோடு கழிக்க விரும்புகிற சிறு பிராயத்தை தொழு நோய் பாதித்த பிள்ளைகள் தங்கி படிக்கும் விடுதியில்  தன் பால்யம் தொடங்கி இளமை காலம் வரை கழித்தது என்பது சாதாரண ஒரு வாழ்க்கையா ? முத்து மீனாளுக்கு அப்படி ஒரு வாழ்க்கை தான் வாய்த்திருந்தது .     

கைகள் இல்லாமல் கால்கள் இல்லாமல் விரல்கள் இல்லாமல் சீழ் வடியும் உடல் உறுப்புகளோடு இருக்கிற தொழு நோய் மருத்துவமனையில் ஒரு சிறு பிள்ளையாக நுழையும்   போது இருக்கிற மனதின் கலவரம் இந்த நூலில் முத்து மீனாள் விவரிக்கும் போது அதை என்னால் அப்பட்டமாய் புரிந்துகொள்ள முடிந்தது . ஆனால் எனக்காவது ஒரு வருடத்தில் சிகிச்சை முடிந்தது . தாய் தந்தை அரவணைப்பில் இருந்தேன் . ஆனால் முத்து மீனாள் விடயத்தில் அப்படி இல்லை . ஊரை விட்டு எங்கேயோ இது வரை சென்றிராத கும்பகோணத்தில் ஒரு தொழு  நோய் இல்லத்தில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு , படிப்பிலும் கவனம் செலுத்தி படித்து , எல்லோரும்  இருந்தும் ஒரு அனாதை போல வாழ்ந்த கொடிய வாழ்வை முத்து மீனாள் எப்படி தான் எதிர்கொண்டாரோ என்று எனக்கு தோன்றிற்று . அதுவும் அந்த விடுதியில் சிறுமியாக இருந்த  காலகட்டத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டு , வீட்டு ஏக்கத்தோடு தனிமையில்  துயருற்ற அவரின் பால்யம் அத்தனை இனிப்பானது இல்லை.

சிறுமியாக இல்லத்திற்குள் சென்றவர் பூப்படைந்த ஒரு குமரியாகத்தான் சிகிச்சை முடிந்து நோய் சரியாகி  அந்த  இல்லத்தை விட்டு வெளியேறுகிறார் . அதை அவர் விவரிக்கும் போது "சிறையில் இருந்து வெளியே வந்தது போல இருந்தது " என்கிறார் . இந்த ஒற்றை வரியில் ஒன்று புரியும் . எந்த தவறும் செய்யாத ஒரு குழந்தைக்கு  விதி ஒரு சிறைச்சாலை போன்ற தனிமை வாழ்வை அந்த சிறுபிராயத்தில் கொடுத்திருக்கிறது .

அவர் அந்த விடுதியில் இருந்த காலத்தில் நோய் பற்றி மட்டுமோ , தன் வாழ்வின் கசப்பான பக்கங்களை  பற்றி மட்டுமோ எழுதி இருக்கிறார் என்று நினைக்காதீர்கள் . அங்கே இருந்த  கன்னியாஸ்திரிகளின்   கனிவான அனுசரணையை , அங்கிருந்த  பணியாட்களின்  பரிவை , உடன் படித்த நேசக் கூட்டாளிகளை பற்றிய முத்து மீனாளின் பக்கங்கள் மிக மிக எளிய வரிகளில் , ஆர்ப்பாட்டமில்லாத  மொழியில் சொல்லிப் போகிறது . அதுவும் "மதர் நியோமி " முத்து மீனாளுக்கு ஒரு தாயை போல வாய்த்தது , கடவுளின் கிருபை ! கெட்டதிலும் ஒரு நல்லதென்பார்களே, அதை போல முத்து மீனாளுக்கு கிடைத்த  மகோன்னத ஆத்மா மதர் நியோமி . எத்தனை அன்பு எத்தனை அக்கறை ...அதனால் தான் "முள்" புத்தகத்தை மதர் நியோமிக்கு அர்ப்பணித்திருக்கிறார் முத்து மீனாள் .

சிகிச்சை முடிந்த பின் அவருக்கு எல்லாமே சரியாகி விட்டதா என்றால் , அது தான் இல்லை . பெண்ணாயிற்றே . அவருக்கு நோய் பூரணமாக குணமாகி முற்றிலுமாக அதில் இருந்து விடுதலை  பெற்றுதான் அவர் கும்பகோணத்தை விட்டு வெளியேறி மதுரை சென்றார் . ஆனால் நம் ஊரில் தான் குடும்பத்தை கலைப்பதற்கென்றே  சில பிறவிகள் இருக்குமே . நோய் வந்தது தெரிந்தால் அவ்வளவு தான் . அதற்கு தனியாக திருமண சந்தையில்   பெண்ணுக்கு பொன்னாபரணங்கள்   பூட்ட வேண்டுமே ...எதிர்கொண்டார் முத்து மீனாள்.  அதையும் எதிர்கொண்டார் . அது அவர் எதிர்கொண்ட வாழ்வின் இரண்டாம் கட்ட புயல் .  

ஒரு பெண்ணாக கருக்கொண்ட போதே கருக்கலைப்பு மாத்திரைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் அத்தோடு ஓய்ந்துவிடவில்லை . அந்த  போராட்டம் வேறு வேறு வடிவில் அவர் வாழ்வு முழுக்க தொடர்ந்திருக்கிறது . கல்லூரி காலத்தில் தன் தோழியின்  அப்பா தன்னை அவரின் மகள் போல் பழகி தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று முத்து  மீனாள் சொல்வதை படித்த போது நான் அதிர்ச்சிக்குள்ளானேன் . ஒரு பெண்ணை விதி என்னும் பாம்பு எத்தனை வடிவத்தில் தான் கொத்தித் தின்னும் என்று வெறுப்பாய் இருந்தது . வந்து போன வரன்கள் தட்டிக் கழித்து போனதும் , முத்து மீனாள் ஒரு கட்டத்தில்   மன உளைச்சலுக்கு ஆளாகி பின் அதில்   இருந்தும் மீண்டு சொந்தக் காலில் நின்று , கடைசியில் தனக்காகவே பிறந்திருந்த  ஒரு நல்லவரை கரம் பிடித்து இன்றைக்கு மகிச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் .

அவரின் எழுத்தை போலவே அத்தனை எளிமையானவர் மிகுந்த  அன்பானவர் முத்து மீனாள் . அவரை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன் . முதல் முறை நேர்காணல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மறுமுறை அவரின் இல்லத்தில் . அப்போதெல்லாம் நான் அவரின் இந்த புத்தகத்தை படித்திருக்கவில்லை . ஆனால் அவரின் எதிர்நீச்சல் வாழ்க்கையை படித்தபின்னால் இப்போது அவரின் மீதான என் சகோதர பிரியமும் மதிப்பும்  உயர்ந்து கூடுகிறது .

முத்து மீனாள் பெண் சமுதாயத்தில் பின்பற்றத் தகுந்த ஒரு முன்னுதாரணம்  என்று புத்தகத்தை படித்து முடித்த  பொழுது நினைத்துக் கொண்டேன் . ஒரு ஆணுக்கு சமூகத்தில் சில சவுகரியங்கள் இருக்கிறது தான் . ஆனால் அப்படி இருந்தும் எனக்கு வந்த நோயை பற்றி வெளியே சொல்ல நான் வெட்கப் பட்டிருக்கிறேன் . ஆனால் முத்து மீனாள் அப்படி ஒதுங்கி   விடவில்லை .  விதி சுமத்திய  தன் போராட்ட வாழ்வை தான் எப்படி எல்லாம் எதிர்கொண்டு வென்றேன் என எழுதி இருப்பதன் மூலம் பலருக்கு தன்னம்பிக்கையையும் , நம் வாழ்க்கை என்பதை நாம் தான் மகிழ்ச்சியாக நிர்ணயிக்க வேண்டும் என்பதையும் அத்தனை துணிச்சலோடு மிக எளிய மொழி நடையில் எழுதி இருக்கிறார் . அது மட்டுமில்லை அவர் அழுத்தம் திருத்தமாய் இந்த சமூகத்திற்கு இந்த புத்தகத்தில் தன் வாழ்கையின் மூலம் சொல்லும் இன்னொரு சேதி தான் மிக முக்கியமானது .

தொழு நோய் ஒரு தொற்று நோயில்லை . தொழு நோய் வந்தவர்களை அருவருப்பாய் பார்க்காதீர்கள் . மனித தன்மையோடு அணுகுங்கள் . தொழு நோய் என்பது நோய் முற்றாத வரையில் வெறும் மாத்திரைகளிலேயே பூரணமாக குணப் படுத்திவிட முடியும் என்கிற சேதி தான் அது . அதற்கு சாட்சியாக மதிப்பிற்குரிய  முத்து மீனாளும் , நானுமே இருக்கிறோம். நாங்கள் தொழுநோயை வென்று இதோ உங்களை போல வாழ்ந்துகொண்டிருக்கிறவர்கள்.

நாம் இந்த பூமியில் வாழ இருக்கிற எல்லா உரிமையும் , மற்றவர்களுக்கும் இருக்கிறது . அவர்களுக்கு எந்த  நோயிருந்தாலும்  அவர்களும் நம்மை போன்றவர்கள் . நேசியுங்கள் !!!

"மீனாள் பதிப்பகம்" வெளியிட்டிருக்கிற  "முள் " புத்தகம் வாங்கி படியுங்கள் . முள் புத்தகம்  ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்க பட்டிருக்கிறது "Thorn " என்ற பெயரில் . தமிழக வாசகர்கள் இதுவரை வாசித்திராத வாழ்வின்  பக்கங்களை இதில் வாசிப்பீர்கள் .

~~க.உதயகுமார்



Sunday 22 September 2013

மழைக்கால நினைவுகள்

வெயிலெரிக்கும்
இக்காலத்தில்
எனக்கு மழையை பற்றியே
சிந்தனையாக இருக்கிறது

மழையில் நனைந்து
துளி துளியாய் சொட்டி
குளிர் கவிதை எழுதும்
முருங்கை மரம்
இக்காலத்தில் வெளிறிக் கிடக்கிறது

சன்னலில் வந்தமர்ந்து
வண்ணங்களை தூவிச்செல்லும்
வண்ணத்துப் பூச்சிகள்
இப்போது
என் வாசல் வருவதே இல்லை  

மழையில் நனைந்திடாத
செம்பருத்திப் பூக்களில்
என்ன அழகு இருக்கிறது ?

பாதி நனைந்து
தெருவோர டீக்கடையில் பதுங்கி
இருகைகளிலும் சூடு பரவ
உள்நாக்கால் உணர்ந்து சுவைக்கும்
தேநீர்
இவ்வெயில் நேரத்தில்
பிரிந்துபோன நண்பனைப் போல்
தள்ளி நிற்கிறது

முகம்தெரியாத  ஒருவன்
திடுமென
குடைக்குள் நுழைந்து
சிநேகமாய் புன்னகை சிந்தி
மழையை சிலாகிக்கும்
தருணங்கள்
இப்போது வாய்ப்பதே  இல்லை

மழையில்
மண்வாசம் கிளர்ந்தெழும்
செம்மண் சாலைகளில்
ஏகாந்தமாய் பாடித்திரிந்த 
தும்பிகள்
கொதிக்கும் தார் சாலைகளில்
என்ன செய்யும் ..?

வெளியே கரம் நீட்டி
மழையை நிறைத்து
முகத்தை கழுவி
சிலு சிலுக்கும்
மழைக்கால நினைவுகளோடு
வெயிலை வெறிக்கிறது
அனல் ததும்பும் வாழ்வு

கண்ணாடி சன்னலில்
ஒழுகி ஓவியம் வரையும்
மழையோடு பேசிக்கொண்டே
பயணிக்க முடியவில்லை ...
பயணங்கள்
இக்காலத்தில் வியர்த்து  நனைகிறது

எனக்கேனோ
மழையின் நினைப்பாகவே இருக்கிறது,
அது பெய்யும் காலத்தில்
இம்சை என முணுமுணுத்திருந்த போதிலும்...

~~க.உதயகுமார்

......................

எல்லா செடியுமா
ஆழ வேர்பிடிக்கிறது ...?
எல்லா பூக்களுமா
கருத்தரிகின்றன ?
எல்லா மழையுமா
நதிசேர்கிறது..?
எல்லோர் அன்பையும்
புரிந்துகொள்ள முடிகிறதா
உங்களால் ?
உள்ளழும் இதயத்தை
யாரால் அடையாளம் காண முடிகிறது ?
எது தான்
முழுமையானது இங்கே ..?
உங்கள் தலைக்கிரீடம்
இன்னமுமா மேலிருக்கிறது ..?

போர்ட்ஸ்மவுத் பயணமும் , நண்பனின் பிரியமும் !

நான் இந்தியாவில் இருந்தவரை தனியாக எங்கும் பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று . இலக்கிய சமூக நிகழ்ச்சிகளுக்கு  , நண்பர்களின் இல்லங்களுக்கு , அவர்களின் சுப நிகழ்வுகளுக்கு மற்றும் தனிப்பட்ட பயணங்களாக தமிழ் நாடு கேரளா மற்றும் கர்நாடகாவில்  பெரும்பாலான பகுதிகளில் சுற்றித் திரிந்திருக்கிறேன் . ஆனால் அமெரிக்கா வந்த இந்த இரண்டு மாதங்களில் அப்படி எதுவும் பயணிக்கும் எண்ணம் கூட எனக்கு வரவில்லை .அருகே இருந்த மாகாணங்களான டெலவர் , நியு ஜெர்சி போன்ற இடங்களுக்கு சென்று வந்தேன் அறையில் இருக்கும் நண்பரோடு . அதன் பிறகு நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்க அலுவலகத்தில் இருக்கும் உடன் பணிபுரிபவர்கள் குழுவாக கிளம்பினார்கள் . முதலில் தயக்கம் இருந்தாலும் , எனக்கு நீர்வீழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்த காரணத்தால் அவர்களோடு சென்று வந்தேன் . ஆனால் தனியாக  எங்கும் பயணிக்காமல் இருந்தேன் .

கல்லூரிக்காலத்தில் அறிமுகமாகி இன்றுவரைக்கும் என்னுடைய உற்ற நண்பனாக என்னோடு அன்பில் இணைந்திருக்கிற நண்பன் மாடசாமி அமெரிக்காவில் எனக்குமுன்னமே வந்து இங்கே நியு ஹாம்ஷயர் என்ற மாகாணத்தில் போர்ட்ஸ்மவுத் என்னும் இடத்தில்
பணிபுரிந்து கொண்டிருக்கிறான் . அவன் என்னை விடுமுறைக்கு போர்ட்ஸ்மவுத் வரவேண்டும் என்று ஒரு மாதமாகவே அழைத்துக் கொண்டிருந்தான் . எனக்கும் அவனை  பார்க்க ஆவலாக  இருந்தது . சென்ற திங்கள் கிழமை இங்கே அரசு விடுமுறை "தொழிலாளர் தினம் ". எனவே மூன்று நாட்கள் விடுமுறைக்கு நண்பனை பார்க்க செல்லலாம் என முடிவெடுத்தேன் . முதல் முறையாக அமெரிக்காவில் தனியாக 650 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் நண்பனை சந்திக்க பயணம் .

வெள்ளிக் கிழமை மாலை  அலுவலகம் முடித்து நேராக அங்கிருந்து டவுனிங்டவுன் ரயில் நிலையம் சென்று காத்திருந்தேன் . பிலடெல்பியாவுக்கு செல்லும் செப்டா ரயிலுக்கான காத்திருப்பு . இருபது நிமிட காத்திருப்புக்கு பின் குறித்த நேரத்தில் ரயில் வந்தது . ஏறிக் கொண்டேன் . 45 நிமிட பயணத்திற்கு பிறகு பிலடெல்பியா சென்றடைந்தேன் . நகரம் இருளத் தொடங்கி இருந்தது . பிலடெல்பியா முன்னர் அமெரிக்காவின் தலைநகராக இருந்த நகரம் . பழமையான கட்டிடங்களும் , புதிதாக கட்டப் பட்ட வானை தொட நினைக்கும் கட்டிடங்களும் நிறைந்த நகரம் . பிலடெல்பியா நம் வேலூரை போல . சுதந்திர போராட்டத்துக்கான முதல் பொறி சிப்பாய் கலகமாக இங்கே வேலூரில் சூல் கொண்டது போல இங்கிலாந்து என்னும் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை வேண்டி கிளம்பிய அமெரிக்காவின் சுதந்திர தாகம் முதன் முதலாக சூல் கொண்ட ஊர் பிலடெல்பியா . அமெரிக்க வரலாற்றில் பிலடெல்பியா நீண்ட நெடிய பக்கங்களை ஆக்கிரமித்த நகரம் . பிரித்தானிய காலனி ஆதிக்கம் அமெரிக்காவில் கோலோச்சிய  பொழுது பிலடெல்பியா தான் அவர்களின் முக்கிய அரசியல் சார்ந்த வர்த்தகம் சார்ந்த நகரமாக விளங்கி இருக்கிறது . பிலடெல்பியா என்பது ஆங்கில மொழி சொல் அல்ல . இது கிரேக்க மொழி சொல் . கிரேக்க மொழியில் பிலடெல்பியா என்றால் "சகோதர அன்பு ". நான் இங்கே பணிபுரிய வந்திருக்கிற நிறுவனத்தின் தலைமையகம் பிலடெல்பியாவில் தான் இருக்கிறது . இந்த கட்டிடம் அமெரிக்காவில் உயரமான பதினைந்தவாது கட்டிடம் .  58 தளங்களை கொண்ட இக்கட்டிடத்தின் உயரம் 974 அடி . இக்கட்டிடத்தின் அடியில் தான் சப் அர்பன் ரயில் நிலையம் இயங்குகிறது . நான் இந்த ரயில் நிலையத்தில்தான் வந்திறங்கினேன் .

நான் பிலடெல்பியாவில் இருந்து பாஸ்டன் போவதற்கு  பிலடெல்பியாவின் "முப்பதாவது தெரு ரயில் நிலையம் " (30th street station) அருகே தான் பேருந்துக்கு பதிவு செய்திருந்தேன் . எனக்கு பேருந்து இரவு பத்து மணிக்கு . எனவேதான் நேரத்தை போக்குவதற்கு  சப் அர்பன் ரயில் நிலையம் வந்து செண்டர் சிட்டி கட்டிடத்தின் எதிரே அமர்ந்து கொண்டு நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் . எனக்கு உயரமான கட்டிடங்களை அதன் அடியில் நின்று கொண்டு அண்ணாந்து பார்ப்பது ஒரு வகையான உற்சாகத்தை தருகிறது . அன்றைக்கும் அப்படித்தான் அந்தக் கட்டிடத்தை எத்தனை முறை அண்ணாந்து பார்த்திருப்பேன் என்று கணக்கில்லை . ஒரு தந்தை தன் பிள்ளையை தோளில் அமரவைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தார் . கைபேசியில் அவர்களை படம் பிடித்துக் கொண்டேன் . வெள்ளை என்ன கருப்பென்ன மேலை நாடென்ன கீழை நாடென்ன அம்மாக்களும் அப்பாக்களும் எல்லா ஊரிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் ஆகாயத்தை போல ..என்ன அவர்கள் அன்பை வெளிப் படுத்தும் முறைகளில் தான் கொஞ்சம் கொஞ்சம் மாறுபடுகிறது .  நகரத்தின் கட்டிடங்கள் எல்லாம் சூரிய ஒளியை வழி அனுப்பிவிட்டு மின்விளக்குகளை உடுத்தத் தொடங்கின . நான் "முப்பாதவது தெரு ரயில் நிலையம் " நோக்கி கிளம்பினேன் . மணி ஒன்பதிருக்கும் . நான் பேருந்து ஏற வேண்டிய இடத்தில் மற்ற பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள் . நானும் அவர்களோடு வரிசையில் நின்றுகொண்டேன் .  எனக்கு பின்னால் ஒரு ஆப்ரிக்க பெண் "இது பாஸ்டன்  செல்லும் பேருந்துக்கான வரிசையா ?" என்று உறுதிசெய்துகொண்டு ஒரு நன்றியையும் புன்னகையும் பரிசளித்தார் . அவ்விரவுக்கு அது இனிமையாக இருந்தது . நண்பன் மாடசாமி கைபேசியில் அழைத்தான் . பேருந்து ஏறிவிட்டாயா என்ற அவனின் கேள்விக்கு இன்னும் ஒரு மணி நேரமாகும் என்று பதிலளித்தேன் . ஏதேனும் சாப்பிட்டாயா என்றான் . கையில் ஆப்பில் இருக்கிறது கொஞ்சம் பேரிச்சை பழங்கள்  இருக்கிறது  பேருந்தில்  ஏறிய பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றேன் . காலையில் என்ன சமைக்க ஏற்பாடு செய்யட்டும் ? பூரி சாப்பிடுகிறாயா இல்லை தோசை சாப்பிடுகிறாயா ? என்றான் . நான் சிரித்துக்  கொண்டே , உன் விருப்பம் போல் என்றேன் . பத்திரமா வாம்மா , காலையில் உனக்காக விழித்திருப்பேன் , வந்தவுடன் கைபேசியில் தொடர்புகொள் என்று பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான் . அவனோடு பேசிக்கொண்டிருந்ததில் பத்து நிமிடங்கள் கழிந்திருந்தன  .

நண்பன் மாடசாமியை பற்றி சொல்ல வேண்டும் . திருநெல்வேலிக் காரன் . வெள்ளந்தி மனசு . கல்லூரியின் முதலாமாண்டில் எனக்கு பழக்கமானவன் . அன்றையில் இருந்து  பதிமூன்று வருடங்களுக்கு மேலாக எங்கள் நட்பு அன்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது , பயணங்களில்  கூடவே வரும் நிலவினை  போல .  மாடசாமியின் உலகம் மிக சிறியது . நண்பர்களாகிய நாங்களும் , அவனுடைய குடும்பத்தினருமே அவனுக்கு எல்லாம் . அவன் மற்றபடி வெளியுலகில் அத்தனை அழுத்தமாய் தன்னை வெளிக் காட்டிக்  கொள்வதில்லை . சிறந்த  அறிவாளி . கணிப்பொறி மொழியான java  வில்  இடம் வலம் திரும்பி U டர்ன் எல்லாம் அடிப்பான் . கல்லூரியில் எனக்கு ஒரு செமஸ்டர் தேர்வின் பொழுது டைபாய்ட் காய்ச்சல் வந்துவிட்டது . என் அம்மா அருகில்லாத குறையை மாடசாமி தான் அப்பொழுது தீர்த்து வைத்தான் . தினமும் மாடசாமியும் ஞானதுரையும் என்னை கல்லூரி ஆம்புலன்சில் அழைத்துச் சென்று ஊசி போட்டு அழைத்துவருவார்கள் . விடுதிக்கு வந்தவுடன் , எனக்கு இட்லி கஞ்சி போன்ற உணவுகளை வார்டனிடம்  சொல்லி தயார்செய்து கொடுத்துவிட்டு , என் பாடத்தை எனக்கு சொல்லிக் கொடுப்பான் . அவனுக்கு வேறு பரிச்சை இருக்கும் . ஆனாலும் எனக்கும் நேரம் செலவு செய்து சொல்லிக் கொடுப்பான் . மாடசாமியின் அனுசரணை இல்லாமல் போயிருந்தால் அந்த செமஸ்டரே  நான் எழுதி இருக்க மாட்டேன் . இந்த நிகழ்வாலேயே என் அம்மாவுக்கு மாடசாமியின் பெயர் மனதில் அழுந்தப் பதிந்து விட்டது .

கல்லூரி காலத்தில் நிறைய நிறைய நண்பர்கள் எனக்கிருந்திருந்தாலும் கல்லூரியை கடந்து வந்த பின்னால் உறுதியாக ஒன்றுபட்டு இன்றைய நாள் வரைக்கும் மிக பலமாக நீடித்திருக்கிற நட்பின் கோட்டையில் மாடசாமி தான் பிராதானம் எல்லோருக்கும் . அந்தக் குடும்பத்தில் , நான் , பூச்சி என்கிற சுரேஷ் , ஞானதுரை , சத்தியசீலன் , குணசேகர் , ஜெகதீசன் , நாகராஜ் , ஜெயப்ரகாஷ் என உறுப்பினர்கள் . மாடசாமி கிட்டத்தட்ட எங்கள் எல்லோருக்கும் இன்னொரு தாய் . நாங்கள் அனைவருமே ஒருவருக்கொருவரை அம்மா என்று தான் அழைத்துக் கொள்வோம் . மற்றவர்களுக்கு இது வித்யாசமாக தெரியும் . ஆனால் எப்படியோ எங்களுக்கு இப்படி அழைத்துக் கொள்ளும் பழக்கம் வந்தது . இன்று வரை அப்படிதான் பெயர்களோடு அம்மாவும் சேர்ந்து கொள்ளும் . உதாரணத்திற்கு பூச்சிம்மா , உதய்ம்மா, மாடம்மா இப்படி ... நாங்கள் அனைவருமே மிக எளிமையானவர்கள் . நாங்கள் மகிழ்ச்சியாக குதூகலமாக இருக்க எங்களுக்கு எதுவும் வேண்டாம் , நாங்கள் மட்டுமே போதும் . நாங்கள் எல்லோரும் இணைந்திருக்கிற இரவுகளும் பகலும் எங்களுக்கு திருவிழா தான் . விடுமுறை தினங்களில் நாங்கள் சேர்ந்து சமைக்கும் விதத்தை பார்த்து பலர் கண்வைத்திருக்கிறார்கள். ஒருவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் ஒட்டு மொத்த அறையே மருத்துவமனையில் காத்துக் கிடக்கும் .எனக்கு வேறு நிகழ்ச்சிகளோ  பணிகளோ இல்லாத எல்லா சமயங்களும் நான் திருவான்மியூரில் தான் இருப்பேன்   எனக்கு திருவான்மியூர் மனசுக்கு நெருக்கமான இடமாக சென்னையில் இருப்பதற்கு காரணம் என் நண்பர்கள் திருவான்மியூரில் இருந்தது தான். ஒரு இடம் அழகாக  இருப்பதும் சொர்கமாக இருப்பதும் அங்கிருக்கும் நம் மனதுக்கு பிடித்தவர்களாலேயே ... வானுயர்ந்த கட்டிடங்களும் , அடர்ந்திருக்கும் மரங்களும் , பளீரென நீளும் சாலைகள் மட்டுமே ஒரு இடத்தை ஊரை நகரை அழகாக்கிவிடமுடியுமா என்ன ..?

நினைவுகள்   சுழன்று கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை . எனக்கான பேருந்து வந்து நின்றது . வரிசயில் நின்றிருந்த பயணிகளின் பயணசீட்டை  சரிபார்த்து விட்டு பேருந்தின் சிப்பந்தி பயணிகளை அனுமதித்தார் . அது இரண்டடுக்கு பேருந்து . நான் பேருந்தின் மேல்தளத்தில் சென்று அமர்ந்து கொண்டேன் . எப்போதும் என் இரவுப் பயணங்களுக்கென தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பாடல்களை ஒலிக்கவிட்டேன் . MS அம்மா குறையொன்றும் இல்லை பாடத்தொடங்கிய சமயம் பேருந்து கிளம்பியது . நகரை விட்டு பேருந்து விரைந்துகொண்டிருந்தது . எனக்கு உடல் அசதி . அப்படியே கண்ணயர்ந்துவிட்டேன் . இரவு மணி இரண்டு போல பேருந்தை ஒரு மோட்டலில் நிறுத்தினார்கள் . நான் தேநீர்  குடிக்கவென  பேருந்தில் இருந்து வெளியே வந்தேன் . குளிர் கடுமையாக இருந்தது . நம்மூர் மோட்டலில் கொச்சையான சொற்களால் கதறும்  பாடல்களின் சத்தமில்லாத அந்த மோட்டல் புதிதாக இருந்தது .  இரவிலும் அந்தப் பெண் வசீகர புன்னகையோடு இருந்தாள் .

உங்களுக்கு நான் என்ன உதவி செய்யட்டும் ?

எனக்கொரு காபி வேண்டும் ...

பால் கலந்தா , கலக்காமலா ?

பால் கலந்து ...

அவள் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு காபியைபெற்றுக் கொண்டு  அவளுக்கொரு புன்னகையை விட்டுவிட்டு பேருந்தில் அடங்கினேன் . குளிரூட்டப்பட்ட பேருந்து மேலும் என் கைகளை நடுங்கச்செய்தது . குளிர் அடக்கும் ஆடையை  எடுத்து உடுத்திக் கொண்டேன் . பேருந்து கிளம்பியது , சைந்தவி "பிறை தேடும் இரவிலே உயிரே ..." என பாடதொடங்கி இருந்தார் ...  அதற்குப் பின் உறங்கவில்லை . பாடல்கள் கேட்டுக் கொண்டும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டும் பயணம் தொடர்ந்தது . காலை மணி 5:15 க்கு பேருந்து பாஸ்டன் நகரின் தெற்கு பேருந்து நிலையத்தை சென்றடைந்தது .

அமெரிக்காவின் மஸ்ஸாசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் பாஸ்டன் . நம்மூரில் எந்த ஊரோடு ஒப்பிடலாம் என்றால் நாமக்கல் பொருத்தமாக இருக்கும் . கல்வி நிலையங்களால் நிறைந்த நகரம் பாஸ்டன் .

பேருந்து இறக்கிவிட்ட நடைமேடையில் இருந்து நிலையத்திற்குள் வந்தேன் . உலகின் மிகப் பெரிய வல்லரசு , உலகின் பணக்கார தேசம் , உலகின் காவலன் என்றெல்லாம் அடைமொழியோடு அழைக்கபடுகிற தேசத்தில் வீடில்லாத பிரஜைகள் பேருந்து நிலையத்தில் காத்திருப்போர்  அமர்வதர்க்கான இருக்கைகளில் உறங்கிக் கொண்டிருந்தார்கள் , அழுக்கான தங்கள் உடமைகளோடு . "தன் கொண்டையில் பேன் இருப்பதை பொருட்படுத்தாத சீமாட்டி எதிரே இருப்பவளின்  கூந்தலுக்கு  சிக்கெடுத்தாளாம்" என்று என் பாட்டி சொல்லும் பழமொழி ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது .

நான் பாஸ்டனில் இருந்து போர்ட்ஸ்மவுத்   செல்ல இன்னொரு பேருந்து பிடிக்க வேண்டும் . நண்பன் ஏற்கனவே எனக்கு விவரங்கள் சொல்லி இருந்தான் . ஆனால் நண்பன் சொன்ன பேருந்துக்கான பயணசீட்டு அலுவலகம் காலை 7:30 குத்தான் திறக்கும் என்ற அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது . அங்கிருந்த ஒரு காவலரை அணுகி விவரம் கேட்டேன் . அவரோ உங்களுக்கு அடுத்த பேருந்து இன்னும் அரை மணி நேரத்தில் இருக்கிறது , நீங்கள் பயணசீட்டை பேருந்திலேயே எடுத்துக் கொள்ளலாம் என்று பாலை வார்த்தார் . அப்பாடா   என்று அவர் சொன்ன இடத்தில் வந்து அமர்ந்து காத்துக் கொண்டிருந்தேன் . பேருந்து வந்தது . இங்கே பேருந்துகளுக்கு நடத்துனர் எல்லாம் இல்லை . ஓட்டுனர் மட்டும் தான் . அவரிடம் பயணசீட்டு என்னிடம் இல்லை என்ற விவரத்தை சொன்ன வுடன் , "கவலையில்லை , உங்களுடைய அடையாள அட்டை ஏதேனும் இருந்தால் என்னிடம் ஒப்படையுங்கள் , நீங்கள் போர்ட்ஸ்மவுத் சென்று  பயணசீட்டை  பெற்றுக்கொள்ளும்போது உங்களின் அடையாள அட்டையை அவர்கள் ஒப்படைப்பார்கள்  "  என்று சொன்னார் . எனக்கு திக்கென்றிருந்தது . என்னிடம் பாஸ்போர்ட் மட்டும் தான் இங்கிருக்கும் ஒரே அடையாள அட்டை . அதை எப்படி இவரிடம் கொடுப்பது ..? எனக்கு வேறு வழியில்லை , மருந்தீஸ்வரரை   நினைத்துக் கொண்டு பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு பேருந்தில் அமர்ந்து கொண்டேன் . பேருந்து கிளம்பியவுடனேயே நான் தூங்கிப் போனேன் . இடையே திடுமென விழித்த பொழுது வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது . பேருந்து நியுபெரிபோர்ட் என்னும் இடத்தை கடந்து கொண்டிருந்தது . பேருந்து சன்னலில் அலை அலையாக மழை வழிந்து கொண்டிருந்தது . எனக்கு தூங்க தோன்றவில்லை . சன்னலில் மழையை பார்த்தபடி பயணம் தொடர்ந்தது. வாய்விட்டு பாடவேண்டும் போல இருந்தது . மனசுக்குள்  அப்படி ஒரு இனம் புரியா மகிழ்ச்சி. ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகு போர்ட்ஸ்மவுத் வந்து சேர்ந்தேன் . மழை விட்டிருந்தது . அங்கே என் பாஸ்போர்டையும்  பயணசீட்டையும் பெற்றுக் கொண்டு பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தேன் . என் பின்னாலேயே ஒரு பெண் ஓடிவந்தாள் . என்ன என்பது போல் திரும்பிப் பார்த்தேன் , அவள் கையில் என்னுடைய வங்கி  கணக்கு அட்டை . பேருந்துக்கு கட்டணம்  செலுத்தி விட்டு கணக்கு அட்டையை பெற்றுக் கொள்ளாமலே வந்துவிட்டேன் . நன்றியோடு பெற்றுக் கொண்டு புன்னகைத்தேன் . இந்த நாள் இனிய நாளாக  இருக்கட்டும் என்று அவளும் புன்னகைத்தபடி உள்ளே கடந்துவிட்டாள்.

மாடசாமிக்கு நான் வந்து விட்ட விவரத்தை சொன்னேன் . அடுத்த பத்துநிமிடங்களில் மாடசாமியும் அவனுடைய அறை நண்பர் நடேஷும் வந்தார்கள்  . பரஸ்பர  நலம் விசாரிப்புக்கு பிறகு அவர்களின் இல்லத்திற்கு நகரத் தொடங்கியது  கார் . போர்ட்ஸ் மவுத் மிக எழிலாக இருந்தது . அதிகம் ஜனசந்தடி இல்லாமல் ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் தூரம் அதிகமாக இருந்தது . அடர்ந்த மரங்கள் ....மாடசாமி சொன்னான் , "அக்டோபரில் இங்கே பணிகாலத்திர்க்கு முன்பு இம்மரங்களின் இலைகள் எல்லாம் பச்சை துறந்து வண்ணவண்ணமாக மாறும் . அப்போதும் வா இம்மரங்கள் உனக்கு மிக பிடிக்கும் " . எனக்கு உண்மையில் போர்ட்ஸ் மவுத் பிடித்திருந்தது . என் நண்பன் மாடசாமி யின் அருகாமையாலோ  என்னவோ ....

வீடு வந்து சேர்ந்தோம்  . உங்கள்  வருகையின் நிமித்தம் அறையை நேற்று தான் சுத்தம் செய்தோம் என்று மாடசாமியின்  நண்பர் நடேஷ் தெரிவித்தார் . இனிமையாக பேசினார் . புதிதாக சந்திப்பதுபோல் இல்லாமல் சந்தித்த சில மணி துளிகளில் "உங்களை பற்றி நிறைய சொல்லிக் கொண்டிருந்தார்  மாடசாமி " என்று ஒட்டிக் கொண்டார் . உடுப்பை கூட மாற்றாமல் அவரோடு எங்கள் கல்லூரி காலத்தை திருவான்மியூர் நாட்களை பேசிக் கொண்டிருந்தேன் . வழக்கம் போல மாடசாமியின் கெடுபிடிகள் ஆரம்பமானது . "போதும் முதல்ல இந்த உடுப்ப மாத்திகிட்டு பல்ல வெளக்கு " .. சரிங்கசாமி என்று உடுப்பை மாற்றிக்கொண்டு காலை  வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு வந்தேன் . தேங்காய் சட்டினி தயாராகிக் கொண்டிருந்தது .

முட்டை தோசை , பொடி தோசை .... இரண்டு மாதத்திற்கு பிறகு தோசையை கண்ணால் பார்த்தேன் . வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு மாடசாமியோடு என்னென்னவோ  பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை . கொஞ்ச நேரம் என்னை ஓய்வெடுக்க சொன்னான் . அப்படியே தூங்கிவிட்டேன் . கண் விழித்துப் பார்த்தால் எனக்கு பிடிக்குமென "Egg  Fried  rice " தயாராகிக் கொண்டிருந்தது . மனசும் வயிறும் இரண்டு மாதத்திற்கு பிறகு திருப்தி பட்டுக் கொண்டது . மாடசாமி மற்றும் பூச்சியின் அருகாமை இருந்துவிட்டால் போதும் குழந்தயாகிவிடும் மனசு .  குதூகலமாய் இருந்த மதியநேரத்தில் என்னோடு வானமும் சேர்ந்து கொண்டது . இருண்டு இடி இடித்து மழை கொட்டியது . பால்கனியில் இருந்தவாறு மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு மாடசாமியின் நெல்லை தமிழ் ஆறுதல்கள் அறிவுரைகள் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தது .

அன்று மாலை , நான் மாடசாமி , நடேஷ் மற்றும் மாடசாமியின் மற்றொரு நண்பர் சார்லஸ் என நால்வரும் அங்கிருக்கும் கடைகளுக்கு சென்றோம் . எனக்கு தேவையான உடுப்புகளை மாடசாமியே   தேர்ந்தெடுத்தான் .  சிரிப்பும் கொண்டாட்டமுமாக அம்மாலையை கடந்து புது துணிகளோடு இரவு வீடு வந்தோம் . நடேஷ் இரவு உணவாக பரோட்டாவும் சிக்கன் கொத்துக் கறியும் தயார் செய்து பரிமாறினார் . அவ்வளவு ருசி . முதலில் பரோட்டா வேண்டாம் என்றவன் , கொத்துக் கரி ருசியில் நான்கு பரோட்டாக்களை துவம்சம் செய்தேன் . இன்னும் சாப்பிடுங்கள் என்று அன்பு கட்டளை நடேஷ் இட்ட பொழுதும் , வயிற்றில் இடமில்லமால் நெளிந்து மறுத்தேன் .  சனிக் கிழமை ஒரு நாள் அவ்வளவு இனிமையாக மகிழ்ச்சியாக கடந்துபோனது . இரவு UNO என்ற  விளையாட்டு சொல்லிக் கொடுத்தார்கள் . சீட்டுக்கட்டு மாதிரி . எனக்கு அது மிகவும் பிடித்துப் போனது .  நள்ளிரவு ஒரு மணி வரை விளையாடிக் கொண்டிருந்தோம் , வெடிசிரிப்புகளோடு . எப்போதும் போல மாடசாமியே போங்கு ஆட்டம் ஆடி வெற்றிபெற்றுக் கொண்டிருந்தார் :-)  .  எப்போதும் போல நான் தான் மண்ணை கவ்வினேன் .

நாளைக்கு எங்கே எல்லாம் போகப் போகிறோம் என்ற உரையாடலுக்கு  பிறகு சனிகிழமை இரவு விடிந்து ஞாயிற்றை பார்த்தோம் . காலையில் வடை , காரப் பணியாரம் என கமகம சாப்பாடு . சீக்கிரம் கிளம்பவேண்டும் என உத்தரவு . அப்படியே கிளம்பி நாற்பது நிமிட கார் பயணத்திற்கு பிறகு என்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள் . அங்கு சென்ற நிமிடத்தில் குழந்தையாகிப் போனேன் . அது ஒரு கிராமத்தில் இருக்கும் பண்ணை தோட்டம் . ஆப்பிள் மரங்களும் , பீச் (peach ) மரங்களும் , plum  மரங்களும்  , ப்ளூ பெர்ரி செடிகளும் நிறைந்திருந்த தோட்டம் அது . அங்கு சிறப்பு என்ன வென்றால் , நமக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பழங்களை தின்றுகொள்ளலாம் . பணம் கேட்க மாட்டார்கள் . நாம் வீட்டுக்கு கொண்டு வரும் பழங்களுக்கு மட்டுமே எடை போட்டு பணம் செலுத்த வேண்டும் .  எங்கள் மதிய சாப்பாடே ஞாயிறு அன்று plum , ஆப்பிள் , பீச் மற்றும் ப்ளூ பெரி தான் . சலிக்க சலிக்க மரத்தில் இருந்து பழங்களை  பறித்து தின்றோம் . வார்த்தைகளில் விவரிக்க முடியா மகிழ்ச்சி எனக்கு . அங்கிருந்த மரங்களை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது .  நடுநடுவே மாடசாமியும் நானும் "ஜேம்ஸ் இந்த இடத்தை பற்றி நீ என்ன நெனைக்குற ..பீட்டர் இது ஒரு அழகான தோட்டம் " என்று தமிழ்  டிஸ்கவரியில் வருவது போல மிமிக்ரி செய்து கொண்டு தோட்டத்தின் பழங்களை சுவைத்து மகிழ்ந்தோம் .  வீட்டுக்கு தேவையான பழங்களை நாங்களே தேர்ந்தெடுத்து பறித்துக் கொண்டு எடை போட்டு வாங்கிக் கொண்டோம் .

பின் அங்கிருந்து , ஹாம்ப்டன் கடற்கரைக்கு சென்றோம் ... அட்லாண்டிக் பெருங்கடல் .!  ஏனோ  எனக்கு அக்கடற்கரை அன்னியமாக இருந்தது . எனக்கோ குளிரில் காதுமடல்கள் சில்லிட்டன. ஆனால் அங்கே ஆணும் பெண்ணுமாய் ஆடை என்று சொல்லும்படியாக பெரிதாக ஒன்றுமில்லாமல் மிக குறைவான அடைககளில் கடற்கரை மணலில் கிடந்தார்கள் . இரண்டு இளசுகள் அழுந்த முத்தமிட்டபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் . அடிக்கடி பெயர் தெரியாத  ஒரு பறவை என் தலைக்கு மேலே தாழ பறந்து சென்றது .மாடசாமியோடு கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தேன்  . பிறகு கொஞ்சம் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம் .  ஏனோ அக்கடற்கரையில் எனக்கு கால் நனைக்க வேண்டும் என்று தோன்றவில்லை  .  அங்கிருந்து கிளம்பும்  நேரம் மழை பிடித்துக் கொண்டது . மழையில் கடற்கரை சாலையில் அந்த  பயணம் அத்தனை சிலிர்ப்பாக இருந்தது . கொஞ்ச தூரம் கடந்திருப்போம் கடலின் மேலே வானவில் ....மீண்டும் ஓரிடத்தில் காரை நிறுத்தி வானவில்லோடு கடலை வேடிக்கை பார்த்துவிட்டு  கிளம்பினோம் . என் மகிழ்ச்சி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியது . விடிந்தால் நான் கிளம்பவேண்டுமே ....மாடசாமி மிகச்சரியாக அதை கணித்து , கவலைபடாதம்மா ...அடுத்த மாசம் நான் உன் வீட்டுக்கு வரேன் ... இங்க தான இருக்கேன் .... நம்ம friends  எல்லாரும் உன்ன பத்தி தான் கவலை படறாங்க . உதயக்குமார பார்த்துக்கோ மாடுன்னு தான் என்கிட்டே சொல்றாங்க . சந்தோஷமா இரும்மா  என்று ஏதேதோ ஆறுதல் சொன்னான் . அவனுக்கு வரும் நவம்பரில் திருமணம் . நிறைய நண்பர்களின் திருமணங்களுக்கு சென்றிருக்கிறேன் . ஆனால் மாடசாமியின் திருமணத்திற்கு என்னால் செல்ல முடியாத சூழல் . அதை நினைத்து நான் வருத்தப் பட்ட பொழுதும் , திருமணம் முடித்து நான் இங்கே தானே வருவேன் . பிறகேன் கவலைப் படுகிறாய் என்று என்னை தேற்றினான்.

இரவு யாருக்கும் பசியில்லை என்று சொன்னோம் , ஆனால் மாடசாமி "உனக்குதான் வெண்பொங்கல் பிடிக்குமில்ல ..செய்யுறேன் கொஞ்சம் போல சாப்பிட்டு படு " என்று வெண்பொங்கல் செய்து கொடுத்தான் . இரவு உணவுக்குப் பின் சோர்ந்து போய் இருந்தேன் ..மாடசாமி கவலைப் படாதம்மா போகப் போக உனக்கு இங்க பிடிக்கும்  . காலைல   உனக்கு பேருந்து ஆறு மணிக்கு எனவே நீ இப்பவே உன் பொருட்களை எடுத்துவை என்று எனக்காக தயார் செய்தான் . நாளை பயணத்தின் பொழுது மதியம் சாப்பிட பிஸ்ஸா பர்கர் தான் கிடைக்கும் எனவே நான் உனக்கு மதிய உணவு ஏற்பாடு செய்கிறேன் என "தயிர்சாதம் " செய்து கட்டிகொடுத்தான் . தாய் வீட்டுக்கு சென்று  வருகிற மகளை பார்த்திருக்கிறீர்களா ? ஒரு பையோடு போய் மூணு நாலு மூட்டைகளோடு வருவாள்  அபப்டித்தான் இருந்தது என் நிலைமையும். போகும் பொழுது இல்லாத பல பொருட்களை வரும்போது மாடசாமி என் பையில் திணித்திருந்தான் . காலை உணவுக்கு "வெண்பொங்கலும் , மைசூர்   பாக்கும் "  ஒரு டப்பா , மதிய உணவுக்கு தயிர் சாதமும் மாவடுவும் ஒரு டப்பா , இது போக எனக்காக தக்காளி  ஊறுகாய் , கறிவேப்பிலை பொடி , கோங்குரா சட்டினி , வத்தக்  குழம்பு என ஏகப்பட்ட பாட்டில்கள் பைக்குள் அடைக்கப் பட்டிருந்தது . நடேஷ் என்ற நண்பர் ஒரு பையில் பழ வகைகளை போட்டு கொண்டு வந்து அவர் ஒரு பக்கம் திணித்தார் . புதுத்துணிகள் , தின்பண்டம் என என் பை நிறைமாத  கர்பிணி போல வயிற்றை  சாய்த்துக் கொண்டு இருந்தது ...

காலையில் மாடசாமி எழுப்பிவிட்டு என்னை தயார்செய்து காரில் ஏற்றிக்கொண்டான் . பேருந்து நிலையம் செல்லும் வரை நான் எதுவும் பேசவில்லை . என் முகம் சுருங்கி கிடந்தது . அவன் தான் பேசிக் கொண்டே வந்தான் . பேருந்தில்  ஏற்றிவிட்டு பேருந்து கிளம்பும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தான் .பேருந்து நகரத் தொடங்கியது ...மாடசாமியின் உருவம் மறைந்து புள்ளியாய் தேய்ந்த பிறகு மனசு கனத்துக் கிடந்தது . பயணம் துவங்கும் போது குழந்தை பிறந்தவீடாக குதூகலித்து கிடந்த மனசு , பயணம் முடித்து திரும்பும் போது மரணம் நிகழ்ந்த வீடு போல் துக்கித்து கிடந்தது . அந்த இரண்டு நாட்களும்  எனக்கு போர்ட்ஸ்மவுத்  இன்னொரு திருவான்மியூராக இருந்தது . மண்ணின் மணத்தை மீண்டும் உணரச்செய்தான் நண்பன் .

இதோ மீண்டும் டவுநிங்டவுன் , மீண்டும் அலுவலகம் , மீண்டும் தனித்த அந்தி ....

 நேற்றிலிருந்து தாய்வீட்டில் இருந்து திரும்பிவந்த புதுப்பெண் போலதான் மனசு அவ்வப்பொழுது அனிச்சையாக விசும்புகிறது  ... அடுத்த போர்ட்ஸ் மவுத் பயணம் அக்டோபரில் , அதுவரைக்கும் இந்த  இரண்டு நாள் நினைவுகள் தாக்குப் பிடிக்கும் ...


~~க.உதயகுமார்

விழைவு

ஓங்கி உயர்ந்த மரங்கள்
இச்சாலைகளை போர்த்தி இருக்கிறது
கூடடைந்த பறவைகளின்
குதூகலகுரல்
அமைதியை விடவும்
மதுரமாய் இனிக்கிறது

நாயினை
மடியில் ஏந்தி  நடக்கும்
இக்கரை தாயொருத்தியின்
விலையுயர்ந்த கைநுனி கயிற்றில்
சிரித்துக் கொண்டே கடக்கிறது குழந்தை
எப்படியான வாழ்க்கையிலும்
சிரிக்கத்  தவறுவதில்லை
குழந்தைகள்

அருவியைப்  போல
சதா புகைந்து கொண்டே இருக்கிற
விடைத்த மூக்கு தாத்தாவின்
முகமன்
எப்போதும்போல்  வரவேற்கிறது
குடியிருப்பின் வாசலில்
நீண்டு  விரியும்
புல்தரையில்
தங்கமென ஜொலிக்கிறது
மீதமிருக்கும் பகல்

மழைக்கு  முன்னதாக
தாழப் பறக்கும்
தும்பியினை போலொருத்தி
இன்றும் பெயர் சொல்லி அழைக்கிறாள்
திரும்பிச் சிரிக்கையில்
இன்றைய நாள் எப்படியென கேட்டு
புருவம் வளைக்கிறாள்
சொல்லும்படியான நாளில்லாத  பொழுதும்
அவள் எதிர்பார்த்த பதிலுரைக்கிறேன்
ரசிக்கத்தகுந்ததாய் இருக்கிறது
அவளுதிர்த்த முத்து

கதவடைத்து
உள்நுழைகையில்
இன்றும் அமர்ந்திருக்கிறது
அறையினுள் நடுநாயகமாய்
எனக்கெனவே காத்திருக்கும்
தனித்த அந்தி


இன்றும் மழை வந்தால்
நன்றாக இருக்கும்


~~க.உதயகுமார்

பால்ய கால நண்பன்

அன்பிற்கினிய ஆனந்தராஜ்  ....

எப்படி இருக்கிறாய் .... நாம் பார்த்து பேசி சரியாக ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது . நம் நண்பன் பிரதீப்பின் திருமணத்திற்கு  நீ நிச்சயம் வருவாய் , உன்னை சந்தித்து விடவேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது . ஆனால் உன்னுடைய தாய் தந்தையரை மட்டுமே சந்திக்க முடிந்தது .

காலம் எப்போதும் தன் வேலையை செவ்வனே செய்கிறது . எதன் பொருட்டும் காலச்சக்கரம் நிற்பதே இல்லை . ஒவ்வொரு வருடமாய் உருட்டிக் கொண்டே இருக்கிறது . துயரோ இழப்போ வலியோ மகிழ்ச்சியோ காலத்திற்கு இருப்பதில்லை . மனிதர்களை போல அல்லாமல் அது  எப்போதும் மாறாத நித்திய குணங்களோடு இருக்கிறது .

நிறைய நிறைய நண்பர்கள் இருந்தாலும் , என் பால்யமென்னும் நினைவோடையின் ஆழத்தில் ஒரு கூழாங்கல்லை  போல  வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாத மௌனத்தோடு நீ கிடக்கிறாய் . நம் சிறுபிராயத்தில்  நீ இருந்த நாப்பாளைய தெருவும் நானிருந்த சர்வேசன் தெருவும் பிரதீப் வாழ்ந்த ATS காலனியும்   அங்கேயே தான் இருக்கின்றன . ஆனால் நாம் தான் எங்கெங்கோ பயணப் பட்டு ஆளுக்கொரு  மூலையில் கிடக்கிறோம் . ஊரும் தெருவும் எங்கும் போவதில்லை . தளும்பும் நினைவுகளோடு அவை அங்கேயே இருக்கின்றன . புழுதி பறக்க தன்னோடு விளையாடிய சிறுவர்களை அவை மறப்பதும் இல்லை . ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தெருவுக்கும் தனித் தனியே நினைவுகள் உண்டு .

அரை கால் சட்டை காலத்தில் அறிமுகம் ஆகும்போது உனக்கோ எனக்கோ தெரிந்திருக்கவில்லை . நாம் தொடரும் எல்லா காலத்திலும் நண்பர்களாக இருக்கப் போகிறோம் என்று . LKG யில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம் , பின் ஆறிலிருந்து  பத்து வரை நீ ஒரு பள்ளியிலும் நான் ஒரு பள்ளியிலும் பிரிந்திருந்தோம் . பின் மேல்நிலை படிப்பில் ஒன்றாக மீண்டும் இணைந்து படித்தோம் . எனக்கு நினைவிருக்கிறது ..ஒரு நாள் வெயிலெரிக்கும் மதிய நேரத்தில் சிவன் கோவில் அருகே உன்னை சந்தித்தேன் . நான் ராமகிருஷ்ணா பள்ளியில் சேரப்போவதாக சொன்ன பொழுது நீ  அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தாய் . காரணம் நீயும் அதே பள்ளியில் சேரவிருப்பது பின்னர் எனக்கு தெரியவந்தது .

என் மீதான உன் மதிப்பீடுகள் எப்போதும் உயரத்தில் தான் அக்காலங்களில் இருந்திருக்கிறது . எனக்கான அடையாளம் என அக்காலத்தில் ஒன்றும் இருந்ததில்லை . மிகுந்த கூச்ச சுபாவம்  உடையவன் , பிறரோடு அதிகம் பேசுவதை அறவே அன்றைக்கு தவிர்த்திருக்கிறேன் . நண்பர்கள் என எனக்கிருந்த வட்டம் மிக மிக சிறியது . ஆனால் நீ எப்போதும் என் மீது அளப்பெரிய அன்போடு இருந்திருக்கிறாய் . பிறர் என்னை கிண்டல் செய்யும்போது கூட நான் முணுக்கென முகம் வாடி கோவித்துக் கொள்வேன் . அப்படியான   ஒரு அசௌகர்யம்  கூட நீ எனக்கு தந்ததில்லை .

நீ எனக்கு நேரெதிர் . உன் கையெழுத்து இன்னமும் எனக்கு கண்ணை  மூடினால் இமைகளுக்கு கீழ் வந்து போகும் . முத்து முத்தாக அவை அழகுடைய எழுத்துக்கள் . படிப்பில் பல சமயங்களில் நீ முதல் . சேவியர் பள்ளியில் நட்சத்திர பேட்ஜ் பெரும்பாலும் உன் சட்டையில் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது . நண்பர்கள் குழுவில் எப்போதும் நீ பிறர் கவனம் அன்பை  ஈர்ப்பவன் . சுவையோடு விஷயங்களை பேசுகிறவன் .  உன்னை யாரும் வெறுத்தவரில்லை  .

எல்லோரை விடவும் நீ என் மீது அக்கறையும் கவனமும் கொண்டவன் . உன் வீட்டில் இருக்கும்போது எனக்கு இன்னொருவர் இல்லத்தில் இருக்கிறோம் என்ற எண்ணமே வந்ததில்லை . உன் பெற்றோரும் சகோதரர்களும் அதற்கொரு காரணம் . உனக்கு நினைவிருக்கிறதா .? வண்டிமேட்டில் உங்கள் வீடிருந்த பொழுது , உன் வீட்டின் தண்ணீர் தொட்டி மீது நீண்ட நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம் . பெரும்பாலும் நம் தனியான பேச்சுக்கள் திரைப் பாடல்களை பற்றியது . நாம் சில பாடல்களை கூட பாடிக்காட்டிக்கொள்வோம் . முதன் முதலில் பாடல்களில் நான் வரிகளை கவனிக்க தொடங்கியது உன்னால் தான் . "முகிலனங்கள்  அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ ..." என்று நீ உன் குரலில் பாடும்பொழுது எனக்கு அது அவ்வளவு பிடிக்கும் . அக்குரல் எனக்கு இப்போதும் செவிப்பறை சுவர்களில் தனித்து அடையாளம் தெரிகிறது . உனக்கிந்த பாடலின் வரிகள் அவ்வளவு பிடிக்கும் . முகிலனங்கள்   என்றால் என்ன என்று கூட எனக்கு அன்றைக்கு தெரியாது . நீ விளக்கம் சொன்னாய் . பிறகு ஒவ்வொரு பாடலிலும் வரிகளை கவனிக்கத் தொடங்கினேன் . இப்போதெல்லாம் பாடல்களில் நான் பிரதானமாக கவனிப்பது இசையை அல்ல , வரிகளைத்  தான் ...

நீ புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது , என்னை ஒரு முறை அங்கே அழைத்திருந்தாய்   . நான் அப்போது கல்லூரி எதிலும் சேராமல் சும்மா இருந்த வருடம்அது .அக்கல்லூரியின் பிரம்மாண்டத்தை எனக்கு ஒவ்வொன்றாக சுற்றிக் காட்டி விவரித்ததாய் ...உன் விடுதியின் நண்பர்களுக்கு என்னை "புலவன்" எனை கேலியாக அறிமுகப் படுத்தி வைத்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது . என்னை ஒரு முறை கூட உன்னுடைய சொற்கள் புண்படுத்தியதே  இல்லை . நான் கல்லூரி எதிலும் சேராமல் இருந்தது அன்றைக்கு எனக்கு மனதளில் ஒரு வித சோர்வை கொடுத்திருந்தது . என்னோடு பேசுகிற பலர் அதை சுட்டிக் காட்டியே விமர்சித்தார்கள் . ஆனால் உன்னை காண நான் உன் கல்லூரிக்கு வந்த பொழுது என்னோடு நீ பேசியவைகள்   எனக்கு என் மீதான தன்னம்பிக்கையை அதிகரிக்கவே செய்தது . கைச்செலவுக்கு   பணம் கொடுத்து அன்றைக்கு நீ என்னை வழியனுப்பியபொழுது உன்னோடு படித்திருக்கலாம் ,  உன்னோடு படிக்கவேண்டும் என மனம் தவித்து கலங்கியது . எப்போதும் உன் அருகாமை அற்று இருப்பது எனக்கு அப்படித்தான் இருந்திருக்கிறது .

எல்லோரும் கல்லூரி சேர்வதற்கான கலந்துரையாடலுக்கு தன் பெற்றோரோடு செல்வார்கள் இல்லையேல் உறவினரோடு செல்வார்கள் . ஆனால் நானோ உன்னை அழைத்தேன் . நீ கல்லூரிக்கு விடுப்பெடுத்துக்   கொண்டு எனக்காக புதுச்சேரியில்   இருந்து சென்னை வந்தாய் . எனக்கு முக்கியமான  வாழ்வின் திருப்பங்களில் நீ என்னோடு  இருந்தால் என் முடிவுகள் சரியாக இருக்கும் என்று திடமாக நம்பினேன் . எப்போதும் .

ஆனந்த் , எனக்கு கவிதைகள் எதுவும் எழுதத்தெரியாத   காலகட்டத்தில் நீ தான் எனக்கு தெரிந்த கவிதை எழுதும் முதல் நண்பன் . உனக்கு நினைவிருக்கிறதா ..? சில அதிருப்திகளால் கருத்து வேறுபாடுகளால் கொஞ்சம் மாதம் நான் உன்னோடு பேசவில்லை .அந்த இடைவெளியை தகர்க்கும் பொருட்டு ஒரு புதிய வருடத்தின் முதல் நாள் ஒரு வாழ்த்து அட்டையில் ஒரு கவிதை எழுதி என் வீட்டிற்கு கொண்டுவந்தாய் . மிகச்சரியாக 14 ஆண்டுகளுக்கு முன் , எனக்கு இன்னும் அந்த கவிதையின் வரிகள் நினைவிருக்கிறது ஆனந்த் ...
"நம் நட்பின் வேர்கள்
என் நெஞ்சில் உள்ளதால்
கிளையொன்று மறைந்தாலும்
புதுக்கிளையாய் மலர்ந்திடுமே ..."  இப்படி அந்தக் கவிதை முடியும் .
இந்த வாழ்த்து அட்டையை நான் எப்போதும் என்னோடு வைத்திருக்கிறேன் . ஓசூர் ,மைசூர் , பெங்களூரு , சென்னை , அமெரிக்கா  என என் வாழ்க்கையை நடத்த நான் எங்கெல்லாம் பயணித்தேனோ அங்கெல்லாம் என்னோடு வந்திருக்கிறது அந்த வாழ்த்து அட்டை .

கைப்பேசிகள் நம் தமிழ்நாட்டில் வந்திராத  காலகட்டம் . நீ புதுச்சேரியிலும் , நான் ஓசூரிலும் , பிரதீப் வேலூரிலும் இருந்த சமயத்திலும் நாம் பேசிக்கொள்ளாமல்   இருந்ததே  இல்லை . கடிதம் எழுதிக் கொள்வோம்  . எனக்கு கடிதம் எழுதுவது மிக பிடித்த ஒன்று . நீ எனக்கு எழுதிய கடிதங்களும் , பிரதீப் எனக்கு எழுதிய கடிதங்களும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது . அமெரிக்கா வரும்பொழுது அவைகளையும் எடுத்துவந்தேன் . இதுவரையில் அவைகளை எத்தனை முறை படித்திருப்பேன் என்றே எனக்கு தெரியவில்லை . இன்று மாலை கூட படித்துக் கொண்டிருந்தேன் . வாழ்வில் சில கட்டங்களை இப்படியே நீடித்தால் என்ன என நாம் பிரியப்படுவோம் . ஆனால் அவை அப்படி நீடிப்பதில்லை . மாலை நேர வானை போல தங்கமென ஜொலிக்கிற வானம் , திடுமென இருட்டியும் விடுகிறது .

பெங்களூரில் என் வாழ்வில் ஏற்பட்ட அனேக விஷயங்கள் , நான் என் உடல் நலத்தை வலிந்து கெடுத்துக் கொண்ட விதத்தில் உனக்கு அதிருப்திகள் இருந்தது . என்ன செய்ய ..எல்லாம் என் கைமீறி நடந்துவிட்டது . கண்ணை மூடி நினைத்துப்  பார்த்தால் எனக்கு மிகுந்த
வலி தருவதாகவே இருக்கின்றன  வாழ்வின் சில பக்கங்கள் . நீ மிகுந்த உன்னத இலட்சியங்களோடு பயணிக்கிறவன் . இச்சமூகத்தின் மீதான உன்னுடைய அக்கறை அதன் பொருட்டு நீ செய்து  கொண்டிருக்கும் சேவை இவை என்னை பிரமிப்படைய வைத்திருக்கிறது . அப்படியான உன்னை சில மாதம் என் பொருட்டு கலங்கவிட்டிருக்கிறேன் . என் மீதான அதிருப்தி உனக்கு அப்போது தான் நிலைகொள்ளத் தொடங்கியது ..இல்லையா ..?

நான் இப்போது நலமாக இருக்கிறேன் நண்பா.....உன்னை தொந்தரவு செய்யக் கூடாது  என்றே தள்ளியே இருந்தேன் . உன்னுடைய அர்த்தமிகுந்த நேரங்களை இனி எபோதும் என் பொருட்டு நான் சில மணித்துளிகளையும் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை . உன் கைபேசி எண் கிடைத்தும் பல  முறை அழைக்க நினைப்பேன் . பின் அப்படியே விட்டுவிடுவேன் .

இன்று மாலை பழைய கடிதங்களை பிரட்டிக் கொண்டிருந்தேன்  . அப்படியே பழைய பால்யத்தையும் . நண்பா உனக்கின்று   பிறந்தநாள் இல்லையா ..செப்டம்பர் பதினைந்து எப்போதும் மறந்ததில்லை நான் .

நண்பா , மனசின் அடியாழத்தில் இருந்து வாழ்த்துகிறேன் , நீ மிக சிறப்பாக இருப்பாய் . எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் . இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆனந்த் .

இன்றுன்னை கைபேசிக்கு அழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது ,. ஆனால் என் மனத்தடையை மீறி அழைப்பேனா என்று இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும்  இந்த வினாடி வரை எனக்கு தெரியவில்லை . ஆனால் ஒன்று ....உன் மீதான என் மதிப்பீடுகளோ பிரியங்களோ அன்போ என்றைக்கும் குறையப் போவதில்லை ., அது எனக்கு மிக தீர்க்கமாக தெரியும் .

தீராப் பிரியங்களோடு,
க.உதயகுமார்

அக்கா !

கனகாம்பர மலர்களின் மீது
அவளுக்கு அவ்வளவு காதல்
தான் வளர்க்கும் கனகாம்பரச்  செடியில்
ஒரு பூ குறைந்தாலும்
எதிர்வீட்டு அபிராமியிடம்
சண்டைக்கு நிற்பாள்

கனகாம்பரங்களை
அடுக்கடுக்காக கோர்த்து
சூடிக்கொள்கையில்
தான் இந்த தேசத்தின் ராணி
என்ற தோரணையில் இருப்பாள்

அடங்காப்பிடாரி
என
பெயர் வாங்கினாலும்
இயல்பில்  அப்படியில்லை
பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்புகையில்
அவள் ஜாமெட்ரி பாக்ஸில்
தம்பிக்கென  மீதமிருக்கும்
இலந்தை  பழங்களைப் போல
இனிப்பானவள் 

பாவாடை சட்டை காலங்களில்
தலைதுவட்டும் துண்டில் மாராப்புடுத்தி
"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் ..."
என பாடிக் களிப்பாள்

"பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்..."
என்ற
அவள்  கணீர் குரலில்
பாரதியை தெரிந்திராத
என் மயிர்க் கால்கள்
நேர்நிற்கும்

அவள் வரையும்
மார்கழி மாத கோலங்களைப்  போல
வண்ணங்களாய் சிரிக்கும்
பட்டாம்பூச்சியென
எப்பொழுதும் துள்ளித்திரிபவள்
அப்பாவோடு சண்டையிட்டு
அம்மா காணாமல் போன
ஒரு அதிகாலையில்
சடங்காகி 
அழுதுகொண்டிருந்தாள் ...
காரணங்களேதுமறியாமல்
"அம்மா வந்துடுவாங்க அழாதே .."
என்றவள் கழுத்தை கட்டிக்கொள்கையில்
எனை இறுக அணைத்துக்கொண்டு
ஏன்
உடல் நடுங்கி அழுதாள்
என்பது மட்டும்
இன்னமும் புரியவில்லை



~~க.உதயகுமார்

ஸ்டெல்லா ப்ரூசும் ஆத்மாநாமும்

கவிஞர் தமிழ்நதி "தற்கொலை" பற்றிய ஒரு நிலைதகவலை நேற்று முன்தினம் பதிந்தார் . அதன் பிறகு அவரோடு நடந்த விவாதம் எனக்கு கடந்த  இரவில் ஸ்டெல்லா ப்ரூசையும் ஆத்மாநாமையும்   கொண்டு வந்து அருகே அமர்த்தியது

நான் ஆத்மாநாமை கேள்விப்பட்ட நாள் முதலாய் அவரின் கவிதைகளை வாசிக்க ஆர்வமாக இருந்தேன் . தம்பி அசோக் மூலமாக "ஆத்மாநாம் படைப்புகள் " என்ற புத்தகம் காலச்சுவடில் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு , அந்த புத்தகத்தை கடந்த புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கு என் நண்பர் சத்தியசீலனோடு   சென்றிருந்தேன் . காலச்சுவடு ஸ்டாலில் சென்று கேட்டபொழுது புத்தகம் தீர்ந்துவிட்டது என்று சொல்லி ஏமாற்றத்தை கொடுத்தார்கள் . அதன் பின் ஆத்மாநாம் பற்றிய தேடலில் புத்தக கண்காட்சியில் கிடைத்தது தான் விருட்சம் பதிப்பகத்தின் "என் நண்பர் ஆத்மாநாம் " . இதை எழுதியது எழுத்தாளர் ஸ்டெல்லா ப்ரூஸ் . அதுநாள் வரை எனக்கு ஸ்டெல்லா ப்ரூஸ் என்பவரை பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை . இதை சொல்ல வெட்கப் படுகிறேன் .

அதன் பிறகு ஒரு பகல் கடந்து மாலை நேரத்தில் என் நண்பர் ஆத்மாநாம் புத்தகம் படிக்கத் துவங்கினேன் .  அந்த புத்தகம் ஸ்டெல்லா ப்ரூஸ் எழுதிய  கட்டுரை தொகுப்பு . அவையெல்லாம் அழகியசிங்கரின் நவீன விருட்சத்துக்கு எழுதிய கட்டுரைகள் . அந்த புத்தகத்தில் ஒரு கட்டுரை தான் "என் நண்பர் ஆத்மாநாம் " . அந்த புத்தகம் முழுவதுமாக படித்து முடித்துவிட்டு மனம் ஆத்மாநாமை விட்டுவிட்டது , ஸ்டெல்லா ப்ரூசை கட்டிபிடித்துக் கொண்டு கதறியது . அந்த மென்மையான மனிதரை , அவர் மனைவியின் மரணத்துக் பின் அவர் எதிர்கொண்ட துயரான வாழ்வை , அதன் தொடர்ச்சியாக அவர் தேடி கொண்ட முடிவை என்னால் எளிதாக கடக்க முடியவில்லை . இடி விழுந்த நிலம் போல மனம் தொடர்ந்து அதிர்ந்து அழுதது . வலிந்து திணிக்கப்படாத உணர்சிகளோடு ஸ்டெல்லா ப்ரூசின் கட்டுரைகள் மனதில் நிரந்தர சித்திரமாக  ஸ்டெல்லா ப்ரூசை வரைந்துவிட்டது .

பின் மனம் கனத்து கசிந்து கொண்டிருந்த ஒரு இரவில் ஸ்டெல்லா ப்ரூசின் நண்பரும் , அவரின் கட்டுரைகளை தொகுத்து "என் நண்பர் ஆத்மாநாம்" என்ற புத்தகமாக வெளியிட்டவருமான அழகியசிங்கர் அய்யாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன் . அவர் எனக்கு எழுதிய பதிலில் ஸ்டெல்லா ப்ரூசின் முடிவு பற்றி நிரம்ப வருத்தியவர் , கூடுதலாக இன்னொரு வரியை சொல்லி  இருந்தார் . "Stella Bruce had done a foolish act in his life like Aatmanam." என்று ...எனக்கு இந்த வரி மனசில் இன்னும் காயங்களை ஏற்படுத்தியது .

அதன் பிறகு தம்பி "அசோக் ராமராஜோடு" , அலுவலகத்தில் கிட்டத் தட்ட  மூன்று  மாதகாலம் நான் அமெரிக்கா கிளம்புகிற வரையில் தினமும் நாங்கள் ஸ்டெல்லா ப்ரூசை பற்றியும் ஆத்மாநாமை  பற்றியும் பேசாதா நாளே இல்லை எனலாம் . அசோக் தம்பி கூட , "அண்ணா...... தற்கொலை பற்றிய  உங்களின் தொடர்ந்த பேச்சு, ஸ்டெல்லா ப்ரூஸ்   ஆத்மாநாம்  பற்றிய உங்களின் வாசிப்பினூடான  நினைவுமீட்டல்கள்  எனக்கு அச்சம் தருகிறது" என்று கூட ஒரு கட்டத்தில் சொல்லத் தொடங்கினான் .

அவர்களின் தற்கொலைகளை நியாயப் படுத்த முடியாது ...அதற்கு நான் முயலவும் இல்லை . ஆனால் அவர்களின் வாழ்வை வாழ்ந்து பார்க்காத நாம் அவர்களின் முடிவை எப்படி விமர்சிக்க முடியும் ? போகிறபோக்கில் முட்டாள் தனமான முடிவு என சொல்வது எப்படி சரியாகும் ...? ஆத்மாநாமின் தற்கொலையும் ஸ்டெல்லா ப்ரூசின் தற்கொலையும் இந்த சமூகத்தின் மீதான புகாரில்லையா ..?

மனச்சிதைவுக்கு உள்ளாகி அருமையான கவிஞனும்  மனுஷனுமான ஆத்மாநாம் ஏன் கிணற்றுக்குள் விழுந்துபோனான் என்பது உங்கள் யாருக்கேனும் தெரியுமா ..? எனக்கும் தெரியாது . ஸ்டெல்லா ப்ரூசிர்க்குத் தான் தெரியும் . நமக்கு காரணங்களை தெரியாது. ஆத்மாநாமின்  மனதை எது சிதைத்தது என்று தெரியாது . ஆத்மாநாமை அழுத்திய  வலி எது என்று தெரியாது . ஆனால் "முட்டாள் தனமாக கிணற்றில் விழுந்தார் " என்று மட்டும் சொல்ல கிளம்பிவிடுவோம் . அடுத்தவருக்கு உபதேசிப்பது எப்போதும் நமக்கு மிக சுலபம் . சிறுநீர் கழிப்பது போல போகிறபோக்கில் எப்போதும் நாம் பிறருக்காக அறிவுரைகள் வைத்திருக்கிறோம் . ஆனால் உதவுகிற கரங்கள் , நிபந்தனையற்ற அன்பை செலுத்தும் மனம் நம்மிடம் இருக்கிறதா ...? கிடையாது ..."என்ன காரணமா  இருந்தாலும்  தற்கொலை முடிவா ?" என்று தான் நமக்கு வாய் வரும் . ஏன்...ஸ்டெல்லா ப்ரூசே ஆத்மாநாமின் தற்கொலையை அப்படி சொல்லி இருக்கிறார் . ஆத்மானம் ஸ்டெல்லா ப்ரூசிர்க்கு நெருங்கிய நண்பர் . நமக்குதான் அவர் ஆத்மாநாம் ஆனால் ஸ்டெல்லா ப்ரூசிர்க்கு அவர் மதுசூதனன் . அதே போல நமக்குதான் அவர் ஸ்டெல்லா ப்ரூஸ் , ஆனால் ஆத்மாநாமுக்கு அவர் ராம் மோகன் .

ஆத்மாநாமுக்கு ஸ்டெல்லா ப்ரூசை மிக பிடிக்கும் . அன்போடு பெரிய மதிப்பும் வைத்திருந்திருக்கிறார்  . ஸ்டெல்லா ப்ரூஸ் ஹேமாவை திருமணம் செய்துகொள்ள தேர்ந்தெடுத்த தேதி எது தெரியுமா ஜனவரி 18 , அது ஆத்மாநாமின் பிறந்த தினம் . அவர்கள் இருவருக்குமிடையே அத்தனை நேர்த்தியான ஆத்மார்த்தமான நட்பு இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட நண்பரான ஆத்மாநாம்  மனச்சிதைவு அடைந்து மருத்துவமனையில் இருக்கும்பொழுது ஸ்டெல்லா ப்ரூஸ் பார்க்க செல்கிறார் . அவரை பார்த்த மாத்திரத்தில் ஆத்மாநாம் குதிக்கிறார் . இரும்புக் கம்பிகளால் ஆன கதவுகளுக்கு அந்தப்புறம் இருந்துகொண்டு அங்கிருக்கும் ஊழியரிடம் "நான் சொன்னேன் இல்ல என்ன பார்க்க என் நண்பர் வருவார்ன்னு , வந்திருக்கார்ப்பார் கதவ திற ..." . அந்த காட்சியை பார்த்த மாத்திரத்தில் ஸ்டெல்லா ப்ரூஸ் வாய் பொத்திக் கதறி அழுததும் , அதை பார்த்து எனக்கு ஒண்ணுமில்ல ராம்மோகன் நான் நல்லா இருக்கேன் , அழாதீங்க என்று ஆத்மாநாம் கதறிய இடத்தையும் புத்தகத்தில் கடந்து வருகிற பொழுது எனக்கிருந்த மன நிலை உடைந்தழுதது ..நான் இந்த இடத்தை அசோக் தம்பியோடு ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கையில் அசோக் தம்பி கண்கள் கசிந்ததை நான் கவனித்திருக்கிறேன் . வாசிக்கிற நமக்கு ஏற்படுகிற அதிர்வு , ஆத்மாநாம் இறந்த பொழுது ஸ்டெல்லா ப்ரூசிர்க்கு எப்படி இருந்திருக்கும் , தன் பன்னிரண்டு கால நண்பர் இல்லாமல் போனபொழுது ஸ்டெல்லா ப்ரூசிர்க்கு இருந்த துயரம் எத்தனை அடர்த்தியாக இருந்திருக்கும் ...

ஆத்மாநாம் வாழ்வில் இருந்து விடைபெற்றது ஸ்டெல்லா ப்ரூசிர்க்கு மிகுந்த வலியையும் சமாதனம் செய்ய முடியாத துயரையும் கொண்டு வந்திருக்கிறது . அவரின் கட்டுரையில் நாம் இதை புரிந்து கொள்ள முடிகிறது . "ஆத்மாநாம் என்ற மென்மையான நண்பன் திரும்ப திரும்ப மனச்சிதைவின் தாக்குதல்களுக்கும் தீவிர சிகிச்சைகளுக்கும் ஆளாக நேர்ந்தது சமாதானப்படுத்திக் கொள்ளவே முடியாத கொடிய அவலம்தான். மனநல மருத்துவம் ஆத்மாநாம் காலடியில் தோற்று மண்டியிட்டு விட்டது. ஆத்மாநாமை அது மீட்கவில்லை. " என்று வருந்தி கண்ணீர் சிந்துகிறார் . அவரின் தற்கொலையை பற்றி சொல்கிற பொழுது  "தற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிற ஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு அலைந்தாக நேரிடும். அவை தாங்க முடியாத குரூரமானவை. "  என்று எழுதிய ஸ்டெல்லா ப்ரூஸ் ஆத்மாநாம் இறந்து கிட்ட தட்ட 24 ஆண்டுகள் கழித்து தானும் தற்கொலை செய்துகொண்டாரே . ....எத்தனை துயர் மிகுந்த காலத்தின் கொடிய விசித்திரம் இது.  ஸ்டெல்லா ப்ரூசிர்க்கு ஆத்மாநாம் இறந்த பொழுது தெரிந்திருக்கிறது தற்கொலை எல்லாவற்றிற்கும் ஆன முடிவில்லை , மேலும் தற்கொலை செய்துகொள்கிற உடலின் ஆத்மா சாந்தியடையாது என்று ...பின் ஏன் ஒரு சபிக்கப் பட்ட நாளில் தன் மனைவியின் சேலையில் தூக்கு போட்டு இறந்தார் ..? எந்த வலியையும் எந்த வாழ்வையும் நாம் கடக்காத வரையில் முழுமையாக அதை புரிந்துகொள்ள முடியவில்லை . என்னுடைய வலி இன்னதென்று   நீங்கள் கடக்காதவரை அது உங்களுக்கு வெறும் செய்தி தான் ...

நாற்பத்தி ஏழு வயதில் தான் ஸ்டெல்லா ப்ரூஸ் திருமணம் செய்துகொண்டார் . தன் எழுத்தை விரும்பி காதலித்த வாசகியான ஹேமாம்புஜம் என்ற பெண்ணை . அந்த நாற்ப்பத்தி ஏழு வயது வரை ஸ்டெல்லா ப்ரூஸ் பார்த்திராத தனிமையா ..? ஹேமாவை  திருமணம் செய்துகொள்வதற்கு முன் சென்னையில் ஆண்கள் தங்குகிற விடுதி அறையிலேயே தன் வாழ்வின் பெரும்பாலான நாட்களை தனியாகவே வாழ்ந்து தீர்த்தவர் . எபோதாவது அந்த தனிமையில் ஆத்மாநாம் என்ற மனிதர் வந்து போயிருக்கிறார் . அப்போதெல்லாம் அந்த தனிமையை பொறுத்துக் கொண்டவர் , அதை கடந்து வாழத் தெரிந்தவர் ஹேமா இறந்த பிறகு அந்த தனிமையை சுமக்கவே முடியாமல் ஹேமாவுக்கு மிக பிடித்த புடவையை எடுத்து தூக்குப் போட்டுக் கொண்டாரே , ஹேமா இல்லாத வாழ்வின் வெற்றிடத்தை ஸ்டெல்லா ப்ரூசின் வலியை  நாமெப்படி புரிந்து கொள்ள முடியும் .?

ஸ்டெல்லா ப்ரூஸ் , தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் உலகத்தின் வாசிப்புக்கு எழுதி வைத்துவிட்டுப் போன கடிதம் படித்திருக்கிறீர்களா ? அந்த கடிதத்தில் அவரே தன் தற்கொலைக்கான காரணத்தை சொல்கிறார்

"ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கை சூனியமாக இருக்கிறது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. தனிமைச் சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது. எனவே நான் ஹேமாவிடம் செல்கிறேன். மரணத்தின் கதவுகளைத் திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும் போது மரண விடுதலை பெறுகிறேன்.”

இது கடிதத்தின் ஒரு துளி . எனக்கு இந்த கடிதம் தந்த வலியும் வேதனையும் அழுகையும் கொஞ்சமல்ல ...

சிலர் ஸ்டெல்லா  ப்ரூஸ் இறக்க அவரின் வறுமையும் காரணம் என்று தொடர்ந்து சிலர் சொல்கிறார்கள் எழுதுகிறார்கள் . ஆனால் அவரின் நெருங்கிய நண்பரான அழகிய சிங்கர் இதை மறுக்கிறார் . அவர் வறுமையில் இல்லை . அவரிடம் போதிய பணம் நகை இருந்தது . தன்னுடைய மனைவியின் நகைகள் ஏராளமானவற்றை தற்கொலை செய்து கொள்வதற்கு கொஞ்ச நாள் முன்பு   தன் நண்பர் ஒருவரிடத்தில் கொடுத்து திருப்பதி உண்டியலில் போடச் சொல்லி இருக்கிறார் . எனவே அவர் இறந்தது வறுமையில் இல்லை , இதை அவரின் கடிதமும் உறுதிப் படுத்துகிறது . பொல்லாத் தனிமை தனிமை தனிமை இது மட்டுமே அவரை நெருக்கிப் பிடித்து தூக்கில் தொங்கவிட்டிருக்கிறது .

ஆத்மாநாமை போலவே ஸ்டெல்லா ப்ரூசும் மென்மையான  மனம் கொண்ட மனிதர் . ராம் மோகன் என்ற தன் பெயரை அவர் ஏன் ஸ்டெல்லா ப்ரூஸ் என்று மாற்றி வைத்துக் கொண்டார் தெரியுமா . அவருக்கு பழக்கமான ஒரு தோழியின் தங்கையின் பெயர் தான்  "ஸ்டெல்லா ப்ரூஸ்" . சென்னை கிண்டி அருகே அந்தப் பெண்ணை ஒரு கும்பல் வன்புணர்ந்து பின் அந்தப் பெண் இறந்தும் போனார் . அந்தப் பெண்ணின் நினைவாகத் தான் தனக்கு அந்தப் பெயரை சூட்டிக் கொண்டார் .

நான் "என் நண்பர் ஆத்மாநாம் " படித்த பிறகு அடிக்கடி ஸ்டெல்லா ப்ரூசின் ஆத்மநாமின் நினைவுகளோடு சுற்றி வந்தேன் , அவர்களின் புகைப்படங்கள் அதிகம் இணையத்தில் இல்லை . ஹேமா அம்மையாரோடு ஸ்டெல்லா ப்ரூஸ் நிற்கும் ஒரு புகைப்படமும் , ஆத்மநாமின் கருப்பு வெள்ளை புகைப்படமும் தான் இருக்கிறது . இவைகளை கணிணியில் வைத்துக் கொண்டு அப்படியே வெறித்துக் கொண்டிருப்பேன் . ஸ்டெல்லா எப்படியான செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் . அவரின் பால்ய நாட்களை அவரே விவரிக்க படிக்கும்போது , அபப்டியான ஒருவர் காலத்தின் கரங்களால் எப்படி எல்லாம் பந்தாடப் பட்டு  இல்லாமல் போய்விட்டாரே என்ற அழுத்தம் எனக்கு மனசிக்களை உண்டு பண்ணியது , அன்றைய நாட்களில் தம்பி அசோக்  தான் என்னோடு தொடர்ந்து பேசி என்னை  அதில் இருந்து வெளிய இழுக்க முயற்சித்தான் ....

ஆத்மாநாம் , ஸ்டெல்லா ப்ரூஸ் என்ற இரண்டு படைப்பாளிகளின் மரணத்தை  நியாயப்படுத்த வில்லை , அதே சமயத்தில் "முட்டாள்கள், வாழ்வை எதிர்கொள்ள திராணி இல்லாதவர்கள்  தற்கொலை செய்துகொண்டார்கள் " என்று அவர்களின் கல்லறையை நான் அசுத்தப் படுத்தவும் விரும்பவில்லை .

"என் நண்பர் ஆத்மாநாம் " என்ற கட்டுரையை ஸ்டெல்லா ப்ரூஸ் பின்வருமாறு முடித்திருந்தார் . " ஆத்மாநாமின் கவிதை பரவெளி வெறும் வார்த்தை இலக்கியப் புலமையில் இயக்கப்பட்ட மொழிவாரியம் இல்லை. அதனால்தான் 1979-ன் இறுதியில் மனச்சிதைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொதிநிலையிலும் அவரின் கவிதா பரவெளி ஊசிமுனையும் சேதப்படாமல் சமுத்திரமாய்நிறைவு தவறாமல் அப்படியே விரிந்து கிடந்தது. மருத்துவமனைச்சிகிச்சையினூடேயும் ஆத்மாநாமின் பேனா கவிதைகளை எழுதிற்று. இதில் மனதை கனக்க வைக்கும் துக்கம் அந்த மகா கவிஞனின் கை அவனுடைய வாழ்க்கையை எழுதிக்கொள்ள முடியாமல் அவனின் மரணத்தை எழுதிக்கொண்டதுதான்…”

தன்னுடைய வாழ்வின் முடிவை ஸ்டெல்லாவின் கைகளும் தற்கொலை என எழுதிக்கொண்டதை  "வாழத்தெரியாதவர் " என்ற ஈரமற்ற வார்த்தைகளில் என்னால் கடந்து போகமுடியாது.


மெர்லின் மன்றோ மரணத்தை பற்றி நான் ஒரு பதிவெழுதி இருந்த பொழுது என்னிடம் ஒரு நண்பர் சொன்னார் . "அவ கொழுப்பெடுத்தவ , ஊர் மேஞ்சி மேஞ்சி செத்துப் போனா , இதுக்குப் போய் நீ வேல மெனக்கிட்டு உக்காந்து பீல் பண்ணிக்கிட்டு இருக்கியே .." அவரை கடுமையாக திட்டிவிட்டு பிறகு கொஞ்ச நாள் அவரோடு பேசவே இல்லை . மெர்லின் வெறும் சதைப் பிண்டமாக மட்டுமே தெரிந்தாள் அவளின் தற்கொலையும் பலவாறாக விமர்சிக்கப் பட்டது . அவருக்குள் இருந்த எழுத்தாளரை இசைத்திறமையை இந்த உலகம் அடையாளம் கண்டிருக்கிறதா ?ஆனால் அவளின் உள்ளத்துயரை நம் யாருக்காவது தெரியுமா...ஆனால் மிக கொச்சையாக விமர்சிக்க கிளம்பிவிடுவோம் . வளர்த்த தந்தையாலேயே வன்புணரப்படுவது  அவ்வளவு எளிதில் மறக்க முடிகிற துயரா ...? காலம் தான் எத்தனை படைப்பாளிகளை நெருக்கிப் பிடித்து தற்கொலை முனையில் நிறுத்தி இருக்கிறது  .... காலத்திற்கு ஈவு இரக்கங்கள் இருப்பதில்லை .

கிணற்றில் குதிப்பதற்கு முன் தன்னுடைய ஆடைகளை எல்லாம் கழற்றி மடித்து வைத்துவிட்டு உள்ளாடையோடு கிணற்றில் குத்தித்த ஆத்மாநாமையும்    , காலையில் எழுந்து குளித்து சாமிகும்பிட்டு தன் மனைவிக்கு பிடித்த அவரின் சேலையை எடுத்து தூக்கு போட்டு தன் வாழ்வை அடங்கச்செய்துகொண்ட   ஸ்டெல்லாவையும்  நாம் புரிந்துகொள்ள முடியாது ..எனவே அவர்களின் மரணத்தை விமர்சிக்க நமக்கு உரிமையோ அருகதையோ இல்லை ... துயர் படுகிறவனுக்கு தனிமையில் உழல்கிறவனுக்கு , அன்பற்று மனசிதைவடைகிறவனுக்கு இந்த உலகம் அப்படி ஒன்றும் குரூரங்களற்ற புனிதமான இடமல்ல ...


வலிக்க வலிக்க வாழ்தல் கொடுந்துயரம் , பெருஞ்சாபம்  . அப்படி வாழும் உள்ளத்தின் அதிர்வுகள் பிற செவிகளுக்கு கேட்பதில்லை .என்னவோ இன்று இரவு ஸ்டெல்லா ப்ரூசும் ஆத்மாநாமும்  என் அறையில் இருப்பதை போல தோன்றுகிறது ...

 ~~க.உதயகுமார்